கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் பூட்டுகள், பாரீசின் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் நடைபாலத்தில்
காதல் பூட்டு (ஆங்கிலம்: Love lock அல்லது Love padlock) என்பது காதலர்கள் தங்களுக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பூட்டில் தங்கள் பெயரை எழுதி அதை பாலம், வேலி, வாயில், போன்ற பொது இடத்தில் பூட்டுவது ஆகும் [1] பொதுவாகப் பெயர்கள் அல்லது முதலெழுத்துகளை பூட்டில் எழுதிவிட்டு அப்பூட்டை பொதுஇடத்தில் பூட்டியபின் அதன் திறவுகோலை எங்காவது எறிந்துவிடுவர். பிறகு அந்தத் திறவுகோலைக் கண்டுபிடித்தால்தான் பூட்டைத் திறக்க முடியும் இதனால் தங்கள் காதல் உடையாது என்பது ஒரு நம்பிக்கை ஆகும். 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து, இந்த காதல் பூட்டுகள் பழக்கம் உலகம் முழுவதிலும் அதிகரித்தது.
இந்த காதல் பூட்டுகளை பாரிஸ் நகரில் உள்ள மக்கள் நடைபாலம் பான்ட் டெஸ்ஆர்ட்ஸ் இல் காணலாம். இந்தப் பாலம் 1802-இல் கட்டப்பட்டது. இங்கு காதலர் தினத்தன்று, புதிதுபுதிதாக மேலும் பல பூட்டுகளை காணலாம். இதன் அடியில் சென் நதி ஓடுகிறது. காதலர்கள் தங்கள் பெயர்களைப் பூட்டில் பதிவு செய்து, பூட்டி திறவுகோலை ஆற்றினுள் போட்டு விடுவார்கள்.[2]
ரோம் நகரத்தில் 'பான்டிமில்வியோ பாலம் உள்ளது. இத்தாலிய எழுத்தாளர் பெட்ரிகோ மோசியா, தன்னுடைய புத்தகத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த பாலத்திலும் பக்கவாட்டில் காதல் பூட்டுகள் மாட்டப்பட்டிருப்பதைக் காண முடியும்.[3][4]
செர்பியாவில் உர்ரிஜாக்காபன்ஜா என்ற இடத்தில் ஒரு பாதசாரி பாலம் உள்ளது. இதனை மோஸ்ட்லிஜுபலி என அழைப்பர். இதிலும் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த பூட்டுகளை பக்கவாட்டு சுவர்களில் பூட்டி வைத்திருப்பர்.
தைவானில் ரயில் செல்லும் பாதைக்கு மேலே கட்டப்பட்டுள்ள பாலத்தில், காதல் பூட்டுகள் மாட்டப்படுகின்றன. ரயில்கள் அடியில் கடந்து செல்லும்போது எழும் காந்தவீச்சு பூட்டையும் காதலையும் என்றென்றும் மேலும் இறுக்கமாக வைத்துக்கொள்ளும் என நம்பிக்கை.[5]
உருகுவே நாட்டில் விரான்ஜி என்ற இடத்தில் செயற்கை நீரூற்றை அமைத்துள்ளனர். இதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வளைந்த கம்பிவேலியில் பூட்டுகள் மாட்டப்பட்டுள்ளன. இங்கு பூட்டை மாட்டி வைத்து விட்டுச்சென்றால், மாட்டியவர்கள் மீண்டும் நிச்சயம் காதலர்களாக அங்கு வருவார்கள் என்றும், அவர்கள் காதல் என்றென்றும் நீடிக்கும் என்று நம்புகின்றனர்.