கூகிள் தொடு வில்லை
கூகிள் தொடு வில்லை எனப்படுவது கூகிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப விருத்திகளுடன் கூடிய ஒரு தொடு வில்லையாகும். உலகின் 19 நபர்களில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதான நீரிழிவு நோயினைக் கண்காணிக்க இந்த தொடு வில்லையைப் பயன்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது[1].
உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அளவிடப் குருதி, கண்ணீர் பல்வேறு உடற்திரவங்கள் பயன்படுகின்றன. வைத்தியர்கள் தற்போது கண்ணீரின் மூலம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அளவிட முயல்கின்றனர். ஆயினும் இந்த முறை மிகவும் கடினமானதாகும். இதற்கான முக்கியமான காரணம், கண்ணீர் இலகுவில் குருதிபோல் கண்ணில் இருந்து நினைத்த நேரத்தில் எடுக்க முடியாமையே. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவே கூகிள் தொடு வில்லை உள்ளமைந்த இலத்திரனியல் சுற்றுக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வில்லையில் உள்ள இலத்திரனியல் சுற்றுக்கள் தலைமுடியைவிட மெல்லியவை என்பதைக் குறிப்பிடவேண்டும்.
இந்த கூகிள் தொடு வில்லை மூலம் ஒரு செக்கனுக்கு ஒருதடவை உடலின் சர்க்கரை நிலையை கம்பியில்லாத் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கக்கூடியதாக உள்ளமை சிறப்பாகும். ஆயினும் இந்த வில்லைகள் இன்னும் ஆரம்பநிலையிலேயே உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.