வயநாட்டுச் சிரிப்பான்
வயநாட்டுச் சிரிப்பான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தெரோரிகினசு |
இனம்: | தெ. தெலெசெர்தி |
இருசொற் பெயரீடு | |
தெரோரிகினசு தெலெசெர்தி ஜெர்டான், 1839 | |
வேறு பெயர்கள் | |
தெரோரிகினசு தெலெசெர்தி |
வயநாட்டுச் சிரிப்பான் (Wayanad laughingthrush) என்பது லெயோதிரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த சிரிக்கும் பறவையாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கோவாவின் தெற்கு பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.
பெயர்கள்
தமிழில் :வயநாட்டுச் சிரிப்பான்
ஆங்கிலப்பெயர் :Wynaad Laughingthrush
அறிவியல் பெயர் :தெரோரிகினசு தெலெசெர்தி[2]
வகைப்பாட்டியல்
1839ஆம் ஆண்டில் இங்கிலாந்து மருத்துவரும் இயற்கை ஆர்வலருமான தாமஸ் ஜெர்டன் என்பவரால் வயநாடு சிரிப்பான் விவரிக்கப்பட்டது. இவர் இதற்கு குரேடிரோபசு தெலெசெர்தி என இருசொல் பெயரிட்டார். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோத்தகிரிக்கு அருகிலிருந்து மாதிரிகளை சேகரித்த பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் அடோல்ப் தெலெசெர்ட்டைக் கௌரவிப்பதற்காக சிற்றினப் பெயரிடப்பட்டது.[3] பிரெஞ்சு பறவையியலாளர் பிரடெரிக் டி லாப்ரெஸ்னேயின் மற்றொரு விளக்கம் 1840-ல் வெளியிடப்பட்டது.[4]
இந்த சிற்றினத்தின் பேரினம் காலப்போக்கில் மாற்றபட்டது மற்றும் கடந்த காலத்தில் டிரையோனாசுடசு மற்றும் கருலாக்சு கீழ் வைக்கப்பட்டது.[5][6][7] 2012ஆம் ஆண்டின் இன உறவுமுறை ஆய்வின் மூலம், ஐந்தோசின்க்லா பேரினத்தின் கீழ் கர்ருலாக்சில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற விரிவான மூலக்கூறு இன உறவுமுறை ஆய்வின்படி காரூலக்சிலிருந்து தெரோரிகினசு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[8][9]
உடலமைப்பு
இதன் உடல் நீளம் சுமார் 23 செ. மீ. ஆகும். உடலின் மேற்பகுதி சிவந்த பழுப்பு நிறத்திலும் அடிப்பகுதி சாம்பலும் பழுப்புமாகக் காணப்படும். தலை உச்சி, கழுத்தின் பக்கங்கள் மேல் முதுகு ஆகியன சிலேட் சாம்பல் நிறத்திலும், கண்கள் வழியாக அகன்ற செல்லும் பட்டைக்கோடு காதுவரை உள்ளது.
காணப்படும் பகுதிகள்
கோவாவின் தெற்கே வயநாடு பகுதிகளில் இவை காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான காடுகள் ஆகும். தென்னிந்தியாவின் சமவெளிகளில் இருந்து உயரமான மலைகள் வரை இவற்றின் இனப்பெருக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.[10][11] கோவா, கேஸில் ராக், கார்வார், தண்டேலி, பட்கல் அருகே இந்த சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் இதன் எல்லையின் வடக்குப் பகுதியில் அரிதானது. இது நீலகிரியில் பிரம்மகிரி[12] மற்றும் தெற்கே அசாம்பு மலைகளிலும் காணப்படுகின்றன.[13]
ஒரு பறவை கலகலப்பாக கத்தத் தொடங்கியவுடன் அடுத்தது அதற்கு அடுத்தது என ஒவ்வொன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கிப் பின் கூட்டம் முழுதும் சிரிப்பதுபோலக் கெக்கலிக்கும். அபூர்வமாக நாற்பது வரையான பறவைகளைக் கூடக் குழுவாகக் காணலாம்.
உணவு
ஆறுமுதல் பதினைந்து வரையான குழுவாகத் தரையில் உதிர்ந்து அழுகிய இலைகளைப் புரட்டிப் புழுபூச்சிகளை இரையாகத் தேடித் தின்னும். கொட்டைகளையும் சிறு பழங்களையும் உட்கொள்வதும் உண்டு. சிறு மரங்களில் தாழ்வாக ஆறேழு பறவைகள் அருகருகே நெருக்கமாக அமர்ந்து ஒன்றை ஒன்று இறகுகளைக் கோதிக் கொடுத்துக் கொள்ளும்.[14]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/Illustrations_of_Indian_ornithology_%28Plate_XIII%29_%286418322803%29.jpg/220px-Illustrations_of_Indian_ornithology_%28Plate_XIII%29_%286418322803%29.jpg)
இனப்பெருக்கம்
ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை புல், இலை முதலியவற்றால் கோப்பை வடிவமான உருண்டையான கூடமைத்து, அதில் 2 அல்லது 3 முட்டைகள் வரை இடும்.[15]