நவகாளி மாவட்டம்
நவகாளி மாவட்டம் (Noakhali district) (வங்காள மொழி: নোয়াখালী জিলা)[1] தெற்காசியாவின் வங்காளதேசத்தின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். வங்கதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. [2]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/BD_Noakhali_District_locator_map.svg/220px-BD_Noakhali_District_locator_map.svg.png)
நிலவியல்
4202 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட[3] நவகாளி மாவட்டத்தின் வடக்கில் கொமில்லா மாவட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கில் பெனி மாவட்டம் மற்றும் சிட்டகாங் மாவட்டமும், மேற்கில் லெட்சுமிபூர் மாவட்டம் மற்றும் போலா மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.
மெகனா அற்றின் வடிநிலத்தின், வங்காள விரிகுடாவின் கடற்கரை கொண்ட இம்மாவட்டம் தொடர்ந்து கடல் அலைகளாலும், புயல் மற்றும் சூறாவளிக் காற்றாலும் ஆண்டு தோறும் பேரிடரை எதிர்கொள்கிறது.
மாவட்ட நிர்வாகம்
நவகாளி மாவட்டம் ஒன்பது துணை மாவட்டங்கள், எட்டு நகராட்சிகள், 91 ஊராட்சி ஒன்றியங்கள், 937 கிராமங்களைக் கொண்டுள்ளது.
துணை மாவட்டங்கள்
நவகாளி மாவட்டம் நவகாளி சதர், பேகம்கஞ்ச், சத்கில், கம்பெனிகஞ்ச், சென்பாக், ஹாத்தியா, கபீர்ஹத், சோனைமுரி மற்றும் சுபோர்னோ சார் என ஒன்பது துணை மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
நகராட்சிகள்
இம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்திற்கு ஒன்பது தொகுதிகள் வீதம் எட்டு நகராட்சிகளைக் கொண்டுள்ளது. அவைகள்; நவகாளி நகராட்சி, சௌமுஹானி நகராட்சி, சத்கில் நகராட்சி, போசுர்ஹாத் நகராட்சி, சென்பாக் நகராட்சி, கபீர்ஹாத் நகராட்சி மற்றும் சோனைமுரி நகராட்சிகள் ஆகும்.
நாடாளுமன்றத் தொகுதிகள்
நவகாளி மாவட்டம் ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நவகாளி மாவட்டத்தின் மக்கள் தொகை 31,08,083 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 14,85,169 ஆகவும், பெண்கள் 16,22,914 ஆகவும் உள்ளனர். [5] பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 92 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 843 நபர்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 51.30% ஆக உள்ளது. நவகாளி மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 3800 ஆகும்.
பொருளாதாரம்
நவகாளி மாவட்டத்தில் மெக்னா ஆறு, டாகாதியா ஆறு, பெனி ஆறு, முகுரி ஆறு, செலொனெஹா ஆறு, பாபானிகஞ்ச் முதலிய வற்றாத ஆறுகள் பாய்வதால், நெல், சணல், கோதுமை, தென்னை, வெற்றிலை, கடலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, எண்ணெய்வித்துக்கள், பயறுகள் பயிரிடப்படுகிறது.[6]
சமயங்கள்
நவகாளி மாவட்டத்தில் இசுலாமியர் 95.42% ஆகவும், இந்துக்கள் 4.52% ஆகவும், கிறித்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் 0.05% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் 4159 பள்ளிவாசல்கள், 239 இந்துக் கோயில்கள், 2 பௌத்த விகாரங்கள், 2 கிறித்தவ தேவாலயங்கள் உள்ளது.
கல்வி
நவகாளி மாவட்டத்தில் 289 உயர்நிலைப் பள்ளிகள், 161 மதராசாக்கள், ஐந்து தொழில் நுட்ப பயிற்சி மையங்கள், 35 கல்லூரிகள், ஒரு மருத்துவ உதவியாளர் பயிற்சிப் பள்ளி, ஒரு மருத்துவக் கல்லூரி, ஒரு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஒரு வேளாண்மைப் பயிற்சி நிறுவனம், ஒரு நெசவுப் பொறியியல் கல்லூரியும் உள்ளது.
தட்ப வெப்பம்
நவகாளி மாவட்டத்தின் சராசரி தட்ப வெப்பம் 14.4 முதல் 33.6° செல்சியஸ் வரை உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 3,302 மில்லி மீட்டராகும்.
முக்கிய நிகழ்வுகள்
நவகாளிப் படுகொலைகள்
1946-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த அறைக்கூவலையடுத்து கிழக்கு வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நவகாளி மாவட்டம் மற்றும் சிட்டகாங் மாவட்டங்களில் இந்து சமயத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. [7][8] [9] மகாத்மா காந்தி நவகாளி படுகொலைகளைத் தடுத்த நிறுத்த நவகாளி மாவட்டத்தின் அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[10]