மாரான்
மாரான் (மலாய்: Maran; ஆங்கிலம்: Maran; சீனம்: 马兰; ஜாவி: مارن); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், மாரான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். தெமர்லோ, குவாந்தான் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாகவும் இந்த நகரத்திற்குச் செல்லலாம்.[1]
மாரான் | |
---|---|
Maran | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 3°35′N 102°46′E / 3.583°N 102.767°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாநிலம் | மாரான் மாவட்டம் |
நகராண்மைக் கழகம் | 2022 |
அரசு | |
• நிர்வாகம் | மாரான் மாவட்ட மன்றம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,11,056 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 26500 |
மலேசியத் தொலைபேசி எண் | +609 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | C |
மாரான் நகரின் புறநகர்ப் பகுதியில் ஜெங்கா, பண்டார் துன் அப்துல் ரசாக் (Bandar Tun Abdul Razak) அமைந்துள்ளது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களின் நினைவாக ஒரு நகரம் இங்கு உருவாக்கப்பட்டது.
மத்திய நில மேம்பாட்டு ஆணையத்தின் (Federal Land Development Authority) கீழ், ஜெங்கா நில மேம்பாட்டுத் திட்டம் (FELDA Jengka) அமல்படுத்தப்பட்டு உள்ளது. 36 ரப்பர், எண்ணெய்ப்பனைத் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. இதனை ஜெங்கா முக்கோணம் (Jengka Triangle) என்று அழைக்கிறார்கள்.
பொருளாதாரம்
மாரானின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் விவசாயம் சார்ந்தவை ஆகும். மலேசியாவிலேயே மிகப் பெரிய பெல்டா நிலக் குடியேற்றத் திட்டம் இங்குதான் உள்ளது. அதனால் பெரும்பாலும் எண்ணெய்ப்பனை உற்பத்தியே முக்கியமான விவசாயமாக உள்ளது.
போக்குவரத்து
மாரானில் இரயில் சேவைகள் இல்லை. ரேபிட் குவாந்தான் (rapid Kuantan) பேருந்து சேவையும் இன்னும் இந்த நகருக்கு கிடைக்கவில்லை. சிட்டி லைனர் (Cityliner) பேருந்துகள் மாரான் நகரைக் குவாந்தான் மற்றும் ஜெராண்டுட் நகரங்களுடன் இணைக்கின்றன.
மாரானுக்கு காரில் செல்வது மிகவும் எளிதானது. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை மாரான் நகருக்கு இரண்டு வழிகளை வழங்குகிறது.
பழைய கோலாலம்பூர் - குவாந்தான் கூட்டரசு சாலை மாரான் நகரத்தின் வழியாகச் செல்கிறது. கூட்டரசு சாலை 64 (மலேசியா) மாரானை ஜெராண்டுட் நகருடன் இணைக்கிறது.
பகாங் மாநிலத்தின் அரச நகரான பெக்கான் நகரத்தை, கூட்டரசு சாலை 82 (மலேசியா) இணைக்கின்றது.
மாரான் மரத்தாண்டவர் ஆலயம்
மாரான் மரத்தாண்டவர் ஆலயம், மாரானில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கோயில் எண்ணெய்ப்பனை மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் 1891-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]
இந்தப் பழைமையான கோயில் மலேசியாவின் மிகப்பெரிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 400,000 பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள்.[3]
அரசாங்க ஊழியர்களால் உருவாக்கப்பட்டது
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிழக்குப் பகுதியில் குவாந்தான் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் இடது புறத்தில், முதல் ஆலயமாக அமைந்து இருக்கிறது,
1890-ஆம் ஆண்டுகளில், அன்றைய அரசாங்க ஊழியர்களால் ஒரு சிறிய கூடாரத்தில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்து, தற்போதைய தோற்ற நிலையை அடைந்துள்ளது.
கோயில் வரலாறு
120 ஆண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் இருந்து குவாந்தான் நகருக்குச் சாலை அமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய மரத்தை வெட்டும் போது அதில் இருந்து ரத்தம் கசிந்தது.[4]
அதே வேளையில் மரம் வெட்டிக் கொண்டிருந்த தமிழர் ஒருவருக்கு அருள் வந்து, அந்த மரத்தை வெட்டக் கூடாது என்றும், சாலையைச் சிறிது தூரத்திற்கு அப்பால் போட வேண்டும் என்றும் சொன்னார்.[4] அதைச் செய்ய மறுத்தார் ஆங்கிலேய மேற்பார்வையாளர்.
அதிசய நிகழ்ச்சி
உடனே சிறிய குழந்தை வடிவு கொண்ட தழும்பு அந்த மரத்தில் தோன்றியது. அதைப் பார்த்து வியந்த மேற்பார்வையாளர் மரத்தை வெட்டாமல் சாலையை சிறிது தூரத்திற்கு அப்பால் போட உத்தரவிட்டார்.[4]
அதன் பின்னர் அந்த இடம் ஒரு புனித இடமாகி, ஸ்ரீ மரத்தாண்டவ பால தண்டாயுதபாணி எனும் பெயரைப் பெற்றது.[5]