ஜோஹன் பாயர் (Johann Bayer ;1572 – மார்ச் 7, 1625) செருமானிய வானியலாளரும் வழக்குரைஞரும், வரைபடவியலாளரும் ஆவார். இவர் 1572இல் செருமனியில் உள்ள ரைன் நகரில் பிறந்தார். தனது இருபதாவது வயதில் 1592 இல் இங்கோல்ஸ்டாடிட் பல்கலைகழகத்தில் தத்துவம் மற்றும் சட்டம் படித்தார். பின்னர் ஆக்ஸ்பர்க் நகருக்கு குடிபெயர்ந்தார். 1612 இல் நகராண்மைக் கழக வழக்குரைஞராக ஆனார்.[1]
தொழில்முறையில் வழக்குரைஞரான பாயர் தொல்லியல் அகழ்வாய்வு, கணிதம், வானியல் போன்ற பல துறையிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ஆயினும் இவரது வானவியல் ஆய்வால் குறிப்பாக விண்மீன் குழுவின் நிலைகளை ஆய்வு செய்ததால் தான் பெரிதும் அறியப்படுகிறார். இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார்.[2]
இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார்.[3] அதில் இவர் டைக்கோ பிராகி 1602இல் வெளியிட்ட அட்டவணையில் உள்ளதைவிட கூடுதலாக 1000 விண்மீன்களையும் 12 விண்மீன்குழுக்களையும் சேர்த்தார்.[4] இவர்தான் விண்மீன்களைக் கிரேக்க எழுத்துப் பெயரிட்டு அழைக்கும் முறையை உருவாக்கினார்.[3]
உயர்பொலிவுள்ள விண்மீன்களை ஆல்ஃபா எனவும் அடுத்த தரநிலைப் பொலிவுள்ள விண்மீன்களை பீட்டா எனவும் இவரிட்ட பெயரீடு இன்றளவும் வழக்கில் உள்ளது. இதன்படி அக்குவிலா விண்மீன்குழுவில் உள்ள உயர்பொலிவுள்ள விண்மீன் ஆல்ஃப் அக்குவிலா என்று அழைக்கப்படுகிறது.
நிலவின் குழிப்பள்ளம் ஒன்று பாயார்க் குழிப்பள்ளம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.