ஓயாத அலைகள் இரண்டு
ஓயாத அலைகள் - இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும்.
கிளிநொச்சி சண்டை ஓயாத அலைகள் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப்போரின் பகுதி | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
இலங்கை இராணுவம் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
இழப்புகள் | |||||||
443 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்றின் படி)[1] | 520 பேர் கொல்லப்பட்டனர் (இலங்கை இராணுவத்தின் கூற்றின் படி)[1] |
பின்னணி
1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் - ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் 'சத்ஜெய' என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர்.
பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒருதடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது.
தாக்குதல்
செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.