காந்தப் பிரிப்பு முறை
காந்தப் பிரிப்பு முறை (magnetic seperation) என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவி முறையாகும். இம்முறையை மின்காந்தப் பிரிப்பு முறை என்றும் அழைப்பர். இப்பிரிப்பு உத்தி தாதுக் கலவையிலுள்ள இரும்பை மற்றும் காந்த தன்மையுள்ள தாதுக்களை செறிவூட்டுதலில் மற்றும் பிரித்தெடுத்தலில் பெரிதும் பயன்படுகிறது.
உல்பிரமைட் தாதுவுடன் காசிட்டரைட் அல்லது பிசுமத் கலந்துள்ள சுரங்கங்களில் தாதுக்களைப் பிரித்தெடுக்க காந்தப் பிரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. ஜான் பிரைஸ் வெதெரில் (1844 – 1906 )[1] கண்டுபிடித்த இயந்திரமான வெதெரிலின் காந்தப் பிரிப்பான் இத்தாதுச் சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது.
நீற்றுதல் முடிந்த பின்னர் உலர்ந்த உலோகத் தாதுவானது வெதெரிலின் காந்தப்பிரிப்பு இயந்திரத்தில் உள்ள இருசோடி மின்காந்த உருளைகளுக்கு கீழாக நகரும் வார்ப்பட்டையின் மீது விழுமாறு கொட்டப்படுகிறது. மின்காந்த உருளைகள் நகரும் பட்டைக்கு செங்கோணமாக சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் சோடி மின்காந்த உருளைகள் மென் புலமாகவும் இரண்டாவது சோடி மின் காந்த உருளைகள் வன் புலமாகவும் செயல்படுகின்றன. காந்த மாசுக்கள் காந்த உருளையின் ஈர்ப்பு விசையால் அதன் அருகிலேயே குவியலாக விழுகின்றன. காந்தமற்ற தாது காந்தத்துக்கு சற்று தொலைவில் வேறொரு குவியலாக வந்து விழுகின்றது.
இவ்வியந்திரங்களால் காந்த சக்தியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு 10 டன் அளவுள்ள தாதுக்களை தூய்மைப்படுத்த முடியும். காந்தப் பண்பில்லாத தாதுக்களில் இருந்து காந்தப் பண்புள்ள மாசுக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறையே காந்தப்பிரிப்பு முறை என்றழைக்கப்படுகிறது. மேலும், கழிவு இரும்பிலிருந்து காந்தப்பண்புள்ள இரும்புத் துகள்களைப் பிரித்தெடுக்க மின்காந்த தூக்கிகளில் இம்முறை பயன்படுகிறது.[2]