காந்தி சந்தை
காந்தி மார்கெட் அல்லது காந்தி சந்தை என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஒரு சந்தையாகும்.
வரலாறு
இந்த சந்தையானது திருச்சிராப்பள்ளியில் 1868 முதலே சிறிய அளவில் சந்தை செயல்பட்டுவந்துள்ளது. அடுத்துவந்த 50 ஆண்டுகளில் திருச்சி நகரின் மக்கள்தொகை பெருகியதையடுத்து, 1927ஆம் ஆண்டு இந்த சந்தை விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர், திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தார். அப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வந்த காந்தியை அழைத்துவந்து விரிவுபடுத்தப்பட்ட சந்தையை 1927இல் காந்தியைக் கொண்டு திறந்து வைத்தார். காந்தி இந்தச் சந்தையைத் திறந்தது முதல் அவரது பெயரிலேயே காந்தி மார்கெட் என அழைக்கப்படத் தொடங்கியது. காந்தி சந்தையை திறந்து வைத்ததற்கான அடிக்கல் சந்தை முகப்பில் இன்றும் உள்ளது.
காந்தியின் மரணத்துக்குப் பிறகு மார்கெட்டின் நுழைவாயிலில் அவரது நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையை, 1953 அக்டோபர் 30 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி திறந்துவைத்தார்.[1]
இடமாற்றம்
இந்த சந்தை இருந்த இடமானது நகரின் மையப்பகுதியில் இருந்ததால் நெரிசலுக்கு உள்ளாகி வந்தது. இதனால் இந்த சந்தையை திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி என்ற இடத்தில் புதியதாக அமைக்க திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 65 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த புதிய சந்தை வளாகத்தில், தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களில் மொத்தம் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்குகள், மின்னாக்கிகள், சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக மின் தூக்கிகள், தொழிலாளர்களுக்கு ஓய்விடம், கழிப்பிடம், உணவகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.[2]