சஞ்சய் சுப்ரமண்யன்
சஞ்சய் சுப்ரமண்யன் (Sanjay Subrahmanyan[1] பி. சனவரி 21, 1968) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
சஞ்சய் சுப்ரமண்யன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சனவரி 21, 1968 |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கர்நாடக இசை - இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடகர் |
சிறுவயதில்
இவரது தந்தை சங்கரன் கல்கத்தாவில் வேலை பார்த்ததால் சஞ்சய் சுப்ரமண்யன் சிறு வயதில் கல்கத்தாவில் வசித்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டுக்காக ஆட வேண்டுமென விரும்பியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.[2]
கல்வி/இசைப் பயிற்சி
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த சஞ்சய், கல்வித் துறையில் பட்டயக் கணக்காளராகப் (chartered accountant) பட்டம் பெற்றார். தனது ஏழாவது வயதில் இசைப் பயிற்சியை தொடங்கிய சஞ்சய், தொடக்கத்தில் வி. லட்சுமிநாராயணனிடம் வயலினும் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார்.ஒரு சிறு விபத்தின் காரணமாக வயலின் வாசிப்பைத் தொடர முடியாமல் போனதால் வாய்ப்பாட்டு பயிற்சியை மேற்கொண்டார். இவரது பேத்தியார் ருக்மிணி இராஜகோபாலன் பரூர் சுந்தரம் ஐயரிடமும் பாபநாசம் சிவனிடமும் இசை பயின்றவர். 1930 களில் அகில இந்திய வானொலி தொடங்கிய காலத்திலிருந்தே அதன் பாடகராக அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். சஞ்சய் அவரிடமே வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார். பின்னர் கல்கத்தா கே. எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சி பெற்றார். அவர் சஞ்சயின் ஆக்கச் சிந்தனையையும் படைப்புத் திறனையும் வளர்த்துவிட்டார். இசை நிகழ்ச்சிகளின் போது சஞ்சயின் வெகு சுதந்திரமான வெளிப்பாடுகளுக்கு இந்தப் பயிற்சியே காரணமாக இருந்தது.[3]நாதசுவர வித்துவான் செம்பொன்னார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதனிடமும் இசைப் பயிற்சி பெற்றார்.
இசைக் கச்சேரிகள்
அகில இந்திய வானொலியில் ஒரு "உயர் ஏ" தர கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம், ஓமான், கனடா, சிங்கப்பூர், சுவிற்சர்லாந்து, மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்துள்ளார்.அரிய தமிழ் பாடல்களைத் தேடியெடுத்து அவற்றிற்கு இசை வடிவம் தந்து பாடுவதில் வல்லவர். எந்தப் பாடலாக இருந்தாலும் அதை மனனம் செய்து பாடுவார். அதனால் பொருள் உணர்ந்து மனம் ஒன்றிப் பாடுவார்.
பண்பாடு
கருநாடக இசையையும் தமிழ்ப் பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவர். 2013 டிசம்பரில் கான பத்மம் விருது வழங்கப்பட்டபோது மேடையில் விருதினை வழங்கிய மூத்த இசை வித்துவான் பாலமுரளி கிருஷ்ணாவின் பாதங்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சஞ்சய் வணங்கியது பார்த்தவர்களைப் புல்லரிக்கச் செய்தது.[4]
விருதுகள்
- கிருஷ்ணகான சபாவின் நிகழ்த்து கலைகளுக்கான இளைஞர் சக்தி (Spirit of Youth) விருது[5]
- அகில இந்திய வானொலி நடத்திய இசைப் போட்டியில் முதற்பரிசு (1985)
- மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளையின் உயர் இசைப் பயிற்சிக்கான உதவி நிதி (1987/88)
- யுவ கலா பாரதி, 1991 வழங்கியது பாரத் கலாச்சார், சென்னை
- சன்ஸ்கிருதி விருது, 1997 வழங்கியது மேடைக்கலைகளுக்கான சன்ஸ்கிருதி பிரதிஸ்தான்
- இசைப் பேரொளி விருது, 2000 வழங்கியது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், சென்னை
- கலைமாமணி விருது, 2006 வழங்கியது தமிழ்நாடு அரசு
- சங்கீத கலா சாரதி, 2006 வழங்கியது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா
- வாணி கலா சுதாகர, 2010 வழங்கியது தியாகப் பிரம்ம கான சபா
- இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது, 2011
- கான பத்மம், 2013. வழங்கியது: பிரம்ம ஞான சபா.[6]
- சங்கீத கலாநிதி விருது, 2015[7]
- இசைப்பேரறிஞர் விருது, 2016. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[8][9][10]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- டைம்சு ஆப் இந்தியாவுக்கு சஞ்சய் சுப்ரமண்யன் அளித்த பேட்டி பரணிடப்பட்டது 2012-10-20 at the வந்தவழி இயந்திரம்
- தமிழிசையும் சஞ்சய் சுப்பிரமணியமும் - 'தி இந்து' தமிழ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை
- Put a smile on their faces - 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு இசை விமர்சனம்
- Scales of excellence
- Different, as usual - 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு இசை விமர்சனம்
- KAIZEN, his mantra - பேட்டியை உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரை - பகுதி 1
- ‘Like a painting, it evolves on its own’ - பேட்டியை உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரை - பகுதி 2
- ‘No short cuts, only hard work’ - பேட்டியை உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரை - பகுதி 3