சரஸ்வதா நாடு
சரஸ்வதா நாடு (Saraswata Kingdom) மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர், இந்நாடு சரஸ்வதி ஆற்றாங்கரையில் குருச்சேத்திரம் பகுதியில் அமைந்திருந்தது. சரஸ்வதா நாட்டைக் குறித்து, மகாபாரதத்தில், கர்ண பருவத்தில் இருபது அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. (மகாபாரதம் 9: 35 - 54).
மகாபாரதக் குறிப்புகள்
சரஸ்வதா நாட்டின் பகுதிகள் சரஸ்வதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்ததை மகாபாரதம் விளக்கியுள்ளது. (மகாபாரதம் 3: 83, 84).
சரஸ்வதா நாட்டு மன்னர்கள்
சரஸ்வதா நாட்டு மன்னர்கள், குருச்சேத்திரத்திற்கு வடக்கில் வேள்விகள் செய்ததாக (மகாபாரதம் 3:129 ) குறிப்பிட்டுள்ளது. மன்னர் யயாதி சரஸ்வதா நாட்டில் பல வேள்வி மேடைகள் கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளது. (3: 90) மகாபாரதத்தின் ஆதி பருவம், அத்தியாயம் 25, 26 மற்றும் 90-இல், சரஸ்வதி ஆற்றாங்கரையில், மன்னர் மதிநரா, தேவர்களுக்கான வேள்வித் தீயில் அரிய பொருட்களை தேவர்களுக்காக சமப்பித்தார் எனக் கூறுகிறது.[1][2][3] தற்கால அரியானா மாநிலத்தின் கக்கர் ஆற்றின் தென்கரையில் உள்ள கலிபங்கன் எனும் ஊரில் சரஸ்வதி ஆறு இருந்ததாக கருதப்படுகிறது.[4][5] அகழ்வாராய்ச்சியில் கலிபங்கனில் ஐந்து வேள்வி மேடைகளை கண்டுபிடித்துள்ளனர்.[6][7][8][9] சிலர் லோத்தல் (Lothal) எனும் ஊரில் இறுதியாக சரஸ்வதி ஆறு பாய்ந்ததாக கண்டுள்ளனர்.[10] இம்மேடைகள் சமயச் சடங்குகளுக்காக பயன்படுத்தியிருக்கலாம்.[7][10]
வேணரின் மகன் மன்னர் பிருது
மன்னர் வேணரின் வழித்தோன்றல்களான நிசாதர்கள் சரஸ்வதி ஆற்றின் சமவெளிகளின் அண்மையில், சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள ஆனர்த்த நாட்டின் வடக்கில் தற்கால இராஜஸ்தான் பகுதிகளில் உள்ள காடுகளிலும், மலைகளிலும் பல நாடுகளை நிறுவினர்.வேணரின் மற்றொரு வழித்தோன்றல்களான மிலேச்சர்கள், விந்திய மலைத்தொடரில் வாழ்ந்தனர். வேணரின் மகன் மன்னர் பிருதுவின் இராஜ குருவாக சுக்கிராச்சாரியாரும்,
வாலகீயர்கள் பிருதுவின் அமைச்சர்களாகவும், சரஸ்வதா நாட்டவர்கள் பிருதுவின் கூட்டாளிகளாகவும், கார்க்க முனிவர் பிருதுவின் அரசவை ஜோதிடராகவும் இருந்தனர் என மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம் 12: 58).மன்னர் பிருது கல்லும் முள்ளுமாக இருந்த மேட்டு நிலங்களை சமப்படுத்தி, உணவிற்காக 17 வகையான தானியங்களைப் பயிரிட்டார். (12:58).
பண்டையப் போர்க்களங்கள்
சரஸ்வதி ஆற்று சமவெளி என்றும் தேவர்களும் - அசுரர்களும் போரிடும் களமாகவே இருந்தது. மேலும் சரஸ்வதா நாடு, வேதங்கள், உபநிடதங்கள், யோகம் ஆகியவற்றின் தோற்றுவாயாக இருந்துள்ளது.
சரஸ்வதி ஆற்றுப் பகுதியில் வறட்சி
சரஸ்வதி சமவெளி வேதங்கள் மற்றும் வேத மரபுகளின் பிறப்பிடமாக திகழ்ந்துள்ளது. இதனால் சரஸ்வதி ஆறு, அறிவு தெய்வமாகப் போற்றப்படுகிறது. மகாபாரத காவியத்தின் ஒன்பதாவது பருவத்தின், 51-வது அத்தியாயத்தில், சரஸ்வதி ஆறு வற்றியதால், அப்பகுதியில் பெரும் பஞ்சம் உண்டாகி, மக்களிடையே வேத பண்பாடு குறைந்து கொண்டே சென்றது எனக் கூறுகிறது.
மகாபாரதத்தின் மௌசல பருவத்தில், யாதவர்கள் தங்களுக்குள் சன்டையிட்டு அழிந்த பின்னர், பலராமன் சரஸ்வதி ஆறு பாயுமிடங்கள் வழியாக தீர்த்த யாத்திரை சென்றார். பின்னர் சரஸ்வதி ஆறு கால ஓட்டத்தால், திசை மாறி தற்கால இராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் வின்சனா எனுமிடத்தில் பூமிக்கடியில் வறண்டு போனது.
குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில், சரஸ்வதா நாட்டினர் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 5: 57). நகுலன், சரஸ்வதா நாட்டுப் படைகளையும், சகுனியின் மகன் உல்லூகனையும் வென்றழித்தார்.