சுதேஷ்ணை
சுதேஷ்ணை, மகாபாரத்தின் விராட பருவம் கூறும் மத்சய நாட்டு மன்னர் விராடனின் பட்டத்தரசி ஆவார். திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் விராட நாடு அரண்மனையில், இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் சிறப்புப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர்.
இவரது மகளான உத்தரையை, அபிமன்யு திருமணம் செய்து கொண்டவர். சுதேஷ்ணையின் மகன்கள் உத்தரன், சுவேதன், சதானீகன் மற்றும் சங்கன் ஆவார். சுதேஷ்ணையின் உடன்பிறந்தவர் கீசகன் ஆவார். [1]சுதேஷ்ணையின் மகள் வழி பேரன் பரீட்சித்து ஆவார்.
வரலாறு
துரியோதனனிடம் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால், 12 ஆண்டுகள் வனவாசமும், ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
12 ஆண்டு வனவாசம் முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மாறுவேடத்தில் விராட நாட்டின் அரண்மனையில் பணியாற்றினர்.
திரௌபதி, சைரந்திரி எனும் பெயரில் சுதேஷ்ணைக்கு சிகை அலங்காரம் செய்யும் சிறப்பு பணிப்பெண்னாக பணியாற்றியவர்.[2] [3][4] சுதேஷ்ணையின் உடன்பிறப்பான கீசகன், திரௌபதியை தகாத செயலுக்காக அடைய முயற்சி செய்தான். இதை அறிந்த பீமன் எனும் வல்லபன் கீசகனைக் கொன்றான்.[5]
திரிகர்த நாட்டு மன்னர் சுசர்மன் படைகளுடன், மத்சய நாட்டை முற்றுகையிடும் போது, விராடன் தனது படைகளுடன் சுசர்மனையும், அவரது தம்பியரையும் எதிர்த்துப் போரிட வல்லபன் எனும் பீமனுடன் சென்றார். மறுபுறத்தில் கௌரவர்களை எதிர்கொள்ள சுதேஷ்ணை, தன் மூத்த மகன் உத்தரனை பிருகன்னளையுடன் அனுப்பி வைத்தாள். [6][7]இருமுனைப் போர்களில் வல்லபன் மற்றும் பிருகன்னளை உதவியால் விராடன் மற்றும் உத்தரன் வெற்றி பெற்றனர்.
போரின் முடிவில் பாண்டவர்கள் மற்றும் திரௌபதி மாறுவேடத்தை களைந்தனர். சுதேஷ்ணையின் மகள் உத்தரையை அபிமன்யுவிற்குத் திருமணம் செய்வித்தனர். [8]