சௌவீர நாடு
சௌவீர நாடு (Sauvira kingdom) பரத கண்டத்தின் மேற்கில் தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்து ஆற்று பகுதியில் அமைந்திருந்தது. மேலும் துவாரகை மற்றும் ஆனர்த்த நாடுகளுக்கு அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சௌவீர நாடு தொடர்பான குறிப்புகள் மகாபாரத காவியத்தில் உள்ளது. சிந்துக்கள் மற்றும் சிவி நாட்டவர்கள், சௌவீர நாட்டின் சிறந்த கூட்டாளிகள் ஆவர்.
சௌவீர மக்கள்
மகாபாரத காவியத்தில் குறிப்பிட்டுள்ள சௌவீர நாட்டவர்களை தற்கால சரைகி மக்கள் (Saraiki people), என வரலாற்று ஆசிரியர் அகமது அசன் தானி குறிப்பிட்டுள்ளார்.[1] பாரசீக அறிஞர் அல்பிரூனீ (Al-Beruni), சௌவீர நாட்டவர்கள், பஞ்சாப் பகுதியின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
சௌவீர நாட்டு மன்னர்கள்
சௌவீரன்
சிவி என்பவரின் மகன்களில் ஒருவரான சௌவீரன் என்பவன் சௌவீர நாட்டை நிறுவியவன் ஆவான். சௌவீர நாட்டிற்கு அன்மையில் இருந்த நாடுகளான மத்திர நாடு, கேகய நாடு மற்றும் சிந்து நாடுகளை சிவியின் மற்ற மகன்கள் ஆண்டனர்.
ஜெயத்திரதன்
ஜெயத்திரதன், சிந்து நாட்டுடன் சௌவீர நாட்டையும் ஆண்டதாக மகாபாரதம் கூறுகிறது. (3: 265)[2] சிவி நாடு, சிந்து நாடு மற்றும் சௌவீர நாட்டுப் படைகளுக்கு ஜயத்திரதன் தலைமை தாங்கினான். (3:269)[3]
சௌவீர நாட்டின் மற்ற மன்னர்கள்
சத்துருஞ்ஜெயன் என்ற சௌவீர நாட்டின் மன்னர் குறித்து மகாபாரதத்தின் பருவம் 12-இல்-அத்தியாயம் 139-இல் குறிப்பிட்டுள்ளது.[4]
மகாபாரதத்தின் முதல் பருவமான ஆதி பருவம், அத்தியாயம் 67-இல் சௌவீர நாட்டு மன்னர்களை புவியின் வீரமிக்கவர்கள் எனக் கூறுகிறது.[5]
சௌவீர நாட்டு மன்னரான அஜாவிந்தன், தன் சொந்த இனத்தையே அழித்தான் என கூறிப்பிடப்படுகிறது. (5:74)[6]
குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில் சௌவீர நாட்டுப் படைகள் ஜயத்திரதன் தலைமையில் கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். (மகாபாரதம் 6:71) & (7:10, 136)
ஐந்து ஆறுகள் பாயும் சௌவீர நாட்டின் படைகள், பாக்லீகர்கள், சிந்து வீரர்கள் கௌரவ தலைமைப் படைத்தலைவர் பீஷ்மரின் தலைமையில் போரிட்டனர். (6:20)[7]
சௌவீர நாட்டு வீரர்கள், சிவிக்கள், சூரசேனர்கள், சால்வர்கள், மத்சயர்கள், திரிகர்த்தர்கள், கேகயர்கள் மற்றும் பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி வீரர்களுடன் சேர்ந்து பாண்டவப் படையினரை எதிர்கொண்டு தாக்கினர். (துரோண பருவம் 6:18)[8]
பாகவத புராணத்தில்
பாகவத புராணம் சௌவீர நாட்டவர்களை ஆபீரர்களுடன் இணைத்து பேசுகிறது.[9]
ருத்திரதாமன் எனும் சௌராட்டிர நாட்டு மன்னனை சௌவீர நாட்டைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது.[10]