பிறழ்சாட்சி
பிறழ்சாட்சி (Hostile witness) என்பவர் ஒரு தரப்புக்கு சாட்சி சொல்ல வந்து அதற்கு மாறாக சாட்சியம் அளிக்கின்றவரைக் குறிப்பிடுவதாகும். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 161ன் கீழ்[1] குற்ற வழக்குகளில் காவல் துறை அதிகாரி அல்லது மாநில அரசு அல்லது இந்திய அரசு கூறும் பொறுப்பான அதிகாரி சாட்சியம்/வாக்குமூலம் கூறுவதை பதிவு செய்வர். இவர்களை அரசுத் தரப்புச் சாட்சிகள் ஆவர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, இந்தச் சாட்சிகளின் வாக்குமூலங்களும், இதர ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு பிரதி வழங்கப்படும்.
நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணைக்கு வரும் போது, ஏற்கனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்த சாட்சியம்/வாக்குமூலம்/ஆவணம் அடிப்படையில் அரசுத் தரப்புச் சாட்சிகள் சாட்சியம் சொல்ல வேண்டும். அவர்கள் சாட்சியம் சொல்லாவிட்டால், அத்தகைய சாட்சிகளை பிறழ் சாட்சி என்பர்.
சுருக்கமாக சொல்வதென்றால் எவர் ஒருவர் நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற ஓர் வழக்கில் தமது தரப்புச் சாட்சியாக அழைத்து வரக் கூடிய நபர் அவர் அதற்கு மாறாக சாட்சியம் அளிக்கின்ற போது அவர் பிறழ் சாட்சி என்று அழைக்கப்படுகிறார்.
சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டால் குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட பிறழ் சாட்சியை, நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்லாம்.
பிறழ்சாட்சிக்கு தண்டனை
ஒரு குற்ற வழக்கில், காவல் துறையின் விசாரணைக்கு முன்னர், ஒரு சாட்சி இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 164 இன் கீழ் நீதித்துறை நடுவரிடம் நேரில் கூறிய வாக்குமூலத்தை அல்லது சமர்ப்பித்த ஆவணத்தை வழக்கு நடைபெறும் போது, முன்னர் தான் கூறிய சாட்சியத்தை மறுத்துக் கூறி பிறழ்சாட்சியாக மாறினால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்.[2][3][4][5]