பூததங்கெட்டு
பூததங்கெட்டு என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு அணை மற்றும் சுற்றுலா தலமாகும். இது பிண்டிமானா கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. இது கோதமங்கலம் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், கொச்சியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பூததங்கெட்டு நீர்த்தேக்கத்துக்கு (தட்டேகாடு நீர்த்தேக்கம்) துணையாக நவீன சேம நீர்த்தேக்கம் கூடுதலாக கட்டபட்டுள்ளது.
பூததங்கெட்டு அணை | |
---|---|
பெரியாறு தடுப்பணை, பூததங்கெட்டு | |
புவியியல் ஆள்கூற்று | 10°08′11″N 76°39′44″E / 10.13639°N 76.66222°E |
நிலை | செயல்படுகிறது |
காணத்தக்க இடங்கள்
பூததங்கெட்டு
பெரியாறு ஆற்றின் இருபுறமும் ஒழுங்கற்ற பெரிய கற்கள் வைக்கப்பட்டு அணை அமைக்கப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. இதனால் இது மனித ஆற்றலுக்கு மேற்பட்டதாக அமைந்த இயற்கை அணை போல தோற்றமளிக்கிறது. பூததங்கெட்டு என்ற பெயருக்கு பூதக் கோட்டை என்று பொருள். சென்ற தலைமுறையினர் இதை பூதம் கட்டியதாகக் கருதினர்.[1]
மேலும் இங்கே அமைந்துள்ளவை:
- பூததங்கெட்டு நீர்தேக்கம்
- சலீம் அலி பறவைகள் காப்பகம் (தட்டெக்காடு பறவைகள் சரணாலயம்)
- இடமலயாறு நீர்த்தேக்கம் இந்த இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது
தொன்மக்கதை
அணையின் பெயருக்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், அரக்கர்கள் (பூதங்கள்) திரிக்காரியூர் கோயிலை மூழ்கடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக பெரியாறு ஆற்றில் ஒரு அணையை உருவாக்கி விடிவதற்குள் அந்தப் பகுதியை வெள்ளத்தால் மூழ்கடிக்க திட்டமிட்டனர். சர்வ வல்லமையுள்ள சிவன் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி, அவர்களின் திட்டத்தைத் தடுக்க முனைந்தார். அவர்கள் அணையைக் கட்டிக்கொண்டிருந்தபோது பொழுது விடிய உள்ளதற்கு அடையாளமாக சேவல் கூவும் சத்தத்தை போலியாக உருவாக்கினார். வெளிச்சத்துக்கு பயந்து பூதங்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டன. அவற்றின் முயற்சிக்கு ஒரு தெளிவான சான்று என, பூதங்கள் ஆற்றங்கரையில் ஓடியதாகக் கருதப்பட்ட கற்பாறைகளில் உள்ள கால்தடங்கள் பழைய இங்கு உள்ளதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். பெரியாறு ஆறு இந்த பாறைகள் உள்ள குறுகிய இடத்தின் வழியாக பாய்கிறது.
யதார்த்தம்
இந்த கரடுமுரடான பாறைகள் உள்ளதற்கு காரணம் இரண்டு பெரிய வெள்ளங்கள் எனப்படுகின்றது. ஒன்று 4 ஆம் நூற்றாண்டிலும் மற்றொன்று 1341 ஆம் ஆண்டிலும் ஏற்பட்ட வெள்ளமாகும். இந்த வெள்ளங்கள் கொச்சி துறைமுகம் உருவாக காரணமாயிற்று. வெள்ளத்தின் போது ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகளால் பிரம்மாண்டமான பாறைகள் மலையிலிருந்து கீழே உருண்டு விழுந்து பழைய பூதத்தங்கெட்டில் சிக்கியுள்ளன என்று நம்பப்படுகிறது. [2] [3]
போக்குவரத்து
இங்கிருந்து ஆலுவாவில் (கொச்சி) தொடருந்து நிலையம் சுமார் 43 கி.மீட்டரும், கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 26 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.