சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை
2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[1] தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.[2]
இறந்த போராளிகள்
இலங்கை வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் இறந்த விடுதலைப் புலிப் போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.[3].
- பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்)
- லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்)
- மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்)
- மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி)
- லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்)
- லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா
தலைவர்கள், அமைப்புகள் அஞ்சலி
தமிழ்ச்செல்வனின் மறைவு குறித்து பல தலைவர்கள், மற்றும் அரசியல் அமைப்புகள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்[4], திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி[5], இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு, மற்றும் பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் ஆகியோர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு கீழே:
- wikisource:ta:சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு பிரபாகரன் விடுத்த அறிக்கை
- wikisource:ta:சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு கருணாநிதியின் இரங்கல் செய்தி
- wikisource:ta:சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு பாரதிராஜா விடுத்த அறிக்கை
- wikisource:ta:சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் அறிக்கை
- wikisource:ta:சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை
தாக்குதல் தொடர்பான தகவல்
புலிகள் அமைப்பில் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு எதிரானவர்கள் கொடுத்த தகவல்களில் பேரிலேயே இலங்கை வான்படைக்கு சு.ப. மற்றும் ஏனையவார்கள் தங்கியிருந்த இடம் தொடர்பான தகவல் கிடைத்ததாக இலங்கையின் ஐலன்ட் பத்திரிகை,[6] ஆசியா டிரிபுயூன் இணையத்தளம் [7] ஆகியன தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் கடைசிக் காலத்தில் தலைமையுடன் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் புலிகள் அமைப்பில் பதவிப் போட்டி நிலவி வருவதாவும் அச்செய்திகள் கூறுகின்றன. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இக்கொலைத் தொடர்பான செய்தியில் தாக்குதல் இலங்கை வான்படையின் வேவு விமானங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் தாக்குதலின் போது தாக்குதல் பகுதியில் இருந்து பெறப்பட்ட நேரடி தகவல் மூலமும் தான் இம்மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.[8]
வெப்ப அழுத்தக்குண்டு
தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகள் இலங்கை விமானப்படை வீசிய குண்டின் நேரடித்தாக்கத்தால் இறக்காமல் அது காற்றில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக உடற்காயங்கள் இன்றி இறந்தனர் என்று பிபிசி[2] செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிச்சடங்குகள்
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நவம்பர் 5 இல் கிளிநொச்சியில் இடம்பெற்றது. வீரவணக்கக் கூட்டத்தில் வன்னி எங்கிலுமிருந்து திரண்ட மக்கள், விடுதலைப் புலிகளின் துறைப் பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், சைவ- கிறிஸ்தவ மதகுருமார்கள், ஆயர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் கிளிநொச்சி நகரிலிருந்து கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 6:00 மணிக்கு விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் அவரது உடல் விதைகுழியில் விதைக்கப்பட்டது[9].
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Tamilselvan was a moderate பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.today - Hindustantimes - November 03, 2007 - (ஆங்கில மொழியில்)