அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்.தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்தின் தந்தை அழைக்கப்படுகிறார்.[1]
பிறப்பும் கல்வியும்
அண்ணாமலை ரெட்டியார் தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் ஊரை அடுத்துள்ள சென்னிகுளத்தில் பிறந்தார். திருநெல்வேலி இராமசாமிக் கவிராயரிடம் கல்வி கற்று, பின்னர் ஊற்றுமலை ஜமீந்தார் சுந்தரதாஸ் பாண்டியனின் சமஸ்தான வித்துவானாக விளங்கினார்.
பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று, அங்கு குறுநிலத் தலைவராக இருந்த இருதயாலய மருத்தப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
இயற்றியவை
- காவடிச் சிந்து
- வீரை தலபுராணம்
- வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம்
- கோமதி அந்தாதி
- சங்கரன் கோவில் திரிபந்தாதி
- கருவை மும்மணிக்கோவை ஆகியவற்றை இயற்றினார்.
காவடிச்சிந்து பாடல் பகுதி
தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி
- செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர்
செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை
- தேனே! சொல்லு வேனே.
வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி
- மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த
வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும்
- விலகும் படி இலகும்.
மறைவு
இவர் நோய் காரணமாக 1891 ஆம் ஆணடு, தனது 26 ஆவது வயதில் காலமானார்.