இந்திய அணுசக்திக் கழகம்
இந்திய அணுசக்திக் கழகம் (Nuclear Power Corporation of India) இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்.[2] இந்த நிறுவனம், அணுசக்தியை போதிய பாதுகாப்புடன் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் தன்னிறைவு அடையவும், அதன் வழியாக மின்சாரம் தயாரித்து நமது நாட்டு மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.[3]
வகை | அரசு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | செப்டம்பர் 1987[1] |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | திரு எஸ் கே ஜெயின் |
தொழில்துறை | அணுக்கரு ஆற்றல், மின் உற்பத்தி |
இணையத்தளம் | www.npcil.nic.in |
இந்த நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது.[4]
இந்திய அணுசக்திக் கழகம் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசு துவங்கிய பொதுத் துறை நிறுவனமாகும்.[5] இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள்களை பயன்படுத்தி அணுக்கரு அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில், நவம்பர் 27, 2010 தற்போதைய நிலவரப்படி, 20 அணுக்கரு அணுமின் ஆலைகளை ஐ எசு ஒ 14000 தரநிர்ணயத்துடன் இயக்கி வருகிறது. இவ்வாலைகள் இந்தியாவில் ஆறு இடங்களில் முறையே தாராப்பூர் (மகாராட்டிரம்), ராவட்பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்தரப் பிரதேசம்), கக்ரபார் (குஜராத்), கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா) ஆகிய இடங்களில் நிறுவப்பெற்றுள்ளன.[6] இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.[7]
இந்திய அணுசக்திக் கழகம் அணுக்கரு ஆலைகளை வடிவமைப்பது, கட்டுவது, செயல்படுத்தி ஆலையை பராமரிப்பது, தயாரித்த மின்சாரத்தை வணிகம் செய்வது, சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது.