பினாங்கு யாங் டி பெர்துவா
யாங் டி பெர்துவா பினாங்கு (ஆங்கிலம்: Penang Governor; மலாய்: Yang di-Pertua Negeri of Pulau Pinang) என்பது மலேசிய மாநிலமான பினாங்கு மாநிலத்தின் ஆளுநரைக் (கவர்னர்) குறிப்பிடும் பதவி. இவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
யாங் டி பெர்துவா பினாங்கு Yang di-Pertua Pulau Pinang | |
---|---|
தற்போது அகமது பூசி அப்துல் ரசாக் 1 மே 2021 முதல் | |
வாழுமிடம் | ஸ்ரீ முத்தியாரா, பினாங்கு |
நியமிப்பவர் | யாங் டி பெர்துவான் அகோங் |
முதலாவதாக பதவியேற்றவர் | ராஜா ஊடா ராஜா முகமது |
உருவாக்கம் | 31 ஆகஸ்டு 1957 |
இணையதளம் | www |
பினாங்கு மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் அகமது பூசி அப்துல் ரசாக் (Ahmad Fuzi Abdul Razak). இவர் 2021 மே 1-ஆம் தேதி பதவியேற்றார்.
வரலாறு
18-ஆம் நூற்றாண்டு வரை, பினாங்கு தீவு, கெடா சுல்தானகத்தின் (Kedah Sultanate) ஒரு பகுதியாக இருந்தது.[1] 1786-ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியிடம் (East India Company) பினாங்கு தீவு ஒப்படைக்கப்பட்டது.[2] அந்தக் கட்டத்தில் பிரான்சிஸ் லைட் (Francis Light) என்பவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.
பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு
பிரான்சிஸ் லைட், பினாங்குத் தீவிற்கு பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு (Prince of Wales Island) என்று பெயர் வைத்தார். 1790-இல், கெடா சுல்தானகத்திற்கும் பிரான்சிஸ் லைட்டிற்கும், மலாயா பெருநிலத்தில் இருந்த செபராங் பிறை நிலப்பகுதிகள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.[3]
கெடா மீதான சயாமியர்களின் படையெடுப்புகளுக்கு எதிராக உதவிகள் செய்ய முடியும் என்றுதான் பிரான்சிஸ் லைட், கெடா சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பினாங்கு தீவை தக்க வைத்துக் கொண்டார். ஆனால், உதவிகள் செய்யவில்லை. அதனால் பிணக்குகள் ஏற்பட்டன. அதனால் சிற்சில சண்டைச் சச்சரவுகள்.
பிரான்சிஸ் லைட்டின் தாக்குதல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு, கெடா சுல்தான் அப்துல்லா, பினாங்குத் தீவை முறையாக பிரித்தானியா பேரரசிடம் ஒப்படைத்தார்.[4][5]
நீரிணைக் குடியேற்றங்கள்
பிரான்சிஸ் லைட், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1800 முதல் 1805 வரை, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு, ஒரு லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor) எனும் துணை ஆளுநரால் வழிநடத்தப்பட்டது.[6]
1805-ஆம் ஆண்டில், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவு ஒரு பிரித்தானிய ஆளுநரின் பராமரிப்பிற்குள் வந்தது. 1826-ஆம் ஆண்டில், அந்தத் தீவு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements) எனும் நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது.
மலாயாவில் இராணுவ ஆட்சி
பினாங்கு 1941 முதல் 1945 வரை ஜப்பானியர்களால் (Japanese occupation of Malaya) ஆக்கிரமிக்கப்பட்டது. ஜப்பானியர்கள் சரண் அடைந்த பிறகு, பிரித்தானியர்கள் திரும்பி வந்தனர். 1946இல் மலாயா ஒன்றியம் (Malayan Union) அமைப்பதற்கு முன்பு மலாயாவின் மீது கொஞ்ச காலம் இராணுவ ஆட்சியை அமல்படுத்தினர்.
மலாயா ஒன்றியமும் மற்றும் மலாயாவின் சுதந்திரத்திற்கு முந்தைய மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) காலத்திலும், பினாங்குத் தீவு, ஒரு பிரித்தானிய ரெசிடென்ட் ஆளுநர் (British Resident Commissioner) என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.[7]
மலாயா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவா நெகிரி, மலேசியாவின் மன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப் படுகிறார்.[8][9]
பொது
யாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது; மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆளுநரைக் குறிப்பிடும் பதவி.
இந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்னர், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[10]
நிர்வாகம்
மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:
- பெரும்பான்மை பெற்ற பிரதான கட்சியின் தலைவரை முதலமைச்சராக (ஆங்கிலம்: Ketua Menteri; மலாய்: Chief Minister) நியமிப்பது;
- மாநிலத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (Executive Council) நியமிப்பது; (சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமைச்சரவை (Cabinet) என அழைக்கப்படுகிறது);
- மாநில அரசாங்கத்தின் துறைத் தலைவர்களை நியமிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கு ஒப்புதல் அளிப்பது;
- மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுதலைத் தடுத்து நிறுத்துவது;
- அரச விருதுகள்; அரச பதக்கங்கள் வழங்குவது;
- மாநிலத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது; (இந்தக் குற்றங்களில் இராணுவக் குற்றங்கள் மற்றும் சிரியா குற்றங்களுக்கு யாங் டி பெர்துவான் அகோங் மட்டுமே மன்னிப்பு வழங்க இயலும்).
பினாங்கு யாங் டி பெர்துவா பட்டியல்
1957-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[11][12] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)