கிளாடு மோனே (Claude Monet) (நவம்பர் 14, 1840 - டிசம்பர் 5, 1926) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியராவார். இவர் ஆஸ்கார் கிளாடு மோனே அல்லது குளோட் ஒஸ்கார் மொனே எனவும் அறியப்பட்டவர். இவர் உணர்வுப்பதிவுவாத (impressionist) இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் வரைந்த உணர்வுப்பதிவு, சூரியோதயம் என்னும் பெயரிடப்பட்ட ஓவியமே அந்த ஓவிய இயக்கத்துக்கும் அப்பெயர் வரக் காரணமாயிற்று.[1][2][3]
வாழ்க்கை
மோனே பாரிஸ் நகரில் பிறந்தார். ஆனால் இவருக்கு ஐந்து வயதானபோது இவரது குடும்பம், நோர்மண்டியிலுள்ள லெ ஹாவ்ரே என்னுமிடத்துக்கு இடம் பெயர்ந்தது. இவரது தந்தையார் ஒரு பலசரக்கு வணிகர். தன்னைத் தொடர்ந்து ஆஸ்கார் கிளாடு மோனேயும் தங்கள் குடும்ப வணிகத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் மோனே ஒரு ஓவியராவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
தொடக்கத்தில் ஒரு கேலிச் சித்திர ஓவியராகவே இவர் உள்ளூர் மக்களுக்குப் அறிமுகமானார். அவர் கரிக் கோலினால் வரையப் பட்ட கேலிச் சித்திரங்களை விற்று வந்தார். நோர்மண்டியின் கடற்கரைகளில் இயூஜீன் பௌதின் (Eugène Boudin) என்னும் இன்னொரு ஓவியருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. மோனே இவரிடமிருந்து எண்ணெய் ஓவியங்களை (oil paints) வரைவதற்குப் பயின்றதுடன் வெளிப்புற ஓவிய நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.
மோனே, த லுவர் (The Louvre) என அழைக்கப்பட்ட அரும்பொருட் காட்சியகத்தைப் பார்வையிட பாரிஸ் சென்றபோது அங்கே பல ஓவியர்கள் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் போலவே தாங்களும் வரைவதை அவதானித்தார். ஆனால் மோனே தான் காண்பதை வரைவதிலேயே ஆர்வம் காட்டினார்.
மோனெ ஏழு ஆண்டுகளுக்கான படைத்துறை (இராணுவ) சேவையை ஏற்றுக்கொண்டு 1860 இல் அல்ஜீரியாவில் பணியாற்றத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நோய்வாய்ப்படவே இவரது உறவினரொருவரின் தலையீட்டின் பேரில் படைத்துறையில் இருந்து வெளியே வர முடிந்தது. இதற்காக பல்கலைக்கழகமொன்றில் ஓவியப் பயிற்சி நெறியொன்றை மேற்கொள்வதாக இவர் ஒத்துக்கொண்டார். ஆனாலும் மரபு சார்ந்த ஓவியப் பயிற்சியில் ஆர்வம் இல்லாமையால், 1862 இல் பாரிஸிலிருந்த சார்ல்ஸ் கிளேயர் என்பவரின் ஓவியக்கூடத்தில் (studio) சேர்ந்தார். அங்கேதான் இவருக்கு பியரே-ஒகஸ்ட்டே ரெனோயர் (Pierre-Auguste Renoir), பிரெடெரிக் பஸில்லே (Frederic Bazille), அல்பிரட் சிஸ்லே (Alfred Sisley) போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஓவியம் வரைவதில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்தனர். இதுவே பின்னர் ஓவியத்தில் உணர்வுப்பதிவுவாதம் (impressionism) என அறியப்படலாயிற்று.
1866 இல் மோனே, தனது முதல் மனைவியான கமீலே டொன்சியுக்ஸ் என்பவரை வைத்து வரைந்த பச்சை ஆடை உடுத்திய பெண் (The Woman in the Green Dress) என்று பெயரிடப்பட்ட ஓவியமே இவருக்கு வரவேற்பைத் தேடித் தந்தது.
கிளாடு மோனெவின் மனைவி கமைல் மோனேவின் இறப்பு
1876 ஆம் ஆண்டு கமைல் மோனே காச நோயால் பீடிக்கப்பட்டாள். கமைல் மோனேவின் இரண்டாவது மகன், மைக்கேல், 1878 பங்குனி 17 ஆம் திகதி பிறந்தான். இந்த இரண்டாவது குழந்தைக்கு ஏற்கனவே சுகாதார மறைதல் ஏற்பட்டிருந்தது, அது அவரை மேலும் பலவீனப்படுத்தியது. கமைல் மோனேவின் குடும்பத்தினர் (Vétheuil) எனப்படும் கிராமத்தில் உள்ள கலைகள் கற்ற ஓர் பல்பொருள் அங்காடி உரிமையாளர் வீட்டில் தங்கினர். 1878 ஆம் ஆண்டு கமைல் மோனே கருப்பை புற்று நோயால் பீடிக்கப்பட்டார். அவள் முப்பத்தி இரண்டு வயதில் 5 ஆம் திகதிசெப்டம்பர் மாதம் 1879 ஆம் ஆண்டில் இறந்தாள்.
கிளாடு மோனெவின் இறப்பு
கிளாடு மோனெ 1926 ஆம் ஆண்டுதிசெம்பர்மாதம் 5 ஆம் திகதி தனது 86 வது வயதில் நுரையீரல் புற்று நோயால் பீடிக்கப்பட்டு இறந்தார். கிளாடு மோனெ ஜிவேர்னி (Giverny) தேவாலயத்தின் கல்லறையில் புதைக்கப்பட்டார். கிளாடு மோனெ தனது இறப்பு விழாவை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் சுமார் ஐம்பது பேரே கிளாடு மோனெவின் இறப்புவிழாவில் கலந்து கொண்டனர்.