நொரடோம் சீயனூக் அல்லது நொரடோம் சிகானுக் (Norodom Sihanouk, (கெமர் மொழி: នរោត្តម សីហនុ; 31 அக்டோபர் 1922 - 15 அக்டோபர் 2012) கம்போடியாவின் முன்னாள் மன்னர் ஆவார். இவர் 1941 முதல் 1955 வரையும், பின்னர் 1993 முதல் 2004 வரையும் மன்னராகவிருந்தவர். 1953 முதல் 1970 வரை அந்நாட்டின் நிறைவேற்றுத் தலைவராகவும் இருந்தார். 2004 ஆம் ஆண்டில் இவர் முடி துறந்ததை அடுத்து கம்போடியாவின் மன்னர்-தந்தை (கெமர் மொழி: Preahmâhaviraksat) என அழைக்கப்பட்டார். இவருக்குப் பின்னர் இவரது மகன் நொரடோம் சிகாமொனி மன்னரானார்.
சிகானுக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். 1953 இல் விடுதலை கிடைத்தது. அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.
1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சீயனூக் நாடு திரும்பினார். ஆனாலும், அவர் அரண்மனையில் கெமர் ரூச் ஆட்சியாளர்களால் அவர்களின் நான்காண்டு ஆட்சிக் காலம் முழுவதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.[1]
வியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சீயனூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சீயனூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் மன்னராக முடி சூடிக் கொண்டார்.