ஜம்மு காஷ்மீர் வரலாறு
காஷ்மீர் வரலாற்றில் பரந்த இந்தியத் துணைக்கண்ட வரலாறும் இதைச்சுற்றிய பகுதிகளான, நடு ஆசியா, தெற்கு ஆசியா , கிழக்காசியா போன்ற பகுதிகளின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளன. இன்று, இது இந்தியாவால் நிர்வகிக்கப்படும் சம்மு காசுமீர் மாநிலத்தை உள்ளடக்கிய பெரிய பகுதி (ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, மற்றும் லடாக் ஆகியவை சேர்த்து), பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் பகுதியான ஆசாத் காஷ்மீர், கில்ஜித்-பால்திஸ்தான், சீனாவால் நிர்வகிக்கப்படும் பகுதியான அக்சாய் சின், டிரான்ஸ் காரகோரம் பகுதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
முதல் புத்தாயிரத்தின் முதல் பாதியில், காஷ்மீர் பிராந்தியம் இந்து சமயத்தின் ஒரு முதன்மையான மையமாக விளங்கியது. பின்னர் பௌத்த மையமாகவும் பின்வந்த ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் எழுச்சியுற்றது. காஷ்மீர் 13 ஆம் நூற்றாடிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இசுலாமிய மயமானது. இதனால் இறுதியில் காசுமீர சைவம் வீழ்ச்சியுற்றது. இருப்பினும், பிராந்தியம் தன் நாகரிகத்தின் சாதனைகளை இழக்காமல் இருந்தது, ஆனால் புதிய இசுலாம் ஆட்சி அமைப்பும் கலாச்சாரத்தாலும் உறிஞ்சப்பட்டு காஷ்மீர் சூஃபி மிஸ்டிசிம் பெரியளவுக்கு எழுச்சியடைந்தது.
1339 இல், ஷா மிர், காஷ்மீரின் முதல் முஸ்லீம் அரசராக ஆனார், இவரால் ஷா மிர் வம்சம் துவக்கப்பட்டது. அடுத்து வந்த ஐந்து நூற்றாண்டுகளும், முகலாயர் உள்ளிட்ட முஸ்லீம் முடியாட்சிகள் காஷ்மீரை ஆண்டனர், இவர்கள் 1586 முதல் 1751வரையும் , 1747 முதல் 1819 வரை ஆப்கான் துரானி சாம்ராஜ்யத்தாலும் ஆளப்பட்டது. அந்த ஆண்டு, ரஞ்சித் சிங் தலைமையிலான சீக்கியர்களால் காஷ்மீர் கைப்பற்றப்பட்டது. 1846 இல் நடந்த முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரின் முடிவில் சீக்கியரின் தோல்விக்குப்பின், ஏற்பட்ட அமிர்தசரஸ் உடன்படிக்கையின் கீழ் பிரிட்டிஷாரிடமிருந்து 75 இலட்சம் ரூபாய்க்கு காஷ்மீர், வடக்கு நிலங்கள் மற்றும் லடாக் பகுதியை ஜம்மு அரசர் குலாப் சிங் வாங்கினார். குலாப் சிங் புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முதல் ஆட்சியாளர் ஆனார்.[1]
அவரது சந்ததிகளின் முடியாட்சியானது பிரித்தானியரின் மேலதிகாரத்தின் கீழ், 1947 வரை நீடித்தது, முன்னாள் சுதேச இராச்சியமான இது சர்ச்சைக்குரிய பிரதேசமாக ஆனபின்னர், இப்போது இந்தியா, பாக்கித்தான், சீன மக்கள் குடியரசு என மூன்று அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது.
சொற்பிறப்பு
சொற்பிறப்பின்படி, "காஷ்மீர்" என்ற பெயர் "வறட்சியான நிலம்" (: சமசுகிருதத்தில் கா = நீர் மற்றும் ஷிமீரா = உலர்ந்த ) என்பதாகும். 12 ஆம் நூற்றாண்டில் கல்ஹானாரால் எழுதப்பட்ட காஷ்மீர் வரலாற்று நூலான இராஜதரங்கிணியில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் முன்னர் ஒரு ஏரி இருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. இந்து சமய இதிகாசங்களின்படி, இந்த ஏரியானது ஒரு பெரிய முனிவரால் உருவாக்கப்பட்டது, பிரம்மாவின் மகன் மரீசியின் மகனான காசிப முனிவர் பாரமுல்லா (வராகர்-முலா) மலையில் இடைவெளியை வெட்டி உருவாக்கி. காஷ்மீரில் பிராமணர்களைக் குடியேறுமாறு, கேட்டார். என்று உள்ளூர் பாரம்பரியக் கதையாகக் கூறப்படுகிறது. மற்றும் பள்ளத்தாக்கு குடியிருப்புகளின் தலைமை நகரமானது, காஷ்யபர் புரம் என அழைக்கப்பட்டது, இது காஸ்ப்பைரோஸ் என ஹீரோடோடஸின் (பைசாண்டியத்தின் அபுட் ஸ்டீபன்) மற்றும் காஸ்பதேரோஸ் என எரோடோட்டசு (3.102, 4.44).[2][3] ஆகியோரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரானது தாலமியால் குறிப்பிடப்பட்ட கஸ்பிரியா நாடு என நம்பப்படுகிறது.[4] காஷ்மீரின் பழைய உச்சரிப்பான கேஷ்மியர் என்ற உச்சரிப்பில் இப்போதும் சில நாடுகளில் உச்சரிக்கப்படுகிறது.
மகாபாரதத்தின்படி,[5] புராணக்காலத்தில் காஷ்மீரை குடியரசு முறைப்படி காம்போஜர்கள் [6] கர்ண-ராஜபுரம்-கத்வ-கம்போஜ-நிர்ஜிதஸ்தவா என்ற நகரைகத் தலைநகராகக் கொண்டு ஆ்ண்டனர்.[7][8] இது சுருக்கமாக ராஜ்புரா எனப்பட்டது,[9][10][11][12] இந்நகரம் தற்கால ரஜௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.[13]
பின்னர், பாஞ்சாலர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகிறது. பீர் பஞ்சால், என்ற பெயரில் நவீன காஷ்மீரின் ஒரு பகுதி இருந்ததை, இது உறுதி செய்கிறது. பஞ்சால் எனபது பாஞ்சாலா என்ற சமசுகிருதச் சொல்லின் திரிபு வடிவமாகும். புராணத்தின்படி, ஜம்மு கி.மு. 14 ஆம் நூற்றாண்டில் இந்து சமய மன்னர் ஜம்பு லோச்சனால் நிறுவப்பட்டது. ஒரு சமயம் மன்னர் வேட்டையாடவதற்காக தாவி ஆற்றின் அருகில் சென்றார், அந்த இடத்தில் ஒரு ஆடும், சிங்கமும் ஒரே இடத்தில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்தார். அசந்துபோன மன்னர், பின்னர் அங்கே தன் பெயராலேயே ஜம்பு என்ற ஒரு நகரை நிர்மாணித்தார். இந்தப் பெயர் காலவோட்டத்தில் "ஜம்மு" என மருவியது.
வரலாற்று இலக்கியங்கள்
நில்மத புராணம் ( 500–600 நூற்றாண்டு) [14] காஷ்மீரின் துவக்கக்கால வரலாற்றைக் கொண்டுள்ளது. எனினும், இந்தப் புராணத்தை மூலாதாரமாக ஏற்க அதில் நிலவும் முரண்பாடுகளால் நம்பகமற்றது என வாதிடப்படுகிறது.[15][[#cite_note-FOOTNOTE._This_is_incorrect._Scholasticism_was_a_hallmark_of_the_Puranas._It_is_not_that_Puranic_genealogies_are_"incomplete_and_occasionally_inaccurate"'"`UNIQ--ref-0000000F-QINU`"'but_rather_they_take_the_long_view_which_is_not_a_creation_myth_but_has_realistic_as_well_as_spiritual_underpinnings--_metaphors_need_to_be_understood_within_those_time_space_specificities._The_chronology_of_events_described_in_Puranas_often_are_accurate--_they_were_added_on_during_successive_centuries_by_scribes.'"`UNIQ--ref-00000010-QINU`"'200574-18|[18]]] கல்ஹானர் தன் இராஜதரங்கிணி (அரசர்களின் ஆறு), நூலில் 8000 சமசுகிருத வசனங்களில் புராண காலத்தில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காஷ்மீரின் பேரரசுகளின் வரலாற்றை காலவரிசையில் குறிப்பிட்டுள்ளார்.[19][20] இது நில்மத புராணம் போன்ற பாரம்பரிய ஆதாரங்கள், கல்வெட்டுகள், காசுகள், நினைவுச் சின்னங்கள், கல்ஹானரின் தனிப்பட்ட அவதானிப்புகள் அவரது குடும்ப அரசியல் அனுபவங்கள் வெளியே பரவியுள்ள செய்திகள் ஆகியவற்றை ஆதாரங்களாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.[21][19] நூலின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை கல்ஹானர் புராண விளக்கங்கள் மற்றும் அறிவார்ந்த விமர்சன ஆய்வு வழிவிட்டதாக 11 மற்றும் 12 ஆவது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட வியத்தகு நிகழ்வுகள் போன்றவற்றைத் தெரிவிக்கிறார். கல்ஹாடனார் இந்தியாவின் முதல் வரலாற்றாசிரியர் எனக் குறிப்பிடுப்படுகிறார்.[22][19] காஷ்மீரில் முஸ்லீம் அரசர்களின் ஆட்சிக் காலத்தில், ராஜதரங்கினியில் மூன்று கூடுதல் பகுதிகளை ஜோனராஜாவால் (1411–1463 ) எழுதப்பட்டன, இந்த நூல், நிஜாம் உத்தின், ஃபரிஷடா, அபுல் ஃபசல். போன்ற முஸ்லீம் அறிஞர்களால் பாரசீக மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது.[23] பஹரிஷ்தான்-இ-ஷாஹி மற்றும் ஹைதர் மாலிக்கின் தாரிக்-இ-காஷ்மீர் (கிபி 1621 வது ஆண்டு வரை) போன்றவை காஷ்மீர் வரலாற்றில் சுல்தான்கள் காலத்தைப் பற்றிய மிக முக்கியமான நூல்கள் ஆகும். இந்த இரு புத்தகங்களும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட நூல்களாகும் இவற்றை எழுத ராஜதரங்கினி மற்றும் பாரசீக வரலாற்று மூலங்களைப் பயன்படுத்தப்பட்டன.[24]
முற்கால வரலாறு
கிமு 326 ஆம் ஆண்டில், போரஸ் என்னும் புருசோத்தமன் அலெக்சாண்டரை எதிர்த்து போர்புரிவதில் உதவுமாறு காஷ்மீர் மன்னரான அபிசரிசிடம் கேட்டார். போரசின் தோல்விக்குப் பிறகு, அலெக்சாந்தருக்கு யானைகளையும், பரிசுகளையும் அபிசார் அனுப்பி சமர்ப்பித்ததார். [25][26] அசோகரின் (கி.மு. 304-232) ஆட்சிக்காலத்தின்போது, காஷ்மீர் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது, இதன்பிறகு பௌத்த சமயம் காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், பல தாதுகோபங்களும், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில கோவில்களில், ஸ்ரீநகரி (ஸ்ரீநகர்) நகரில் கட்டமைக்கப்பட்டன. [27] குசான் பேரரசின் மன்னரான கனிஷ்கர் (கி.பி. 127-151) காஷ்மீரைக் கைப்பற்றி கனிஷகபுரம் என்னும் புதிய நகரத்தை நிறுவினார்.[28] பெளத்த வரலாற்றில் முக்கிய இடம்வகித்த நான்காம் பௌத்த அவை கனிஷ்கரால் காஷ்மீரில் நடைபெற்றது என்ற கூற்று உள்ளது, இந்த அவையில் அஷ்வகோசர், நாகார்ஜுனர், வசுமித்திரர் போன்ற பௌத்த அறிஞர்கள் பங்கேற்றனர். [29] நான்காம் நூற்றாண்டில் காஷ்மீரானது புத்த, இந்து ஆகிய இருசமயங்களின் கல்வி மையமாக விளங்கியது. காஷ்மிரி புத்தத் துறவிகளின் உதவியோடு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்த சமயமானது திபெத், சீன ஆகிய பகுதிகளுக்குப் பரப்பப்பட்டது. இந்த நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் காஷ்மீருக்கு வரத் தொடங்கினர். [30] குமரஜீவாவினால் (343-413 CE), என்ற புகழ்வாய்ந்த காஷ்மீர அறிஞர் சீனப் பயணம் மேற்கொண்ட அறிஞர்களில் ஒருவராவார். இவர் சீன பேரரசர் யாவ் ஜிங் அவர்களிடம் செல்வாக்குள்ளவராக இருந்தார் இவர் பல சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்க்கும் பணிக்கு சாங்'அன் மடத்தில் தலைமையேற்றார். [31]
டோரமன்னாவின் தலமையிலான ஹெப்தலைட்டுகள் (வெள்ளை ஹன் இனத்தவர்) இந்து குஷ் மலைகளைக் கடந்து காஷ்மீர் உள்ளிட்ட மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டனர். [32] இவரது மகன் மய்ரகுலா ( 502-530), வட இந்தியாவை முழுமையாகக் கைப்பற்ற நடவடிக்கைகளை எடுத்தார். இவர் மகத நாட்டின் பாராதித்தனை எதிர்த்து படையெடுத்தும், மால்வாவின் யசோதர்மன் மீது படையெடுத்து இறுதியில் யசோதர்மனால் தோற்கடிக்கப்பட்டார். தோல்விக்குப் பின், மய்ரகுலா காஷ்மீர் திரும்பினார். இதன்பின்ர் காந்தாரத்தைக் கைப்பற்றி அவர் புத்த மதத்தினர் மீது பல கொடூரங்களைச் செய்து அவர்களின் கோவில்களையும் அழித்தார். மய்ரகுல இறந்த பிறகு ஹன் இனத்தவர் செல்வாக்கு மங்கிப்போனது. [33][34] ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, காஷ்மீரி இந்து சமயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடந்தன. தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், காஷ்மீரில் பல கவிஞர்கள், தத்துவவாதிகள் தோன்றினர், இந்துசமயம் சார்ந்த சமசுகிருத இலக்கியங்கள் இயற்றப்பட்டன. [35] இந்தக் காலகட்டத்தில் இருந்த அறிஞர்கள் மத்தியில் குறிப்பிடத் தக்கவர் வசுகுப்தர் ( 875-925 ) ஆவார், இவர் காஷ்மீர சைவத்துக்கு அடித்தளமமைத்தவராக கருதப்படுகிறது, இவர் சிவசூத்திரம் என்ற நூலை எழுதினார். காஷ்மீர் சைவம் பெருமளவில் காஷ்மீரிலும் தென் இந்தியாவிலும் பொது மக்கள் மத்தியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. [36]
எட்டாம் நூற்றாண்டில், காஷ்மீரில் கார்கோடப் பேரரசு நிறுவப்பட்டது. [37] காஷ்மீர் கார்கோடரிகளின் ஆட்சியில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக வளர்ந்தது. இந்த வம்சத்தின் சந்திரகுப்பதன் போன்ற காஷ்மீர அரசர்களை சீன பேரரசர் ஒரு ஆற்றல்மிக்க அரசராக ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து வந்த லலித்தாதித்ய முக்தபிட திபெத்தியர்களுக்கு எதிரான ஒரு வெற்றிகரமான இராணுவ நட்டவடிக்கையை மேற்கொண்டார். பின்னர் இவர் கன்னோசியின் யசோவர்மனைத் தோற்கடித்தார், பின்னர் கிழக்கில் இருந்த பேரரசுகளான மகதம், காமரூபம், கௌட பிரதேசம், கலிங்க நாடு ஆகியவற்றை வெற்றிகொண்டார். மேலும் இவர் மால்வா மற்றும் குஜராத்வரை தனது செல்வாக்கை விரிவாக்கி சிந்துவில் அராபியர்களைத் தோற்கடித்தார். [38][39] இவரது மறைவுக்குப் பின்னர், மற்ற பேரரசுகளுடன் மீது காஷ்மீரின் செல்வாக்கு குறைந்தது மற்றும் வம்சமும் கி.பி. 855-856 இல் முடிவுக்கு வந்தது. [37] கார்கோடர்களைத் தொடர்ந்து உத்பால வம்சத்தை நிறுவி அவந்தி வர்மன் ஆட்சிக்கு வந்தார். இவரைத் தொடர்ந்து வந்த சங்கரவர்மன (885-902 CE), பஞ்சாபில் கூர்ஜரர்களுக்கு எதிரான வெற்றியை ஈட்டினார். [40][37] 10 ஆம் நூற்றாண்டின் காஷ்மீர் அரசியல் நிலையற்ற தன்மைக்கு உள்ளானது அரசரின் மெய்க்காவலர்கள் காஷ்மீரின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக ஆயினர். இந்த மெய்க்காலர்களின் செல்வாக்கால் நாட்டின் பொது நிர்வாகம் சரிவைச் சந்தித்து, இவர்களை சக்கரவர்மன் தோற்கடிக்கும்வரை காஷ்மீர் ஆட்சியில் குழப்பம் நீடித்தது. [41] காபூலின் காபூல் சாகி குடும்பத்தில் பிறந்த அரசி தித்தா காஷ்மீரின் ஆட்சியாளராக 10 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பதவியேற்றார். [37] கிபி 1003 இல் இவரின் இறப்புக்கு பின்னர், அரியணை லெகரா மரபினரிடம் சென்றது. [42] 11 ஆம் நூற்றாண்டின்போது, கசினியின் மகுமூது காஷ்மீரைக் கைப்பற்ற இருமுறை முயற்சித்தார். ஆனால் இவர் மேற்கொண்ட லோகோட் கோட்டை முற்றுகை இரண்டு முறையும் தொல்வியில் முடிந்தது. [43]
முசுலீம் ஆட்சியாளர்கள்
காஷ்மீர் சுல்தானகம் மற்றும் முன் நிகழ்வுகள் (1346–1580கள்)
வரலாற்றாசிரியர் மொஹிபுபுல் ஹசன் கூற்றின்படி லெகரா மரபினரின் (1003-1320 ) ஆட்சியில் நிலவிய அடக்குமுறை வரிவிதிப்பு, ஊழல், உட்பகைச் சண்டைகள், குறுநில மன்னர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் போன்றவை காஷ்மீர் மீதான வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு வழி வகுத்தன எனக் கூறுகிறார். [44] லெகரா வம்சத்தின் கடைசி அரசனான சுகதேவன் காலத்தில், சுல்சுவின் தலைமையிலான, துருக்கிய மங்கோலியப் படைகள் காஷ்மீர் மீது கொடூரமாக தாக்கின, மன்னர் சுகதேவன் காஷ்மீரைவிட்டுத் தப்பிச் சென்றார். [45][46] சூலசுவுக்குப் பிறகு, திபெத்திய பௌத்தத்தைச் சேர்ந்த ரின்சானா என்பவர், காஷ்மீரில் ஒரு ஆட்சியாளராக உருவானார். [47][45] இவர் இஸ்லாமிய சமயத்தை ஏற்கவேண்டும் என வற்புறுத்தப்பட்டார், குறிப்பாக இவரது அமைச்சரான ஷா மிர் என்பவரால் இஸ்லாமியத்தை ஏற்க வற்புறுத்தப்பட்டார், இது அரசியல் காரணங்களுக்காகவும் இருக்கலாம். காஷ்மீருக்கு வெளியே உள்ள நாடுகளில் இஸ்லாம் சமயம் மிகுதியான அளவில் பரவிவந்த நிலையில், பெரும்பான்மை இந்துக்களுக்கு, [48] வேறு ஆதரவு இல்லாத நிலையிலும், ரின்சானாவுக்கு காஷ்மிரி முஸ்லிம்களின் ஆதரவு தேவையான நிலை இருந்தது. [47] இந்நிலையில் ரின்சானாவுக்கு பின் ஆட்சியைக் கவிழ்த்த அமைச்சர் ஷா மிர் தனது வம்சத்தின் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார். [48]
14 ஆம் நூற்றாண்டில், காஷ்மீரில் இஸ்லாம் படிப்படியாக மேலாதிக்கம் செய்யும் சமயமாக மாறியது.[49] இஸ்லாமிய போதகர் ஷேக் நூருதின் நூரானி, பாரம்பரியமான இந்து சமய துறவியைப்போன்ற மதிப்புக்கு உரியவராக இருந்தார், அவரது சொற்பொழிவுகளில் சூஃபி உள்ளுணர்வையும், காஷ்மீர சைவத்தையும் கலந்த கருத்துக்களை கொண்டதாக இருந்தது. [50] கிபி 1354-1470 காலகட்டத்துக்கு இடையே இருந்த சுல்தான்களில் சுல்தான் சிக்கந்தரைத் (1389-1413 CE) தவிர மற்றவர்கள் சமயப்பொறை கொண்டவர்களாக இருந்தனர். சுல்தான் சிக்கந்தர், இஸ்லாமியர் அல்லாதவர்கள்மீது கூடுதல் வரிகளை விதித்ததும், இஸ்லாமியத்துக்கு கட்டாய மதமாற்றங்களைச் செய்த்தோடு, சிலைகளை அழித்ததற்காக பட்டங்களையும் பெற்றார். [45] சுல்தான் செயின்-உல்-அபிடின் ( 1420-1470 கிபி) காஷ்மீரின் உள்ளூர் கலைஞர்களுக்குப் பயிற்சி அளக்க மத்திய ஆசியா மற்றும் பாரசீகத்திலிருந்து கலைஞர்களை கைவினைஞர்களை அழைத்துவந்தார். இவருடைய ஆட்சியில் மரவேலை, சால்வை மற்றும் கம்பள நெசவுக் கலை போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. [51] 1470களில் ஒருசில ஆண்டுகாலம், காஷ்மீருக்கு கப்பம் செலுத்திய ஜம்மு, பூஞ்ச், ரஜௌரி அரசுகள் சுல்தான் ஹாஜி கானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன. இருப்பினும், அவனது மகன் ஹசன் கான் கிபி 1472 இல் அரசராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் அடிபணிந்தன. [51] 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில், முஸ்லீம் முல்லாக்கள் மத்திய ஆசியா மற்றும் பாரசீகத்திலிருந்து காஷ்மீருக்கு புலம்பெயர்ந்து வந்தனர், இதன்பிறகு நீதிமற்றங்கள் போன்றவற்றில் இருந்த இந்தசமய பூசாரிகளின் செல்வாக்கு குறைக்கப்பட்டது, சமசுகிருதத்துக்கு பதிலாக பாரசீகம் ஆட்சி மொழியாக ஆனது. இதே காலகட்டத்தில், ஷா மிர் வம்சத்தினரை பதவியில் இருந்து விலக்க போதுமான சக்திவாய்ந்த குழுக்கள் உருவாகி இருந்தன. [51]
முகலாய தளபதி, மிர்சா முகமது ஹைதர் துக்ஹலத் கி.பி. 1540 இல் ஹுமாயூன் சார்பாக காசுமீரைத் தாக்கி கைப்பற்றினார். [45][52] ஷியாக்கள், ஷஃபீகள், சூபிகள் போன்றோர் சூர் அரசர்களின் தூண்டுதலில் காஷ்மீரில் கொடுமைமிக்க துக்ஹலத் ஆட்சியைக் கவிழ்க்கும் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. [53][52]
முகலாயர் காலம் (1580கள்–1750கள்)
காஷ்மீரில் முகலாயர் பாதூசாவின் நேரடி ஆட்சி நடந்ததிற்கான ஆதரங்கள் அக்பர் காலம்வரை இல்லை, கிபி 1589 இல் காஷ்மீர் பள்ளத்தாக்கு அக்பர் பயணம் மேற்கொண்டார். முகலாயர்கள் காஷ்மீரைக் கைப்பற்றி 1586 இல் தங்களது ஆப்கான் மாகாணத்தின் காபூல் சுபாவுடன் சேர்க்கப்பட்டது, ஆனால் ஷாஜகான் அதை ஒரு தனி சுபாவாக (ஏகாதிபத்திய உயர்நிலை மாகாணம்) பிரித்து, ஸ்ரீநகரை அடிப்படையாகக்கொண்டு ஏற்படுத்தினார். அடுத்தடுத்த முகலாய பேரரசர்கள் காலத்தின்போது பல புகழ்வாய்ந்த தோட்டங்கள், மசூதிகள், அரண்மனைகள் போன்றவை கட்டப்பட்டன. முகலாய பேரரசர் அவுரங்கசீப் கிபி 1658 இல் அரியணை ஏறினார். அவர் காலத்தில் மத வெறுப்புமிக்க பாரபட்ச வரிவிதிப்பு முறை மீண்டும் தோன்றியது. அவரது மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசின் செல்வாக்கு குறைந்தது. [45][52]
கிபி 1700 ல் ஒரு பணக்கார காஷ்மீர் வணிகரின் ஒரு வேலைக்கார்ர் மொ-இ முக்கியுமாஸ் என்றும் முகமதுவின் முடியுடன். பள்ளத்தாக்குக்கு வந்தார். இந்த முடி தால் ஏரிக் கரையில் உள்ள ஹஸ்ரத்பல் கோவிலில் வைக்கப்பட்டது.[54] கிபி 1738 இல் இந்தியாவின்மீதான நாதிர் ஷாவின் படையெடுப்புக்குப் பிறகு காஷ்மீர் மீதான மொகலாயர் ஆதிக்கம் பலவீனமானது. [54]
ஆப்கான் ஆட்சியாளர்கள் (1750கள்–1819)
1753 ஆம் ஆண்டில், அகமது ஷா துரானியின் படைத் தளபதியான அப்துல் கான் ஐசக் அக்குவாசி, காஷ்மீர் மீது படையெடுத்து வந்து ஆப்கானிஸ்தானின் துரானியப் பேரரசின் ஆதிக்கத்தில் காஷ்மீரை கொண்டுவந்தார். காஷ்மீரில் ஆப்கானின் ஆட்சியானது குறிப்பாக இந்துக்களுக்கு, மிகவும் கொடூரமானதாகவும் அடக்குமுறையானதாகவும் இருந்தது. இந்தக் காலத்தில் உள்ளூர்வாசிகள் பலர் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். ஆப்கானியர்கள் ஆதிக்கமானது 1772 இல் அகமது ஷா அப்தாலியின் மரணத்திற்குப் பிறகு குறைந்தது, என்றாலும் அவர்கள் மேலும் 47 ஆண்டுகள் காஷ்மீரை ஆட்சி செய்தனர்.[55][54]
சீக்கியர் ஆட்சிக்காலம் (1820–1846)
நான்கு நூற்றாண்டுகளாக மொகலாயர், ஆப்கானியர் போன்ற முசுலீம்களின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை 1819 இல், ஆப்கானிஸ்தானின் துரானிப் பேரரசை முறியடித்து, பஞ்சாபின் ரஞ்சித் சிங் தலைமையில் சீக்கியர்களின் படை கைப்பற்றியது. [56] ஆப்கானியர்களால் துன்பப்பட்டுக்கொண்டிருந்த, காஷ்மீரிகள் துவக்கத்தில் புதிய சீக்கிய ஆட்சியாளர்களை வரவேற்றனர். [57] எனினும், சீக்கிய ஆளுநர்கள் கடினமாக வேலைவாங்குபவர்களாக மாறிவிட்டார், சீக்கிய ஆட்சியானது பொதுவாக ஒடுக்குமுறை ஆட்சியாக கருதப்பட்டது. [58] சீக்கியப் பேரரசின் தலைநகரமாக லாகூர் இருந்து, காஷ்மீரை அவர்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்திவந்தனர். [59] சீக்கியர்கள் பசுவதைக்கு தூக்கு தண்டனை [57] உள்ளட்ட பல்வேறு முஸ்லீம்-எதிர்புச் சட்டங்களை இயற்றினர், [59] ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா பள்ளிவாசலை மூடுவது, மற்றும் தொழுகைக்காக பாங்கு என்னும் அழைப்புக்குத் தடை விதித்தனர். [59] கணிசமான அளவு முஸ்லீம் விவசாயிகள் படுமோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர், மேலும் சீக்கியர்கள் அளவுக்கதிகமான வரிகளை விதித்தனர். இக்காலகட்டத்தில் காஷ்மீர் ஐரோப்பியர்களின் பார்வையை ஈர்க்கத் தொடங்கியிருந்தது, அக்காலத்தின் சில கணக்குகளின்படி மிகுதியான வரிகளால், கிராமப்புறத்திலிருந்து மக்கள் சாரைசாரையாக வெளியேறினர். எனினும் 1832 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்குப் பிறகு, சீக்கியர்கள் நிலவரியை பெருமளவில் குறைத்தனர் மேலும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முன்வந்தனர்; சீக்கியப் பேரரசில் காஷ்மீர் பகுதி இரண்டாவது பெரிய வருமானம் ஈட்டும் பகுதியாக ஆனது. இக்காலத்தில் காஷ்மிரி சால்வைகள் உலகளாவில் அறியப்பட்டதாக ஆனது, குறிப்பாக மேலை நாடுகளில் வாங்குவோர் பலரை ஈர்த்தது. [59]
முன்னதாக, 1780 ஆம் ஆண்டு, ஜம்முவின் அரசர் ரஞ்சித் தியோ இறந்த பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு தெற்கே உள்ள ஜம்மு ராச்சியமானது சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டது, அதன்பின்னர் 1846 ஆம் ஆண்டு வரை, ஜம்மு சிக்கிய ஆதிக்கத்தில் இருந்து வந்தது. (Volume 15)|pp=94–95}} ஜம்மு மன்னர் ரஞ்சித் தியோவின் பெயரனான குலாப் சிங் சீக்கியப் பேரரசர் ராஜா ரஞ்சித் சிங் படையில் படைத்தலைவராக சேர்ந்து, முல்தான் மற்றும் ரியாசிப் போர்களில் ரஞ்சித் சிங்கின் முன்னரங்கப் படைத்தலைவராக செயல்பட்டார். இவரை ஜம்முவின் சீக்கியப் பேரரசின் ஆளுனராக குலாப் சிங் 1820 இல் நியமிக்கப்பட்டார்.
அவரது அதிகாரி, ஜோராவார் சிங் உதவியுடன், குலாப் சிங் விரைவில் ஜம்முவின் கிழக்குப் பகுதியில் இருந்த சீக்கியர்களின் வடகிழக்கு லடாக் பால்தி்ஸ்தானையும் ஆகிய நில்பரப்புகளை நிலங்களை கைப்பற்றப்பற்றினார்.[56]
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் (டோக்ரா வம்சம், 1846-1952)
1845 ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் வெடித்தது, போரின் முடிவில் சீக்கியர்கள் காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். 84,471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லடாக் உள்ளிட்ட காஷ்மீர் பகுதியை, ஆங்கிலேயர்கள், 16 மார்ச் 1846-இல் ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் ரூபாய் 27 இலட்சத்திற்கு விலைக்கு விற்று விட்டனர்.[60] எனவே 16 மார்ச் 1846 முதல் குலாப் சிங் சம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார். 1857-இல் குலாப் சிங்கின் மறைவுக்கு பின், அவரது மகன் ரண்பீர் சிங், ஜம்மு காஷ்மீரின் மன்னரானார்.
ஜம்மு காஷ்மீர் இராச்சியமானது முற்றிலும் வேறான புவியியல் பகுதிகளையும், பல சமய மக்களையும் இணைத்ததாக இருந்தது, இதன் கிழக்குப் பகுதியான, கார்கில் உள்ளிட்ட லடாக்கில் உள்ள சியா இசுலாமியர்களும், பௌத்த மக்களும் இருந்தனர். இங்குள்ள பௌத்த சமயத்தினரின் பண்பாடு, திபெத்தியப் பன்பாடாக இருந்தது, தெற்கில் உள்ள ஜம்முவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்களின் கலவையான மக்கள்தொகையைக் கொண்ட பகுதியாக இருந்தது; மக்கள் செறிந்துவாழும் நடுவில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் தொகையில் மிகப்பெருமளவிலானவர்கள் சுன்னி முஸ்லீம்களாக இருந்தனர், எனினும், அங்கு ஓரளவுக்கு சிறிய எண்ணிக்கையில் ஆனால் செல்வாக்கு மிக்கதாக சிறுபான்மை இந்து சமய காஷ்மீர பண்டிதர்கள் இருந்தனர், வடக்கில் உள்ள வடக்கு நிலங்கள் பகுதியில் உள்ள பல்திஸ்தானில் லடாக் தொடர்பான மக்களைக் கொண்டிருந்தன, மேலும் கில்ஜித் பகுதியில், பெரும்பாலும் ஷியா குழுக்கள் பரவி இருந்தது; மேலும் மேற்குப் பகுதி வரை, பூஞ்ச்ச்சில் முஸ்லீம் மக்கள் இருந்தனர், ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட பல்வேறு இன மக்கள் கலவையாக வழ்ந்தனர்.
1947-2019
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏறினார். 1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், தனது ஜம்மு காஷ்மீர் இராச்சியமானது, ஆங்கிலேயரின் மேலாண்மையில் இருந்து விடுபட்டது. இந்நிலையில் மன்னரின் அடக்குமுறை வரிவிதிப்புக்கு எதிராக பூஞ்ச் பகுதியில் கலகம் தொடங்கியது, ஆகத்து மாதத்தில், பாக்கித்தானோடு காஷ்மீரை இணைக்கவேண்டுமென்று நடந்த ஆர்பாட்டக்காரர்கள் மீது மகாராஜாவின் படைகள், சுட்டன, பல கிராமங்களை முழுமையாக எரித்தனர், பல அப்பாவி மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.[61] அக்டோபர் 24 அன்று பூஞ்ச் போராளிகள் "ஆசாத்" காஷ்மீர் என்ற சுயாதீனமான அரசாங்கத்தை அறிவித்தனர்.[62] புவியியல் நெருக்கம் போன்றவற்றை கருதாது, மக்கள் விருப்பத்தை கணக்கில் கொண்டு, மன்னராட்சி இராச்சியங்கள் இந்தியா அல்லது பாக்கிஸ்தான் ஒன்றியங்களில் தங்கள் பகுதிகளை இணைக்க ஊக்குவிக்கப்பட்டனர். 1947 இல், காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் "77% முஸ்லீம் மற்றும் 20% இந்து சமயத்தவர்" என்ற எண்ணிக்கையில் இருந்தனர். [63] மகாராஜா அவசர அவசரமாக, இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பயணம் போன்ற சேவைகளை உறுதி செய்யும்விதமாக பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியாவுடனான இத்தகைய ஒப்பந்தம் நிலுவையில் வைக்கப்பட்டது.[64] 1947 அக்டோபரில் ஜம்முவில் பெரும் கலவரங்கள் துவங்கின, பூஞ்ச் போராளிகள் பாக்கிஸ்தானின் வட-மேற்கு எல்லைப் புற மாகாணத்தைச் சேர்ந்த பஷ்டூன்களை கலகத்துக்கு அமர்த்தினார், இவர்கள் காஷ்மீர்மீது படையெடுத்தனர், இவர்கள் பூஞ்ச் போராளிகளுடன் இணைந்து, படையெடுப்பின்போது சக பூஞ்ச் மற்றும் ஜம்மு முஸ்லிம்களுக்கு எதிராகவே அட்டூழியங்களில் ஈடுபட்டனர். இப்பழங்குடிகள் வழியெங்கும் கொலைகள், சூறையாடல் ஆகியவற்றைச் செய்தபடி வந்தனர்.[65][66] இந்த கொரில்லா இயக்கமும் அதன் நோக்கமும் ஹரி சிங்கை பேரளவு அச்சுறுத்துவதாக இருந்தது. இதனால் மகாராஜா உதவிவேண்டி இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார், அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான லார்டு மவுண்ட்பேட்டன் பிரபு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஒப்புக் கொண்டார். [63] மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின், இந்திய வீரர்கள் காஷ்மீருக்குள் நுழைந்து பாக்கிஸ்தான் ஆதரவு கொரில்லா போராளிகளை ஒடுக்கினர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பான ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்த்த்தில் இது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும்,[67] மக்களின் விருப்பமே இறுதியானது என்றும் கூறப்பட்டது. காஷ்மீர் தலைவர் சேக் அப்துல்லாவை காஷ்மீரின் நிர்வாகத் தலைவராக மகாராஜா நியமித்தார்.[68] இதற்கிடையில் இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.
2019க்கு பிறகு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகத்து, 2019 (திங்கட்கிழமை) அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.[69][70]
சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-எ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.[71] நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. துணை-நிலை ஆளுநரின் கீழ் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) நிறுவப்பட்டது.2022ல் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின் படி, ஜம்மு காஷ்மீரின் 114 தொகுதிகள் உருவாக்கப்பட்டது. அதில் 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டது. 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Primary sources
வரலாற்றிலக்கியத்தொகுப்பு
- Ganguly, D.K. (1985), History and Historians in Ancient India, Abhinav Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-391-03250-7
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Ghose, D. K. "Source-Material for the History of Kashmir (Second Half of the Nineteenth Century)," Quarterly Review of Historical Studies (1969) 9#1 pp 7–12.
- Hasan, Mohibbul (1983), Historians of medieval India, Meenakshi Prakashan, இணையக் கணினி நூலக மைய எண் 12924924
{{citation}}
: More than one of|OCLC=
and|oclc=
specified (help) - Hewitt, Vernon. "Never Ending Stories: Recent Trends in the Historiography of Jammu and Kashmir," History Compass (2007) 5#1 pp 288–301. covers 1846 to 1997
- Lone, Fozia Nazir. "From 'Sale to Accession Deed'- Scanning the Historiography of Kashmir 1846–1947." History Compass (2009) 7#6 pp 1496–1508.
- Sharma, Tej Ram (2005), Historiography: A History of Historical Writing, Concept Publishing Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8069-155-3
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Sreedharan, E. (2004), A Textbook of Historiography: 500 BC to AD 2000, Orient Blackswan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-2657-0
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help) - Zutshi, Chitralekha. "Whither Kashmir Studies?: A Review." Modern Asian Studies (2012) 46#4 pp 1033–1048
- Zutshi, Chitralekha. "Past as tradition, past as history: The Rajatarangini narratives in Kashmir’s Persian historical tradition." Indian Economic & Social History Review (2013) 50#2 pp 201–219.
வெளி இணைப்புகள்
- Baharistan -i Shahi A Chronicle of Medevial Kashmir translated into English பரணிடப்பட்டது 2013-09-22 at the வந்தவழி இயந்திரம்
- Conflict in Kashmir: Selected Internet Resources by the Library, University of California, Berkeley, USA; Bibliographies and Web-Bibliographies list
- Kashmir Website with Historical Timeline
- Coins of the Kashmir Sultanate (1346–1586)
- (எபிரேய மொழி) "The Great History of the Events of Kashmir" from 1821