2022 மணிப்பூர் நிலச்சரிவு
2022 மணிப்பூர் நிலச்சரிவு (2022 Manipur landslide) இந்திய மாநிலமான மணிப்பூரில் 30 சூன் 2022 அன்று இரவு ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.[2][3] இந்நிகழ்வில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காணாமல் போயுள்ளனர்.[4]
நாள் | 30 சூன் 2022 |
---|---|
நேரம் | ≈02:00 IST (ஒ.ச.நே + 05:30)[1] |
அமைவிடம் | நோனி மாவட்டம், மணிப்பூர், இந்தியா |
வகை | நிலச்சரிவு |
இறப்புகள் | 43 |
காணாமல் போனோர் | 20 |
நிலச்சரிவு
நோனி மாவட்டத்தில், 107 பிராந்திய இராணுவ முகாமில், துபுல் ரயில்வே கட்டுமானப் பகுதிக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட எட்டு இறப்புகளும் பிராந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர். இயிரிபாம் மாவட்டத்தை மணிப்பூரின் தலைநகரான இம்பாலுடன் இணைக்கும் ரயில்பாதை கட்டுமானத்திற்கான பாதுகாப்புப் பணியாளர்களாக இக்குழு செயல்பட்டது. இச்செய் ஆற்றின் அருகே அணை கட்டப்படவுள்ள இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது . அணை கட்டினால் பெரிய வெள்ளம் ஏற்பட்டு பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என மீட்புக்குழுவினர் நம்புகின்றனர்.[5]
மீட்புப் பணிகள்
மணிப்பூர் அரசாங்கம் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தேசிய பேரிடர் மீட்புப் படையையும் மாநில பேரிடர் மீட்புப் படையையும் திரட்டியது.[6] 250-எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், மீட்புப் படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.[7] மண்வாரிகள் மற்றும் அகழ் எந்திரங்கள் அருகிலுள்ள ஆற்றில் சடலங்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டன. காணாமல் போன 50 முதல் 72 நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக அசாம் துப்பாக்கிப் பிரிவு இராணுவத்தினர் மற்றும் பிராந்திய இராணுவத்தினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.[8] காணாமல் போனவர்களில் இருபத்து மூன்று முதல் 43 பேர் பிராந்திய இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[5]
சூலை 2 ஆம் தேதிக்குள் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.[9][10] குறைந்தது 28 பேரைக் காணவில்லை.[9] 13 பிராந்திய இராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உட்பட 19 பேர் ஆபத்தின்றி மீட்கப்பட்டனர்,[11] . மேலும் பலரை தேடும் பணி இரவு வரை தொடரும் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.[12] காயமடைந்தவர்கள் நோனி இராணுவ மருத்துவப் பிரிவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.[8]
சூலை 3 அன்று மொத்த இறப்பு எண்ணிக்கை 42 ஆக இருந்தது. மேலும் 20 பேர் காணாமல் போயிருந்தனர்.[13] இதில் குறைந்தது 27 பேர் பிராந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். சாதகமற்ற வானிலை மற்றும் புதிய நிலச்சரிவுகள் மீட்பு முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியது. மீட்புப் பணிகளின் போது பாறைகள் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. புதையுண்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் கண்டறிய மீட்புப் பணியாளர்கள் ரேடார் மற்றும் மோப்ப நாயைப் பயன்படுத்தினர்.[14] நிலச்சரிவால் அணைக்கட்டப்பட்ட ஏரியை காலி செய்வதற்காக இச்செய் ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியும் நடந்தது[13]
விளைவுகள்
வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நோனி மாவட்டத்தில் உள்ள மக்கள் இச்செய் ஆற்றை நெருங்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயை நிவாரணத் தொகையாகவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று கூறினார். தேசிய நெடுஞ்சாலை 37 இல் பயணத்தைத் தவிர்க்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.