இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்
இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் (Isra and Mi'raj, அரபு மொழி: الإسراء والمعراج)என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும். இது இசுலாமிய நம்பிக்கையின் படி கி.பி. 621 இல் ஒரே இரவில் நிகழ்த்திய இரவுப் பயணம் ஆகும். இது உடல் மற்றும் ஆன்மீக பயணம் என இரு வழிகளில் விளக்கப்படுகிறது.[1]
குர்ஆன் மற்றும் ஹதீஸ்
இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் தொடர்பான செய்திகள் குர்ஆனில் அல்-இஸ்ரா அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.[2] மற்ற அதிக கருத்துக்கள் ஹதீஸ் நூல்கள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன.[3]
பயணம்
முகம்மது நபி அரேபிய பாலைவனத்தின் மக்கா நகரிலிருந்து ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலுக்கு இரவோடு இரவாக வானவர் ஜிப்ரயீல் மூலம் புராக் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி இஸ்ரா (இரவில் கூட்டிச் செல்லுதல் ) என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் அல் அக்சா பள்ளிவாசலில் இருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது. விண்ணுலகம் சென்ற முகம்மது நபி இறைவனைச் சந்தித்துப் பேசினார் என்பது இசுலாமிய நம்பிக்கை ஆகும்.[3][4][5]
குர்ஆன் வசனங்கள்
முகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் 17:1 வருமாறு:
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் (இறைவன்) தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.[2]
ஹதீஸ்
முகம்மது நபியின் மிஃராஜ் பயண நிகழ்வை நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:
பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளிவாசலில் நுழைந்தேன். என்று முகம்மது நபி கூறியதாக அனஸ் எனும் நபித்தோழர் கூறினார்.[6]