திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.[6] இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும். இராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். [7] [8] இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அக்கட்சி பொதுச்செயலாளர்கள் தெரிவித்தனர்.[9] தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியது. அதன்படி, தி. மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[10] [11] திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் தாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்களவை தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது என்றும் தொகுதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். தனிச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்றும் கூறினார். [12] திமுக கூட்டணியில் காங்கிரசு தமிழகத்தில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.[13]இந்திய பொதுவுடைமை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட இருப்பதாக அறிவித்தது. இதேபோல் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சியம்) கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[14] [15] திமுக அணியில் காங்கிரசு கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[16] காங்கிரசு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது அந்த கட்சிக்கு ஆரணி, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லையை திமுக ஒதுக்கியது. [17] திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18] திமுக கூட்டணியில் இந்திய பொதுவுடமைக் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயனும் நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராசும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.[19]
22 ஜனவரி 2024 அன்று, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது.[20][21] அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டது.[22]
பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் பேட்டியளித்தார்.[23] மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது[24]
தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி
- நாம் தமிழர் கன்னியாகுமரி, தென் சென்னை, திருநெல்வேலிக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[25] [26] [27][28]
நாம் தமிழர் 2019 முதல் பயன்படுத்தி வரும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.[29][30] [31] இதனால் விவசாயி சின்னத்தை இக்கட்சி இழந்துள்ளது. முதன் முதல் இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டது, உள்ளாட்சி தேர்தல் உட்பட கடைசி ஆறு தேர்தல்களில் விவசாய சின்னத்தில் போட்டியிட்டது.
ஏப்ரல் 19 அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உத்தேசமாக 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏப்ரல் 20 அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.[32] [33]
மூன்றாவது முறையாக இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் 12.44 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..[34][35]