இராம நவமி
இராம நவமி (Rama Navami) ( சமக்கிருதம்: राम नवमी ) விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.[1][2] இந்த விழா, வசந்த காலத்தில் சைத்ர நவராத்திரியின் ஒரு பகுதியாகும். 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நிகழும். இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இராம நவமி ஒரு விருப்ப விடுமுறையாக வழங்கப்படுகிறது.
இராம நவமி | |
---|---|
இராமன் (நடு), சீதை (வலது), இலட்சுமணன் (இடது) மற்றும் அனுமான் (இடது கீழ்). | |
பிற பெயர்(கள்) | ஸ்ரீ ராம நவமி |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இராமனின் பிறந்தநாள்; இராமன் மற்றும் சீதையின் கல்யாண தினம் |
கொண்டாட்டங்கள் | 1 - 9 நாட்கள் |
அனுசரிப்புகள் | பூசைகள், விரதம், விருந்து |
தொடக்கம் | சித்திரை நவமி; சித்திரை மாதத்தின் 9ம் நாள் |
நாள் | Chaitra Shukla Navami |
தொடர்புடையன | இராமர், சீதை |
சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது [3][4].
இராமநவமிக் கொண்டாட்டம்
இராமனின் கதையை விவரிக்கும் இந்து இதிகாசமான இராமாயணம் உட்பட இராம கதைகளை வாசிப்பதன் மூலம் நாள் குறிக்கப்படுகிறது. சில வைணவ இந்துக்கள் கோவிலுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்குள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிலர் பூஜை மற்றும் ஆரத்தியின் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய பஜனை அல்லது கீர்த்தனையில் பங்கேற்கின்றனர்.[5] சில பக்தர்கள் இராமனின் குழந்தைப் பருவ சிறிய உருவங்களை எடுத்து, அவற்றிக்கு ஆடை அணிவித்து, பின்னர் தொட்டில்களில் வைப்பதன் மூலம் நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். தொண்டு நிகழ்வுகள் மற்றும் சமூக உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த விழா பல இந்துக்களுக்கு தார்மீக பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாகும்.[6] சிலர் இந்த நாளை விரதமிருந்தும் கழிக்கின்றனர்.[7]
இந்த நாளில் அயோத்தி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான இராமன் கோவில்களில் முக்கியமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இராமன், சீதை, அவரது சகோதரர் இலட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் இரத ஊர்வலங்கள், பல இடங்களில் நடத்தப்படுகின்றன.[8][9] அயோத்தியில், பலர் புனித ஆறான சரயுவில் நீராடிவிட்டு இராமன் கோயிலுக்குச் செல்கின்றனர்.[10][11]
கொண்டாட்டங்கள்
சைத்ர (வசந்தம்) நவராத்திரியின் ஒன்பதாவது மற்றும் கடைசி நாள் (நன்கு அறியப்பட்ட இலையுதிர்கால நவராத்திரியுடன் குழப்பமடையக்கூடாது).[12] இது விஷ்ணுவின் 7 ஆவது அவதாரமான இராமனின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். உண்ணாவிரதமிருந்து இராம கதையை படிப்பதன் மூலமும், பஜனை மற்றும் கீர்த்தனை போன்ற பக்தி வழிபாடுகள் மூலமும் இது நம்பிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. இராமாயணத்தில் இராமனின் வாழ்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் முக்கிய கொண்டாட்டங்கள் கடைப்பிடிக்கின்றன.<[12] அயோத்தி (உத்தர பிரதேசம்), இராமேசுவரம் ( தமிழ்நாடு ), பத்ராச்சலம் ( தெலங்காணா ) மற்றும் சீதாமர்ஹி (பீகார்) ஆகியவை இதில் அடங்கும்[13][14]. சில இடங்களில் இரத யாத்திரைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சில இடங்களில் இராமன் மற்றும் சீதையின் திருமண விழாவாகவும் ( கல்யாண உற்சவம்) கொண்டாடப்படுகிறது.[10][13][15][16].
இந்த விழா இராமனின் பெயரால் அழைக்கப்பட்டாலும், இராமனின் வாழ்க்கைக் கதையில் சீதை, இலட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விழா பொதுவாக நடத்தப்படுகிறது.[17] சில வைணவ இந்துக்கள் இந்துக் கோயில்களில் திருவிழாவைக் கடைப்பிடிக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடுகிறார்கள்.[18] சூரியக் கடவுளான சூரியன் சில சமூகங்களில் வழிபாடு மற்றும் விழாக்களில் ஒரு பகுதியாக உள்ளார்.[18] சில வைணவ சமூகங்கள் சைத்ர (வசந்த) நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இராமனை நினைத்து இராமாயணத்தைப் படிப்பதன் மூலம் அனுசரிக்கின்றன.[12] சில கோயில்கள் மாலையில் சிறப்பு சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கின்றன.[18] தேவைப்படுபவர்களுக்கு உதவும் தொண்டு நிகழ்வுகள் மற்றும் சமூக உணவுகள் கோயில்கள் மற்றும் வைணவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் பல இந்துக்களுக்கு இது தார்மீக பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாக இவ்விழா இருக்கிறது.[13]
கர்நாடகாவில், ஸ்ரீராமநவமி உள்ளூர் அமைப்புகளால் சில இடங்களில், நடைபாதைகளிலும் கூட, இலவச பானகம் (வெல்லம் கலந்த பானம்) மற்றும் சில உணவுகளை வழங்கி கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, பெங்களூரு, கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் ஸ்ரீராமசேவா மண்டலி, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க, ஒரு மாத கால பாரம்பரிய இசை விழாவை நடத்துகிறது. 80 ஆண்டுகள் பழமையான இந்த இசைவிழாவில் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர்கள், அவர்களது மதத்தைப் பொருட்படுத்தாமல், கருநாடக இசை (தென்னிந்திய இசை) மற்றும் இந்துஸ்தானி இசை (வட இந்திய இசை) ஆகிய இரு வகைகளில் இருந்தும் - இராமனுக்கும் கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கும் தங்கள் இசையை வழங்குவதற்காக வருகின்றனர்.[19]
தென்னிந்திய இராமநவமி
தென்னிந்தியாவில் இந்த நாள் இராமன், சீதை ஆகியோரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது.[20][21].
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலத்தில் நடத்தப்படும் "கல்யாணம்" மிகவும் பிரபலமானதாகும்[22]பல ISKCON கோவில்கள் இந்து பிரார்த்தனைக் கூட்டத்தின் வளர்ச்சியின் தேவையைக் கருத்தில் கொண்டு விடுமுறை தினத்தின் நிகழ்ச்சியாக மிகவும் பிரபலமான கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது வழக்கமான காராப்டா நாட்காட்டியின்படி பக்தர்கள் விரதமிருப்பதுடன் குறிப்பிட்ட கூடுதல் தேவைகளுடன் குறிப்பிடத்தக்க நாட்காட்டி நிகழ்வாக இருக்கிறது.[23]
ஒடிசா, சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களில், ஜெகந்நாதர் கோயில்கள் மற்றும் பிராந்திய வைணவ சமூகம் இராம நவமியைக் கொண்டாடுகிறது. மேலும் கோடையில் அவர்களின் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரைக்கான தயாரிப்புகள் தொடங்கும் நாளாகக் கருதுகின்றன.[24]
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் இந்தியாவை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட இந்திய ஒப்பந்த ஊழியர்கள் 1910 ஆம் ஆண்டுக்கு முன் காலனித்துவ தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தனால் பேரில் டர்பன், டிரினிடாட் மற்றும் டொபாகோ, கயானா, சுரிநாம், ஜமேக்கா, பிற கரிபியன் நாடுகள், மொரிசியசு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிபுரிந்து வந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் இராமாயணத்தை பாராயணம் செய்தும், தியாகராஜர் மற்றும் பத்ராச்சல இராமதாசு ஆகியோரின் பாடல்களைப் பாடியும் இந்துக் கோவில்களில் இராம நவமியை தங்கள் பாரம்பரிய பண்டிகைகளுடன் தொடர்ந்து அனுசரித்து வருகின்றன.[25]
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்துடன் தொடர்புடைய பக்தர்கள் பகல் முழுவதும் விரதம் இருக்கிறார்கள்.[18] பல அகில உலக கிருஷ்ண பக்திக் கழகக்கோவில்கள், வளர்ந்து வரும் பூர்வீக இந்து சபையின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் விடுமுறை தினத்தை மிகவும் முக்கியமான கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தின. எவ்வாறாயினும், இது பாரம்பரிய கௌரப்தா நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க நாட்காட்டி நிகழ்வாக இருந்தது. பக்தர்களால் விரதம் இருக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட கூடுதல் தேவை உள்ளது.[26] மேலும் இது பிஜியில் உள்ள இந்துக்களாலும் வேறு இடங்களில் மீண்டும் குடியேறிய பிஜி இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது.[27]
முக்கியத்துவம்
தீமையின் மீதான நன்மையின் வெற்றியையும், அதர்மத்தை வெல்லும் தருமத்தை நிலைநாட்டுவதையும் குறிக்கும் வகையில் இவ்விழாவின் முக்கியத்துவம் உள்ளது. சூரிய குல வழித்தோன்றல்கள் இராமனின் முன்னோர்கள் என்ற நம்பிக்கையினால் அதிகாலையில் சூரியனை வணக்குவதன் மூலம் இராம நவமி விழா கொண்டாடப்படுகிறது.[28][29]