உயர் வகுப்பு
தற்காலச் சமூகத்தில் உயர் வகுப்பு (upper class) என்பது, மிகக் கூடிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களாகவும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட சமூக வகுப்பு ஆகும்.[1] இந்த நோக்கில் உயர் வகுப்பு, பொதுவாகத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படும் செல்வத்தினால் அடையாளம் காணப்படுகிறது.[2] 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இவ்வகுப்பினரைக் குறிக்க உயர்குடியினர் என்னும் சொல் பயன்பட்டது.[3]
சமூகமொன்றின் மேற்குறித்த உயர் வகுப்பினர் தாம் வாழும் சமூகத்தை இப்போது ஆட்சி செய்வதில்லை என்பதால், இவர்கள் பழம் உயர் வகுப்பினர் எனப்படுகின்றனர். இவர்கள், தற்காலச் சமூக மக்களாட்சிகளின் பொது வாழ்க்கையில் ஆதிக்கம் கொண்டுள்ள பணக்கார மத்திய வகுப்பினரிலிருந்து பண்பாட்டு அடிப்படையில் வேறுபட்டவர்களாவர். இச்சொல், சமூக அடுக்கமைவு மாதிரியில் மேல் மத்திய வகுப்பு, மத்திய வகுப்பு, உழைக்கும் வகுப்பு போன்றவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
வரலாற்றுப் பொருள்
சில பண்பாடுகளில் இவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்ட அல்லது பழைய தலைமுறைகளிடம் இருந்து கிடைத்த முதலீடுகளில் (பெரும்பாலும் அசையாச் சொத்துக்கள்) இருந்து வாழ்க்கையை நடத்துவதால், இவர்கள் உழைப்பதில்லை. இவர்கள் வணிகர்களை விடக் குறைவான உண்மையாக பணத்தையே வைத்திருக்கக்கூடும். உயர் வகுப்புத் தகுதி ஒருவரது குடும்பத்தில் சமூகத் தகுதிநிலை காரணமாகவே ஏற்படுகின்றதேயன்றி, அவருடைய சொந்தச் சாதனைகளாலோ செல்வத்தினாலோ ஏற்படுவதில்லை. உயர் வகுப்பில் அடங்கக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் குடியினர், அரச குடும்பத்தினர், பிரபுப் பட்டம் கொண்டோர், உயர்நிலை மதகுருக்கள் ஆகியோராவர். இவர்கள் பிறக்கும்போதே அத்தகுதியுடனே பிறக்கின்றனர். அத்துடன் வரலாற்றில் வகுப்புக்களிடையே நகர்வுகள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.
பல நாடுகளில் உயர் வகுப்பு என்னும் சொல் தலைமுறைகளூடான நில உடைமையோடு நெருங்கிய தொடர்புகொண்டது. பிற வகுப்பினர் நிலத்தை உடைமையாக வைத்திருப்பதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லாதிருந்தபோதும் பல முன்தொழிற் சமூகங்களில் மரபுவழியான நில உடைமையாளர்களே அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தனர்.