தலைமுறை இடைவெளி
தலைமுறை இடைவெளி (Generation gap) என்பது, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையே, இசை, அரசியல், விழுமியங்கள் முதலிய விடயங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாட்டைக் குறிக்கும். பொதுவாக இவ்வேறுபாடுகள் இளையோருக்கும் அவர்களது பெற்றோர் அல்லது அதற்கு முந்திய தலைமுறையினருக்கும் இடையே ஏற்படுகிறது.[1] இளைஞர்கள், தமது பெற்றோர்கள் முன்னர் நம்பிக்கை வைத்திருந்த பல விடயங்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டிருந்த ஒரு சூழலில், தலைமுறை இடைவெளி குறித்த சமூகவியல் கோட்பாடு 1960களில் கவனத்துக்கு வந்தது.
தற்காலத்தில், சமூகவியலாளர்கள், தலைமுறை இடைவெளியை "நிறுவனமய வயது அடிப்படையிலான பிரிவாக்கம்" எனக் குறிப்பிடுகின்றனர். சமூகவியலாளர்கள் மனிதனின் வாழ்க்கைக் காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். இவை, சிறுபிராயம், நடுவயது, ஓய்வுக்காலம் என்பன. இதில் ஏதாவதொரு பிரிவினர் தமது முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது மற்ற இரு பிரிவினரிடமிருந்தும் தனிப்பட்டே செயற்படுகின்றனர். வீட்டுச் சூழல்களில் மட்டுமல்லாமல், சமூகச் செயற்பாடுகளிலும்கூட ஒரு பிரிவினர் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டுச் செயற்படுவதற்கான வழிவகைகளைத் தேடுகின்றனர்.