திகம்பரர்
திகம்பரர் (/dɪˈɡʌmbərə/; "வான்-ஆடையினர்") என்போர் சமணத்தின் இரு பெரும் பிரிவினர்களுள் ஒருவராவர். மற்றைய பிரிவினர் சுவேதாம்பரர் (வெள்ளை-ஆடையினர்) ஆவர். திகம்பரர்கள் எனும் சமக்கிருதப் பெயர், இப்பிரிவினர் ஆடைகள் அணிவதையோ அல்லது ஆடைகளைத் தம்வசம் வைத்திருக்கும் வழக்கத்தையோ மேற்கொள்ளாத காரணம் பற்றி ஏற்பட்டது.[1]
திகம்பர மற்றும் சுவேதாம்பர மரபுகளிடையே தமது ஆடைக் கட்டுப்பாடுகள், கோவில்கள் மற்றும் படிமங்கள், பெண்துறவிகள் தொடர்பான அணுகுமுறை, மரபுக் கதைகள் மற்றும் புனித நூல்கள் போன்ற பல்வேறு விடயங்களில் வரலாற்று ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன.[2][3][4]
திகம்பரத் துறவிகள் எந்தவொரு பொருள் மீதிலும் பற்றின்மை மற்றும் உரிமை பாராட்டாமை ஆகிய அறத்தைக் கைக்கொள்கின்றனர். துறவிகள் ஒரு துறவுக் குழுவுக்கே பொதுவான பிச்சி எனப்படும் மயிற்பீலியைக் கொண்டு செல்வர். இது தானாய் விழுந்த மயிலிறகுகளால் செய்யப்பட்டது. இதனைக் கொண்டு தாம் செல்லும் வழியை அல்லது அமரும் இடத்தைக் கூட்டி அங்கு காணப்படும் பூச்சிகளின் உயிர்களை காப்பதற்குப் பயன்படுத்துவர்.[1]
திகம்பர இலக்கியங்கள் முதலாம் ஆயிரவாண்டில் எழுதப்பட்டனவாகும். இவற்றுள் பழைமையானது (மூதபித்திரி ஓலைச்சுவடி) தாரசேனரால் இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட சட்கண்டாகமம் ("ஆறு பகுதிகளடங்கிய புனித நூல்") ஆகும்.[5] திகம்பரப்பிரிவின் மிகவும் முக்கிய அறிஞர்களுள் குந்தகுந்தரும் ஒருவராவார்.
திகம்பர சமணப் பிரிவினர் பெரும்பாலும் கர்நாடகத்தின் சமணக் கோவில்களிலும், தென் மகாராட்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் உள்ளனர்.[6][4] இந்து மற்றும் சமணக் கற்கைகளில் வல்லவரான செஃப்ரி டி. லோங் என்பவரின் கருத்துப்படி, இந்தியாவிலுள்ள சமணர்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானோரே திகம்பர மரபைப் பின்பற்றுகின்றனர்.[7]