தோபா எரிமலை வெடிப்பு
தோபா எரிமலை வெடிப்பு என்பது, 69,000 - 77,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவின் சுமாத்திராவில் உள்ள இன்றைய தோபா ஏரிப் பகுதியில் ஏற்பட்ட பேரெரிமலை வெடிப்பு ஆகும். இது உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய எரிமலை வெடிப்புக்களுள் ஒன்று. இதன் அடிப்படையில் உருவான டோபா பேரழிவு எடுகோளின்படி இந்த நிகழ்வு 6-7 ஆண்டுகள் நீடித்த உலகம் தழுவிய எரிமலைக் குளிர்காலத்தை உருவாக்கியதுடன், 1000 ஆண்டுகள் எடுத்த குளிர்வுக் காலகட்டம் ஒன்றுக்கும் காரணமானது.
தோபா எரிமலை வெடிப்பு | |
---|---|
சிமெயுலுவே தீவுக்கு மேல் 26 மைல்கள் (42 கிமீ) உயரத்தில் இருந்து, வெடிப்பு எப்படி இருந்திருக்கும் எனக் காட்டும் படம். | |
எரிமலை | தோபா பேரெரிமலை |
தேதி | 69,000–77,000 ஆண்டுகளுக்கு முன்பு |
வகை | Ultra Plinian |
அமைவிடம் | சுமாத்திரா, இந்தோனீசியா 2°41′04″N 98°52′32″E / 2.6845°N 98.8756°E |
எ.வெ.சு | 8.3 |
தாக்கம் | 6 ஆண்டுகள் எரிமலைக் குளிர்காலம், மக்கள்தொகைச் சுருக்கநிலை, பிரதேச இடவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்பன.[1] |
டோபா ஏரி. வெடிப்பினால் உருவான குழிவு ஏரி. |
மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட்ட பேரெரிமலை வெடிப்பு தோபா நிகழ்வேயாகும்.[2][3][4] 1993ல் அறிவியல் ஊடகவியலாளர் ஆன் கிப்பன்சு இந்த வெடிப்புக்கும், மனிதகுல வளர்ச்சியின் சுருக்க நிலைக்கும் தொடர்பு உள்ளது என்னும் கருத்தை முன்வைத்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் ஆர். ராம்பினோவும், மனோவாவில் உள்ள அவாய்ப் பல்கலைக்கழகத்தின் இசுட்டீபன் செல்ஃப் என்பவரும் இந்தக் கருத்தை ஆதரித்துள்ளனர். 1998ல், உர்பானா-சம்பைனில் உள்ள இல்லினோயிசுப் பல்கலைக்கழகத்தின் இசுட்டான்லி எச். அம்புரோசு, மக்கள்தொகைச் சுருக்கக் கோட்பாட்டை (bottleneck theory) மேலும் வளர்தெடுத்தார்.