பேய்க்கணவாய்
பேய்க்கணவாய் | |
---|---|
பொதுவான எண்காலி Octopus vulgaris. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | உறை ஒத்திருப்பி |
பெருவரிசை: | எண்காலி வடிவி |
வரிசை: | எண்காலி வில்லியம் லீச், 1818[1] |
துணை வரிசைகள் | |
†Pohlsepia (incertae sedis) | |
வேறு பெயர்கள் | |
|
பேய்க்கணவாய் (ஆங்கிலம்: Octopus) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளன. தலைக்காலிகள் (cephalopod) வகுப்பில், 300 வகையான பேய்க்கணவாய்கள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
பேய்க்கணவாயின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. பேய்க்கணவாய்க்கு மூன்று இதயங்கள் உண்டு. இதன் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இதன் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப் பொருள் உள்ளதால், உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). பேய்க்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.
பேய்க்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்பெரிய எண்காலிகள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்காகப் புணர்ந்தபின் ஆண் பேய்க்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் பேய்க்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
இது முள்ளந்தண்டற்றது. முள்ளந்தண்டுளிகளுள் மொலஸ்கா இனத்தை சேர்ந்ததாகும்.
உலகத்திலுள்ள எல்லா சாக்குக்கணவாய்களும் நச்சுத் தன்மை உடையன என்றாலும் நீல வளையங்களைக் கொண்ட பேய்க்கணவாய் மட்டுமே மனிதரைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மையானது. இந்த அழகான பேய்க்கணவாய் உலகிலுள்ள மிகவும் நச்சுத் தன்மையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் நஞ்சுக்கு மாற்று மருந்து கிடையாது என்பதும் கவனிக்கத் தக்கது.[2]
உருமாற்றம் மற்றும் நிறமாற்றம்
இரையை வேட்டையாடவும் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் பேய்க்கணவாய்கள் உருமாறுகின்றன. இதற்காக பேய்க்கணவாய்கள் உடலில் தனித்துவமான தோல் உயிரணுக்கள் அமைந்துள்ளன. மேலும் இவற்றின் உடலில் உள்ள பல்வேறு நிறங்களைக் கொண்ட நிறமிகளின் மூலம் நிறம் மாறுகின்றன.[3] இந்த பண்பை வெளிப்படுத்துவதில் நடிக்கும் பேய்க்கணவாய் என்ற இனம் குறிப்பிடத்தக்கது ஆகும்.