விலங்கு உணர்வு நிலை
விலங்கு உணர்வு நிலை (Animal consciousness), அல்லது விலங்கு விழிப்புணர்வு (animal awareness), என்பது ஒரு மனிதரல்லா விலங்கிற்குள் இருக்கும் சுயவிழிப்புணர்வின் தரம் அல்லது நிலை ஆகும். அதாவது வெளிப்புற பொருள் அல்லது தனக்குள்ளேயே உள்ள ஏதோ ஒன்றை அவ்விலங்கு அறிந்திருக்கும் நிலை.[2][3] மனிதர்களில் நனவு அல்லது உணர்வு நிலை என்பது உணர்திறன், விழிப்புணர்வு, அகநிலை, தன்மையங்கள், அனுபவிக்கும் திறன் அல்லது உணரும் திறன், விழித்திருக்கும் நிலை, தன்னிலை குறித்த சுயவுணர்வு, மனதின் நிர்வாகக் கட்டுப்பாட்டு அமைப்பு என பலவாறு வரையறுக்கப்படுகிறது.[4] வரையறுப்பதில் சிக்கல் இருந்தபோதிலும், நனவு என்றால் என்ன என்பது பற்றி பரந்த அளவில் ஒருங்கிணைந்த அடிப்படை உள்ளுணர்வு இருப்பதாக பல மெய்யியலாளர்கள் கருதுகின்றனர்.[5]
விலங்கு உணர்வு நிலை என்ற தலைப்பானது பல சிக்கல்களால் சூழப்பட்டது ஆகும். இது மற்ற மனங்களை அறியும் சவாலை மிகக் கடுமையான வடிவில் முன்வைக்கிறது. இதற்குக் காரணம் விலங்குகளுக்கு மனித மொழியைப் பயன்படுத்தும் திறன் இல்லாததும் அதனால் மொழியின் வாயிலாக தங்களது அனுபவங்களைப் பற்றி நம்மிடம் கூற முடியாது என்பதுமேயாகும். மேலும், நனவு உணர்வுகளைப் பற்றிய கேள்விக்குப் புறநிலையாக விளக்கம் தருவது கடினம் என்பதால் அதன் விளைவாக விலங்குகளின் உணர்வுத் திறன் தவறாகக் கணக்கிடப்பட்டும் மறுக்கப்பட்டும் அதன் தொடர்ச்சியாக 'விலங்குகள் உணர்வதில்லை', 'அவற்றின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை', 'அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது என்பது தார்மீக ரீதியில் தவறானது அல்ல' என்பது போன்ற பிழைபட்ட சிந்தனைகள் ஏற்கப்படும் ஆபத்து உள்ளது. எடுத்துக்காட்டாக, 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மெய்யியலாளரான ரெனே டேக்கார்ட் விலங்குகளை தவறாக நடத்துவதற்கு ஒரு நியாயத்தை கற்பித்ததற்காக இன்றளவும் விமர்சிக்கப்படுகிறார். இதற்குக் காரணம் மனிதர்கள் மட்டுமே உணர்வு நிலை கொண்டவர்கள் என்ற அவரது தவறான வாதமே ஆகும்.