டில்மா வானா ரூசெஃப் (Dilma Vana Rousseff, பிறப்பு: டிசம்பர் 14, 1947) பிரேசிலைச் சேர்ந்த பொருளியலாளரும், அரசியல்வாதியும், பிரேசிலின் அரசுத்தலைவராக (அதிபர்) தெரிவு செய்யப்பட்டவரும் ஆவார். 2005 சூன் மாதத்தில் இவர் அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வாவினால் அந்நாட்டின் பணித்தலைவராக (Chief of Staff) தெரிவு செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு நவம்பரில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதலாவது பெண் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திசம்பர் 3, 2015 அன்று பிரேசில் நாடாளுமன்றத்தின் கீழவை அலுவல்முறையாக இவரது பணிநீக்கத்திற்கான சட்டவாக்க அனுமதி அளித்தது.[2]
மே 12, 2016 அன்று பிரேசிலின் மேலவை இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அல்லது ஆறு மாத காலத்திற்கு ரூசெஃபின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் நிறுத்தி வைத்துள்ளது.[3] துணைக் குடியரசுத் தலைவர் மிசெல் தெமர் பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவராக ரூபெஃபென் அதிகாரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.[4]
இளமை வாழ்க்கையும் திருமணமும்
பல்கேரியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகளான டில்மா ரூசெஃப் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தார். இளமைக்காலத்திலேயே இவர் சோசலிசவாதியாத் தன்னை அறிவித்துக் கொண்டார். 1964 ஆம் ஆண்டில் பிரேசிலில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சியை அடுத்து இராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட இடதுசாரி கெரில்லா இயக்கத்தில் சேர்ந்தார். இவர் கைது செய்யப்பட்டு 1970 முதல் 1972 வரை சிறையில் அடைக்கப்படார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கார்லொசு அரோஜோ என்பவரை திருமணம் முடித்தார். இருவரும் இணைந்து சனநாயகத் தொழிற்கட்சி என்ற அரசியல் கட்சி உருவாவதற்குத் துணையாயிருந்தனர். அக்கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் இருவரும் பெரும் பங்காற்றினர்.
அரசியல் வாழ்க்கை
2000 ஆம் ஆண்டில் கட்சியுடன் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 2003 ஆம் ஆண்டில் பிரேசிலின் ஆற்றல் துறை அமைச்சராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா இரண்டு தடவைகள் பதவியில் இருந்து அடுத்து பதவியில் இருந்து விலகுவதை அடுத்து நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக 2010அக்டோபர் 31 இல் 56 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2011சனவரி 1 இல் அரசுத்தலைவராகப் பதவியேற்பார்[5].
பணிநீக்க செயற்பாடு
ஏப்ரல் 17, 2016இல் பிரேசிலின் கீழவை தில்மா ரூசெபின் மீது அரசு நிதியை கையாண்டதாக குற்றம் சாட்டி பணிநீக்கத்திற்கான சட்டவாக்க செயற்பாட்டைத் துவக்கியது. வாக்கெடுப்பில் ரூசெப்பிற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 367 வாக்குகளும் விழுந்தன. 342 வாக்குகள் பெற்றால் பணிநீக்கத் தேவையான என்ற நிலையில் 367 வாக்குகள் பெற்றதால் தீர்மானம் கீழவையிலிருந்து செனட் எனப்படும் மேலவைக்கு அனுப்பப்பட்டது.[6][7]
மே 12, 2016இல் செனட் ரூசெஃப் மீது பணிநீக்கத்திற்கான விசாரணையை மேற்கோள்ளத் தீர்மானித்தது. இந்த விசாரணை முடிவுறும் வரை குடியரசுத் தலைவராகவிருந்த ரூசெபின் அதிகாரங்களை இடைநீக்கம் செய்தது. இந்த விசாரணை 180 நாட்களுக்குள் முடிவுற வேண்டும். துணைக் குடியரசுத் தலைவர் மிசெல் தெமர் ரூசெபின் பொறுப்புக்களை எடுத்துக் கொண்டுள்ளார்.