அலர்வு
அலர்வு (Anthesis)[1] என்பது ஒரு பூ முழுவதும் திறக்கும் மற்றும் செயல்படும் காலமாகும். இச்சொல் அந்த காலம் தொடங்குவதையும் குறிக்கக்கூடும்.[2]
சில பூவினங்களில் அலர்வு ஆரம்பமாவது கண்கவர் நிகழ்வாகும். எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் காணப்படும் பாங்க்ஸியா இனங்களில், அலர்வு மேற்புறப் பூவிதழ் பாகங்களையும் கடந்து தம்பம் நீண்டு வளர்வதோடு தொடர்புடையதாக உள்ளது. ஒரு பூந்துணரில் பூக்களின் அலர்வு தொடர்வரிசையாக இருக்கும், எனவே பூவின் தம்பமும் பூவிதழும் வேறுவேறான நிறங்களைக் கொண்டிருந்தால், பூந்துணர் முழுவதுமாகப் படிப்படியாக நிறமாற்றம் காணப்படும்.[3]
பகலில் மலரும் பூக்களின் அலர்வு, பட்டாம்பூச்சி போன்ற பகல்நேரப் பூச்சிகளை ஈர்க்கும் வகையில் பொதுவாக பளபளப்பான நிறங்களில் இருக்கின்றது. இரவில் மலரும் பூக்களின் அலர்வு பொதுவாக இருளுக்கு ஏற்ப மாறுபட்ட வகையில் வெண்ணிறத்திலோ அல்லது நிறங்குறைந்தோ இருக்கின்றது. இந்த வகைப் பூக்கள் பொதுவாக அந்துப்பூச்சி, விட்டில் போன்ற இரவுநேரப் பூச்சிகளை ஈர்க்கின்றன.