இலங்கைச் சோனகர்
இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் (Sri Lankan Moors) எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள்.[1][2][3][4][5] இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது.[6][7][8][9] இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைச்சோனகர் குழு. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~2 மில்லியன் (2005) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இலங்கை | 9.23% ~2 மில்லியன் (2011) |
மொழி(கள்) | |
தமிழ், சிங்களம் (formerly அரபுத் தமிழ் மற்றும் அரபு) | |
சமயங்கள் | |
இஸ்லாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
அரபியர், இலங்கையர் |
இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி[10], வவுனியா[11][12][13][14] போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.[15]
பெயர்க் காரணம்
மக்கள்தொகை, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இனரீதியான கணிப்பீடுகள் ஆகியவற்றில் இலங்கை முசுலிம்கள் ஆங்கிலத்தில் "மூர்" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் சமயம் சார்ந்த தரவுகள் திரட்டப்படும் போது 'இசுலாமியர்' அல்லது 'முசுலிம்கள்' என்று குறிக்கப்படுகின்றனர்.[16] தமிழில் சோனகர் என்ற சொல் சுன்னா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக நம்பப்பபடுகிறது.[3][17] மூர் என்னும் பெயர் போர்த்துக்கேயரினால் வைக்கப்பட்ட பெயராகும். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர்.[18] சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது.[19][20] யவனர் என்ற சொல் சமசுக்கிருத மொழி என்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். அரேபியர் என்பது பாளி மொழியில் 'யொன்ன' அல்லது 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்பட்டுள்ளது.[16]
வரலாறு
ஆரம்பகாலக் கொள்கைகள்
இலங்கைச் சோனகர் தென்னிந்தியாவில் உள்ள மரைக்காயர், மாப்பிளமார்கள், மேமன்கள், பத்தான்கள் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல கல்வியாளர்கள் முன்வைத்துள்ளனர்.[21]