உயிர்ச்சூழற் பொருளியல்
உயிர்ச்சூழற் பொருளியல் (Ecological economics) என்பது, ஒரு பல்துறை சார்ந்த ஆய்வுத் துறை ஆகும். இது, காலம் மற்றும் இடம் சார்ந்த வகையில், மனிதப் பொருளியலும் இயற்கைச் சூழியல் முறைமையும் ஒன்றுடன் ஒன்று தங்கியிருப்பதையும், ஒன்றைச் சார்ந்து ஒன்று வளர்ச்சியடைவதையும் ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது.[1] இது, பொருளியலைச் சூழல் மண்டலத்தின் துணைப் பிரிவாகக் கொண்டு, இயற்கை மூலதனத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்துவதன் மூலம், சூழலின் முக்கிய பொருளியற் பகுப்பாய்வான சூழற் பொருளியலில் இருந்து வேறுபடுகிறது.[2] செருமன் பொருளியலாளர்களின் ஆய்வொன்றின்படி, உயிர்ச்சூழற் பொருளியலும், சூழற் பொருளியலும் இரு வேறு பொருளியற் சிந்தனைகள். இதன்படி, உயிர்ச்சூழற் பொருளியலாளர் வலுவான பேண்தகைமையை வலியுறுத்துவதுடன், இயற்கை மூலதனத்தை மனிதன் உருவாக்கும் மூலதனத்தினால் பதிலிட முடியும் என்னும் நிலைப்பாட்டையும் மறுதலிக்கின்றனர்.[3]
உயிர்ச்சூழற் பொருளியல் துறை, ஐரோப்பிய, அமெரிக்கக் கல்வியாளர்களின் ஆக்கங்களினாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளினாலும், ஒரு நவீன இயக்கமாக உருவானது. தொடர்புடைய துறையான பசுமைப் பொருளியல் என்பது அரசியல் சார்ந்து பயன்படுத்தப்படும் இதன் ஒரு வடிவம் ஆகும்.[4][5]