எண்ணெய்க் கசிவு
எண்ணெய்க் கசிவு என்பது நீர்ம நிலையில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் சுற்றுப்பறத்தில் மாந்த செயல்பாட்டினால் கசிந்து வெளியாவதைக் குறிக்கும். இது சூழலை மாசுறுத்தும் காரணிகளில் ஒன்று. பொதுவாக இது கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவினையே குறித்தாலும் இது நிலத்திலும் ஏற்படலாம். எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து கடலிலோ அல்லது கரையை ஒட்டிய பகுதிகளிலோ பொதுவாக எண்ணெய்க் கசிவு ஏற்படுகிறது.
சூழலியல் தாக்கம்
கடலில் ஏற்படும் கசிவினாலும் அதனைச் சரிசெய்யும் நடவடிக்கைகளாலும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படுகின்றன.[1][2] மோப்பத்தை வைத்து தனது தாயையோ சேயையோ கண்டறியும் உயிரினங்கள் எண்ணெயின் கடும் நெடியினால் பாதிக்கப்பட்டு குட்டிகள் தனித்து விடப்படுதலால் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. உரோமங்களை உடைய கடற்பாலூட்டிகள் மீது எண்ணெய் படிவதால் இவற்றின் உடல் தட்பவெப்ப நிலை சீர்குலைகிறது. கடற் பகுதிகளில் வாழும் பறவைகளின் பறக்கும் திறனை இவை பாதிப்பதால் பறவைகள் உணவு தேட முடியாமலோ அல்லுது கொன்றுண்ணிகளிடம் சிக்கியோ அழிகின்றன. மேலும், எண்ணெய்க் கசிவு காற்றையும் மாசுபடுத்தக்கூடும்.[3]