காட்டுமிராண்டி
காட்டுமிராண்டி என்பது நாகரிகம் அற்றவர் என்று கருதும் ஒருவரைக் குறிக்கும் சொல். இச்சொல் ஒரு நாட்டினரையோ, இனத்தையோ, பழங்குடியினரையோ பொதுப்படையாகக் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. இது நகர நாகரிகத்தினரின் நோக்கு ஆகும். கொடூரமான, எதற்கும் சண்டைபோடுகிற, பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒருவரையும் காட்டுமிராண்டி என உருவகப்படுத்திக் கூறுவது உண்டு.[1]
தமிழில் காட்டுமிராண்டி என்னும் சொல் barbarian என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள் கொண்டதாகப் பயன்படுகிறது. குறித்த ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியில் "கிரேக்கர் அல்லாதவர்" என்னும் பொருள் தருகின்ற βάρβαρος (barbaros) என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. அக்காலத்தில் கிரேக்கர்கள் நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்டதால் ஏனையோர் நாகரிகம் அற்றவர்கள் என்ற கருத்துரு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கிரேக்கரின் நகர அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிந்தபோது ஒரு பகுதியினரை மற்றவர் காட்டுமிராண்டிகளாகக் குறிப்பிட்டுக்கொண்டனர்.[2] நவீனகாலத் தொடக்கத்திலும் அதற்குப் பின்னர் சிறிது காலமும் துருக்கியரை இழிவாகக் குறிப்பிடுவதற்குக் கிரேக்கர் இச்சொல்லைப் பயன்படுத்தினர்.[3][4]
உரோமர்கள் பல்வேறு யேர்மானிய குழுக்களை, settled Gauls, ஹன் இனத்தவரை காட்டுமிராண்டிகளாக கருதினர்.
சொற்பிறப்பு
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, காட்டுமிராண்டி என்னும் சொல்லுக்கு நேரடியான பொருள் எதையும் தரவில்லை. ஆனால் மிருகாண்டி என்னும் சொல்லுக்குக் காட்டுமிராண்டி எனப் பொருள் தந்துள்ளது. இந்த அகராதியின்படி மிருகாண்டி என்னும் சொல் மிருகம் + ஆள் என்னும் சொற்பிணைப்பினால் உருவானதாகத் தெரிகிறது. எனவே காட்டுமிராண்டி என்னும் சொல் "காட்டு விலங்குகளின் தன்மைகளைக் கொண்ட ஆள்" என்ற நேரடிப் பொருள் தருவதாகக் கொள்ள முடியும்.