சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.
மதுரை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன[1][2][3][4][5]. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் இல் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.[6]
துணை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே மதுரை மாவட்டம் சோழவந்தானிலும், மானாமதுரை யிலும், பரமக்குடியிலும், அழகன்குளத்திலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.
வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.