சிறீ லங்கா தாயே
சிறீ லங்கா தாயே (Sri Lanka Matha; சிங்களம்: ශ්රී ලංකා මාතා) என்பது இலங்கையின் நாட்டுப்பண் ஆகும். இலங்கையின் இயற்கை வளம், அழகு என்பவற்றை எடுத்துக்கூறும் இப்பாடல், இலங்கையர்களுக்கு இலங்கைத் தாயின் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கிறது. நாட்டின் சகல பிரிவினருக்கும் இடையேயான ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் இப்பாடல், நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
சிறீ லங்கா தாயே | |
இலங்கை தேசியக் கீதம் கீதம் | |
இயற்றியவர் | ஆனந்தசமரக்கோன் |
இசை | ஆனந்தசமரக்கோன் |
சேர்க்கப்பட்டது | 1950 |
வரலாறு
இலங்கைக் கவிஞர் சமரகூன் என்பவர் ரவீந்தநாத் தாகூரின் மாணவர். இவர் இந்தியாவில் தாகூருடன் தங்கிப் பாடம் படித்து 1939 இல் இலங்கை திரும்பி ஒரு கல்லூரியில் அவர் வேலை பார்த்துவந்தார். 1940 இல் இலங்கை தெற்கு பிராந்தியத்தின் பள்ளி அதிகாரி ஜெயசூரியா, ஒரு பாடல் எழுதித் தருமாறு கவிஞரைக் கேட்டார். உடனே சமரகூன் தாகூரை அணுகி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வங்க மொழியில் ஒரு பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார் தாகூர். சமரகூன் அதை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதை எந்த ஆண்டு எழுதினார் என்ற தகவல் இல்லை. ஆனால், பாடலை இயற்றியவர்கள் தாகூர், சமரகூன்தான். கல்லூரி நிக்ழ்ச்சி ஒன்றில் கூட்டாக இப்பாடல் பாடப்பட்டது. [1]
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.
இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.
1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.
1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என ந என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை.
தமிழ் மொழிபெயர்ப்பு
இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
தமிழ் மொழிபெயர்ப்பை உத்தியோக பூர்வமாக நீக்க மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர், 2010 இல் நிகழ்த்தியது. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகள், தமிழக அரசின் முதல்வர் கருனாநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆயினும் பின்னர் தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் உத்தேசம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்[2].
2015 இல் புதிதாதகப் பதவியேற்ற அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தமிழில் தேசியப் பண்ணைப் பாடுவதைத் தடை செய்யப்போவதில்லை எனத் தாம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவிருப்பதாக 2015 மார்ச் மாதத்தில் அறிவித்தார்.[3][4] இவ்வறிவிப்பு பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாதிகளின் கண்டனத்திற்கு உள்ளானது.[5][6][7][8]
இராஜபக்ச தலமையிலான அரசுக்குப் பின்னர் ஆட்சியேற்ற மைத்திரிபால சிரிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசு இலங்கையின் 68ம் சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்தின் முடிவில் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாட அனுமதி வழங்கினர்.[9].
இலங்கையின் தேசிய மொழிகளில் நாட்டுப்பண்
சிங்கள மொழியில் | தமிழ் ஒலிபெயர்ப்பு | தமிழ் மொழிபெயர்ப்பு | |
---|---|---|---|
|
|
|
ஆங்கில மொழிபெயர்ப்பு | அபஅ எழுத்துப் பெயர்ப்பில் சிங்கள வரிகள் | |
---|---|---|
|
|
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- இலங்கை தேசிய கீதத்தின் இசைக் கோப்பு - Abacci Atlas
- ஆனந்த சமரக்கோனின் வரலாறு பரணிடப்பட்டது 2006-06-19 at the வந்தவழி இயந்திரம் சிங்கள ஜூக்ஸ்பொக்ஸ் தளத்திலிருந்து.
- தேசிய விழிப்புணர்வு பரணிடப்பட்டது 2007-03-17 at the வந்தவழி இயந்திரம் - (Awakening of national consciousness-Sunday Observer)