தாமத்தர்
தாமத்தர் (கி.பி. 11 ஆம் நூற்றாண்டு) என்பவா் தமிழ்ப் புலவா், அறிஞர் மற்றும் திருக்குறள் உரையாசிரியர் ஆவார். பலராலும் போற்றப்படும், திருக்குறளுக்கு உரை எழுதிய பத்து இடைக்கால புலவர்களில் ஒருவர். மல்லர், திருமலையர், தருமர், நச்சர் ஆகியவர்களோடு இவருடைய உரையும் கிடைக்கப் பெறவில்லை.[1][2]
வாழ்க்கை
இவருடைய வாழ்க்கையைப் பற்றி எந்த குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை.
திருக்குறள் உரைகள்
குறளுக்கு 300க்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் உரையெழுதியுள்ளனர். அவற்றுள், கருத்து வேறுபாடுகளும் முரண்களும் அதிகம் எழுகின்றன.
பதின்மர் உரை
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். முதலாவதாக எழுந்த உரைகளாகப் பதின்மர் (பத்து) உரைகளைக் கூறுவர்.[3] அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான்.
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர்-திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தா ரிவர்.
என்கிறது பழைய தனிப்பாடல்[4] வெண்பா.
இதில் குறிப்பிடப்படும் பதின்மர்: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார் (பரிதியார்), திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆவர்.
திருக்குறளின் பாடம் முதன்முதலில் நமக்குத் தெரிய வருவது மணக்குடவர் (10 ஆம் நூற்றாண்டு) உரை வழியாகவே. பரிமேலழகரின் உரை பத்தாவது. மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. மணக்குடவரின் உரையைப் பரிமேலழகர் பல இடங்களில் திருத்தி அமைக்கின்றார். திருக்குறளின் அமைப்பு முறையிலும் மாற்றம் செய்துள்ளார்.[5]
இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே. மற்ற உரைகள் கிடைக்கப் பெறவில்லை.
தற்கால உரைகள்
தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும்.
மேற்கண்ட உரைகளில் எது வள்ளுவர் பெருமானுடைய உள்ளம், சிந்தனை என்பதைக் காண முடியவில்லை. இலக்கியங்களில் தடுக்கி விழுந்தவன் எல்லாம் குறளுக்கு உரை எழுத முன்வந்ததே காரணம்.[6]