வாட்டர்லூ போர்
வாட்டர்லூ போர் (Battle of Waterloo) நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாகவிருந்த (தற்போதைய பெல்ஜியம்) வாட்டர்லூ என்ற இடத்தில் சூன் 18, 1815, ஞாயிறன்று நிகழ்ந்த சண்டையாகும். வெல்லிங்டன் பிரபு தலைமையேற்ற ஆங்கிலேயர் படைகளும் வாகிசட் இளவரசர் தலைமையேற்ற பிரசியப் படைகளும் இணைந்து நெப்போலியன் தலைமையேற்ற பிரான்சியப் படைகள் மீது தொடுத்த போராகும். 26 ஆண்டுகளாக நடந்து வந்த பிரெஞ்சுப் புரட்சிப் போருக்கும் நெப்போலியப் போர்களுக்கும் இந்தச் சண்டை மூலம் ஓர் முடிவு எட்டியது. பிரான்ஸ் நாட்டின் பேரரசராகவும், சிறந்த படைத்தலைவராகவும் விளங்கிய நெப்போலியன் இறுதியாகத் தோல்வியற்றார். இத்தோல்வியினால், ஐரோப்பா முழுவதையும் தம் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென்ற நெப்போலியனின் பேராசை அழிந்தொழிந்தது.
வாட்டர்லூ போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வாட்டர்லூ போர் - வில்லியம் சேடுலர் வரைந்தது | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
பிரான்சியப் பேரரசு | ஏழாம் கூட்டணி:
| ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பிரான்சின் முதலாம் நெப்போலியன் | வெல்லிங்டன் பிரபு கெபெர்ட் லீபெரெக்டு வான் புளூசர் | ||||||
பலம் | |||||||
மொத்தம்: 73,000[1]
| மொத்தம்: 118,000 ஆங்கிலக்-கூட்டணி: 68,000[2][3]
பிரசியர்கள்: 50,000[6] | ||||||
இழப்புகள் | |||||||
மொத்தம்: 41,000 | மொத்தம்: 24,000 ஆங்கிலக் கூட்டணி: 17,000
பிரசியர்கள்: 7,000
|
நிகழ்விடம்
வாட்டர்லூ பெல்ஜியத்தின் தலைநகரான பிரசெல்சிலிருந்து தெற்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூராகும். போர்க்களம் வாட்டர்லூவிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது. இன்று போர் நடந்தவிடத்தில் சிங்க மேடு (Lion's Mound) எனும் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது; இது போர்க்களத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணிலிருந்தே கட்டப்பட்டுள்ளதால் போர்க்காலத்திய கள அமைப்பு பாதுகாக்கப்படவில்லை.
வரலாறு
பின்னணி
ஏப்ரல் 11, 1814
நெப்போலியன் ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வந்தார். 1813-ல் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக அணி சேர்ந்து நெப்போலியனைத் தோற்கடித்தன. ஏப்ரல் 11, 1814ஆம் ஆண்டு பிரான்சின் போன்டேன்ப்ளூ எனும் இடத்தில் நெப்போலியனுக்கும் ஆத்திரியப் பேரரசு, உருசியப் பேரரசு, புருசிய இராச்சியத்தின் சார்ந்தாற்றுநர்களுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இதனை நெப்போலியன் ஏப்ரல் 13 அன்று ஏற்றுக் கொண்டார்.[10] போன்டேன்ப்ளூ உடன்படிக்கை எனப்படும் இதன்படி நெப்போலியனின் பிரெஞ்சுப் பேரரசு முடிவுற்று பரம்பரை அரச குடும்பத்தினர் அதிகாரம் பெற்றனர்; நெப்போலியன் எல்பா தீவிற்கு நாடுகடத்தப்பட்டார். பிரான்சினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.
மே 30,1814
மே 30, 1814 இல் நேசப்படைகள் லூயிஸ் XII இன் அண்ணா அர்வி பிரபுவுடன் பாரிசு உடன்படிக்கை என்றழைக்கப்படும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இதன்படி லூயிஸ் XIII அரியணைக்கு அழைக்கப்பட்டார்; போர்போன் ஆட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. பிரான்சின் எல்லைகளை வரையறுத்த இந்த உடன்படிக்கை பிரான்சு கைப்பற்றிய பகுதிகளை அந்தந்த நாடுகளுக்கு திருப்பித் தர வைத்தது.
எல்பாவில்
நெப்போலியன் எல்பாவில் ஒன்பது மாதங்களும் 21 நாட்களுமே கழித்தார். பிரான்சில் தாம் இல்லாநிலையில் நடைபெற்ற நிகழ்வுகளை கவனித்து வந்தார். பிரான்சிய இராச்சியத்தின் எல்லைகள் சுருங்கியதை மக்கள் விரும்பவில்லை. மீளவும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட போர்போன் அரச குடுபத்தினர் குடியரசுத் தலைவர்களை அவமதித்த நிகழ்வுகள் வதந்திகளாகப் பரவி பொதுமக்கள் அரசுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தனர். தொடர்ந்த சண்டைகளால் ஐரோப்பிய நாடுகளும் சோர்வுற்றிருந்தன.[11] இதனையொட்டி தீர்வுகளைக் காண முயன்ற வியன்னா மாநாட்டில் வலிய நாடுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது.[12]
இச்சம்பவங்களால் நெப்போலியன் தனக்கு சாதகமான நிலைமை உருவாகியுள்ளதை அறிந்தார். மேலும் உருசியா, செருமனி, ஐக்கிய இராச்சியம், எசுப்பானியாவிலிருந்து திரும்பும் பிரான்சியப் போர்கைதிகள் தமக்கு பயிற்சிபெற்ற படையாக அமையும் என எண்ணினார். போர்போன் குடும்பத்தினரும் வியன்னாவில் கூடியிருந்தவர்களும் நெப்போலியனை செயிண்ட் எலனாவில் சிறை வைக்கவோ அல்லது கொல்லவோ திட்டமிட்டனர்.[11][13]
பெப்ரவரி 26, 1815, பிரித்தானிய, பிரான்சியக் கப்பல்கள் இல்லாதிருந்த வேளையில் 1000 பேருடன் சிறிய கப்பலில் தப்பிச் சென்றார். பிரான்சினுள் மார்ச் 1, 1815இல் கான் அருகே கால் பதித்தார். பெரும் வரவேற்பைப் பெற்று ஆல்ப்சு மலைகளூடே பயணித்தார். அவரது படைபலமும் கூடிக்கொண்டு வந்தது.[14] படையைத் திரட்டிக்கொண்டு பெல்ஜியத்தைக் தாக்கினார். பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நேச நாடுகளின் படைகளுடன் தனித்தனியே அவர் போரிட நேர்ந்தது. எனினும், தொடக்கத்தில் சிறிது வெற்றி கண்டார். ஆனால், இறுதியில் வாட்டர்லூவில் 1815ஆம் ஆண்டு சூன் 18-ல் நடந்த போரில் நேச நாட்டுப் படைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை முறியடித்தன. இப்போரில் நேச நாடுகளுக்கு வெற்றிதேடித் தந்தவர் வெல்லிங்க்டன் என்னும் ஆங்கிலத் தளபதியாவார்.
நெப்போலியனின் இறுதிக்காலம்
வாட்டர்லூ போரில் தோல்வியுற்ற நெப்போலியன் அமெரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், ஆங்கிலேயர் அவரைக் கைது செய்து, செயின்ட் ஹெலினா என்ற தீவில் சிறை வைத்தனர். அங்கு நெப்போலியன் தம் இறுதிக்காலத்தைக் கழித்தார்.
நூற்சுட்டு
- "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.