வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி
வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதியானது, வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ள மூடிய அமைப்புகளின் பண்புகள் குறித்துப் பின்வருமாறு கூறுகிறது:
"ஒரு அமைப்பின் சிதறமானது அதன் வெப்பநிலையானது தனிச்சுழி வெப்பநிலையை நெருங்கும் போது ஒரு மாறாத மதிப்பை நெருங்குகிறது."
இந்த மாறா மதிப்பானது மூடிய அமைப்பை அடையாளப்படுத்தும் வேறு எந்தக் காரணிகளையும், (அழுத்தம் அல்லது பயனுறு காந்தப்புலம் போன்ற) சார்ந்திருக்காது. தனிச்சுழி வெப்பநிலையில் அமைப்பானது குறைந்தபட்ச சாத்தியமான ஆற்றல் நிலையில் இருக்கும். சிதறமானது பல அளவிடத்தக்கச் சிறிய நிலைகளோடு தொடர்புடையதாகவும், ஒரே ஒரு குறைவான ஆற்றலை உடைய தனித்த நிலையைக் கொண்டும் இருக்கும்.[1] அம்மாதிரியான நேர்வில், தனிச்சுழி வெப்பநிலையில் சிதறத்தின் மதிப்பும் தனிச்சுழி மதிப்பைப் பெற்றிருக்கும். ஒரு அமைப்பானது நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு ஒழுங்கமைப்பைக் கொண்டிராவிட்டால் (உதாரணமாக, கண்ணாடியைப் போன்ற ஒழுங்கமைப்பைக் கொண்டிருந்தால்), அமைப்பின் வெப்பநிலையானது மிகவும் குறைந்த அளவிற்குக் கொண்டு செல்லப்படும் போது, குறைந்த பட்ச ஆற்றல் மட்டங்களின் காரணமாகவோ அல்லது அமைப்பானது சிறும மதிப்பாயிராத ஆற்றலைக் கொண்டுள்ள அமைப்பாக்கத்திற்குள் அடைபட்டுப்போனதாலோ, குறிப்பிடத்தக்க சிதறமானது எஞ்சியிருக்கக் கூடும். அந்த நிலையான மதிப்பானது, அமைப்பின் எஞ்சியிருக்கும் சிதறம் என்று அழைக்கப்படுகிறது.[2]
வரலாறு
வெப்ப இயக்கவியலின் மூன்றாவது விதியானது வால்தர் நெர்ன்ஸ்ட் என்பவரால் 1906 ஆம் ஆண்டிற்கும் 1912 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே, இந்த விதியானது நெர்ன்ஸ்ட் தேற்றம் அல்லது நெர்ன்ஸ்ட் எடுகோள் என அழைக்கப்படுகிறது. 1912 ஆம் ஆண்டு, நெர்ன்ஸ்ட் தனது கோட்பாட்டைப் பின்வருமாறு தெரிவித்தார்.
"எந்தவொரு செயல்முறையாலும், ஒரு குறிப்பிட்ட படிநிலைகளில், T = 0 என்ற சம வெப்பநிலைக் கோட்டிற்கு அழைத்துச் செல்வது சாத்தியமற்றதாகும்."
விளக்கம்
எளிய வார்த்தைகளில் வெப்ப இயக்கவியலின் மூன்றாவது இயக்கவியல் விதியைச் சொல்ல வேண்டுமென்றால், "தனிச்சுழி வெப்பநிலையை நெருங்க நெருங்க, ஒரு தூய பொருளின் தூய படிகத்தின் சிதறமானது சுழியை நெருங்குகிறது" எனலாம்.