பதிற்றுப்பத்து
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
பதிற்றுப்பத்து[1] எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை . ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாறு நமக்கு பதிற்றுப்பத்தின் 80 பாடல்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நூல் பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன.
இந்நூலின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை எனலாம்.
பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்குக் கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரியப்பா நடையில் உள்ளது. இந்தப் பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன்முதலாக பொ.ஊ. 989-இல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.[2] பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
பதிற்றுப்பத்துப் பதிகங்களைக் கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும் மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும் அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், [[முதுமொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.
நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி அடி அடுத்த பாட்டின் முதல் அடியாக வருவதே அந்தாதியாகும். எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி அடி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32-ஆவது பாடல் முதல் அடி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.
பகுதி | பாடியவர் | பாடப்பட்ட சேர மன்னன் | பாடியவர் பெற்ற பரிசுகள்[3] |
---|---|---|---|
முதல் பத்து | - | - | |
இரண்டாம் பத்து | குமட்டூர்க் கண்ணனார் | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | உம்பற்காடு, 500 ஊர்கள் |
மூன்றாம் பத்து | பாலைக் கௌதமனார் | இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | வேள்விகள் செய்ய உதவி வழங்கப்பட்டது |
நான்காம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் | 40 நூறாயிரம் பொன், சேர நாட்டின் ஒரு பகுதி |
ஐந்தாம் பத்து | பரணர் | கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் | உம்பற்காட்டு வாரி |
ஆறாம் பத்து | காக்கைபாடினியார் (நச்செள்ளையார்) | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | 9 துலாம் பொன், நூறாயிரம் பொன் |
ஏழாம் பத்து | கபிலர் | செல்வக் கடுங்கோ வாழியாதன் | நூறாயிரம் பொன் |
எட்டாம் பத்து | அரிசில் கிழார் | தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | ஒன்பது நூறாயிரம் காணம் |
ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர் கிழார் | குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை | முப்பத்தேழாயிரம் பொன் |
பத்தாம் பத்து | - | - |
பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.
கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.
பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்:
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."[15]