ஆஸ்கார் ரொமெரோ
ஆஸ்கார் ரொமெரோ (15 ஆகஸ்ட் 1917 – 24 மார்ச் 1980) என்பவர் எல் சால்வடோரில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஆவார். இவர் சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் நான்காம் பேராயராகப்பணியாற்றியவர் ஆவார். இவர் பணியில் இருந்த போதே தம் நாடான எல் சால்வடோரில் நிலவிய வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, சர்வாதிகார ஆட்சி, படுகொலைகள் மற்றும் வதைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.[1] இதனால் 1980இல் இவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போது இராணுவக் கூலிப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேதகு ஆஸ்கார் ரொமெரோ | |
---|---|
சான் சால்வதோர் உயர்மறைமாவட்ட பேராயர் | |
ஆட்சி பீடம் | சான் சால்வதோர் |
ஆட்சி துவக்கம் | 23 பெப்ரவரி 1977 |
ஆட்சி முடிவு | 24 மார்ச் 1980 |
முன்னிருந்தவர் | லூயிஸ் சாவஸ் |
பின்வந்தவர் | அர்துரோ ரிவேரா |
பிற பதவிகள் | சான்தியாகோ தெ மரியா மரைமாவட்ட ஆயர் (1974-1977) |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 4 ஏப்ரல் 1942 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 21 ஜூன் 1970 கிரோலாமோ பிரிகியோன்-ஆல் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Óscar Arnulfo Romero y Galdámez |
பிறப்பு | சியுடாட் பரியோஸ், எல் சால்வடோர். | 15 ஆகத்து 1917
இறப்பு | 24 மார்ச்சு 1980 சான் சல்வடோர் | (அகவை 62)
கல்லறை | சான் சல்வடோர் மறைமாவட்ட முதன்மைப்பேராலயம் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
பெற்றோர் | சான்தோஸ் ரொமெரோ & குவாதலூபே தெ ஜெசுஸ் கல்தாமெஸ் |
குறிக்கோளுரை | Sentire cum Ecclesia (திருச்சபையோடு ஒன்றித்து சிந்தித்தல்) |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 24 மார்ச் (ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்) |
ஏற்கும் சபை | ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் |
பகுப்பு | இறை ஊழியர், மறைசாட்சி (கத்தோலிக்கம்) |
1997இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவருக்கு இறை ஊழியர் மட்டமளித்தார். இவர் பலராலும் அமெரிக்காக்கள், குறிப்பாக எல் சால்வடோரின் பாதுகாவலராகக்கருதப்படுகின்றார்; கத்தோலிக்கத்திருச்சபைக்கு வெளியே இங்கிலாந்து திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் ஒரு சில லூத்தரனியப்பிரிவுகளில் இவர் புனிதரென ஏற்கப்படுகின்றார்.
இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் மேற்கு வாயிற்கதவின்மேல் சித்தரிக்கப்பட்டுள்ள நான்கு 20ம் நூற்றாண்டின் மறைசாட்சியருள் இவரும் ஒருவர்.[2] 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய செய்தி ஏடான A Different View, இவரை உலக மக்களாட்சியின் 15 வீரர்களுள் ஒருவர் (15 Champions of World Democracy) எனப்பட்டியல் இட்டது.[3]
இவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கு 4 சனவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிஸ் இசைவு தெரிவித்தார்.[4]
மறைசாட்சி மற்றும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்
பேராயர் ரொமெரோ கிறித்தவ மறைநம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டாரா அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டாரா என்ற விவாதம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. பெரும்பாலான மக்கள் அவர் கிறித்தவ மறையின் நம்பிக்கையோடு இரண்டற இணைந்த நீதி, சமாதானம், மனித உரிமை பாதுகாப்பு, மனித உயிர் மேம்பாடு ஆகிய விழுமியங்களை உறுதியோடு பறைசாற்றி, சர்வாதிகார அரசுக்குச் சவால் விடுத்தது உண்மையிலேயே மறைசார்ந்த ஒரு நிலைப்பாடுதான் என்று கணித்தனர். எனவே அவரை ஒரு புனிதர் என்று போற்றினார்.[5] ஆனால் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப்பீடம் இவ்விடயத்தில் தயக்கம் காட்டியது.
இறுதியாக, திருத்தந்தை பிரான்சிசு “மறைசாட்சி” என்னும் சொல் எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். அதாவது, எல் சால்வடோர் நாட்டில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கராக இருந்தாலும், நாட்டில் ஏழைகளுக்கு எதிராக அநீதிகள் இழைத்துவந்த ஆட்சியாளர்கள் கத்தோலிக்கராக இருந்தாலும், ஆஸ்கார் ரொமெரோ கொல்லப்பட்டது கிறித்தவ நற்செய்தி ஏழைகளுக்கு வாழ்வளிக்கவும் அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவும் தூண்டுதலாக உள்ளது என்று வலியுறுத்தியதால்தான் என்று தெளிவுபடுத்தினார்.[6]
மறைசாட்சி ஆஸ்கார் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் 2015, மே 23ஆம் நாள் எல் சால்வடோரின் தலைநகரான சான் சால்வடோர் நகரில் மறைமாவட்டக் கோவிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது. உலகத்தின் திரு மீட்பர் என்ற இயேசு நினைவுச் சின்னம் அமைந்துள்ள உலக மீட்பர் வளாகத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. புனிதர் பட்டமளிப்புப் பேராயத்தின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ என்பவர் திருத்தந்தை பிரான்சிசின் பதிலாளாக நின்று அந்நிகழ்ச்சியை நடத்தினார். “அருளாளரான ரொமெரோ இன்றைக்கும் எதிரொலிக்கின்ற குரலாக இருக்கிறார்” என்று திருத்தந்தை பிரான்சிசு சான் சால்வடோர் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
"ஆயர் ரொமெரோவுக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொணர்கிறது. ரொமெரோ அன்பின் அடிப்படையில் அமைதியைக் கட்டி எழுப்பினார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர் பாடுபட்டார். குரலற்ற மக்களுக்கு அவர் குரல் கொடுத்தார். இறுதிவரை நிலைத்திருந்து, தம்முடைய கிறித்தவ நம்பிக்கையைக் காத்து, சான்று பகர்ந்தார்” என்று திருத்தந்தை தம் கடிதத்தில் கூறினார்.[7]