இலங்கை உணவு முறைகள்
இலங்கை உணவு முறைகள் என்பது இலங்கையின் உணவுப் பழக்க வழக்கங்கள், சமையல் முறைகளின் தொகுப்பாகும். இலங்கையின் உணவுகளில் நாட்டின் வரலாற்றுடன் தொடர்புடைய உணவுகள், இலங்கை வாழ் மக்களின் பல்வேறுபட்ட கலாச்சார உணவுகள், அந்நிய படையெடுப்புக்கள் மற்றும் அண்டை நாட்டு கலாச்சார தாக்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகள் என்பன உள்ளடங்கும்.
இந்திய (குறிப்பாக தென்னிந்தியா), தென் கிழக்காசிய மற்றும் டச்சு உணவு முறைகளின் தாக்கங்கள் இலங்கை உணவு முறைகளில் பிரதிபலிக்கின்றன.[1] இலங்கை உணவுகளில் அரிசி, தேங்காய், வாசனைத் திரவியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக இலங்கையில் இருந்து வாசனைத் திரவியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உணவுகள்
அரிசிச் சோறும், கறி வகைகளும்
இலங்கை வாழ் மக்களின் பிரதான உணவான அரிசிச் சோறு, சமைக்கப்பட்ட மரக்கறிகள், மீன், இறைச்சி, கோழி மற்றும் தானியங்கள் என்பவற்றுடன் பரிமாறப்படுகின்றன. மேலும் பழங்கள், காய்கறிகளினால் தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகளும், சம்பல் வகைகளும் முக்கியமான துணை உணவுகள் ஆகும்.
பாற்சோறு
பாற்சோறு என்பது அரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து சமைக்கப்படும் உணவாகும். பொதுவாக புத்தாண்டுகள், பண்டிகைகள், பிறந்தநாள் வைபவங்கள் என்பவற்றின் போது பெரும்பாலும் காலை உணவாக, மிளகாய் மற்றும் வெங்காயத்தினால் தயாரிக்கப்படும் கட்டைச்சம்பல் உடன் பரிமாறப்படுகின்றது. சித்திரைப் புத்தாண்டின் போது பாற்சோறு, இனிப்புப் வகைகளான பலகாரம் (கெவும்), அலுவா, முங் கெவும், கொக்கிஸ் என்பனவும் பரவலாக செய்யப்படும்.
அப்பம்
அரிசி மாவினால் தயாரிக்கப்படும். முட்டை அப்பம், வெள்ளப்பம், பாலப்பம் என்று பல வகைகளில் கிடைக்கின்றது.[2] அப்பத்துடன் துணை உணவாக வெங்காய சம்பல் (லுணு மிரிஸ்) பரிமாறப்படும்.
கொத்து
கொத்து என்பது நறுக்கப்பட்ட நறுக்கப்பட்ட ரொட்டியுடன் காய்கறிகள், முட்டை அல்லது இறைச்சி சேர்த்து சமைக்கப்படும் உணவாகும்.
இடியப்பம்
அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் ஆக்கப்படும் உணவாகும். இடியப்ப தட்டுக்களில், இடியப்ப உரலினால் பிழியப்பட்டு வேக வைக்கப்படும்.
லம்ப்ரைஸ்
டச்சு உணவாகும். சமைத்த அரிசி, கத்திரிக்காய் மோஜூ, இறைச்சி, சீனிசம்பல், வாழைக்காய் கறி என்பன வாழையிலையில் சுற்றப்பட்டு சூட்டடுப்பில் வாட்டப்படும். அதாவது லம்ப்ரைஸின் அனைத்து பதார்த்தங்களும் இரு முறை சமைக்கப்படும்.
பிட்டு
பிட்டு[3] வறுத்த அரிசிமாவுடன், துருவிய தேங்காய் சேர்த்து நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது.[4]
ரொட்டி
கோதுமை மாவினால் செய்யப்படும் எளிய உணவாகும். தேங்காய் துண்டுகள் சேர்த்து தேங்காய் ரொட்டியும் (பொல் ரொட்டி), நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து உறைப்பு ரொட்டியும் செய்யப்படுகின்றது.
சம்பல்
சம்பல் துணை உணவாக பல உணவுகளோடு பரிமாறப்படுகின்றது.[5] சீனிசம்பல், தேங்காய் சம்பல், வெங்காய சம்பல், வாழைக்காய் சம்பல் என பல வகைச் சம்பல்கள் உட்கொள்ளப்படுகின்றன.
அச்சாறு
மலாய் ஊறுகாய் அல்லது அச்சாறு என்பது மலாய் சமூகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு பதார்த்தம் ஆகும்.[6][7] நாட்டின் அனைத்து இன மக்களும் பரவலாக உண்ணும் உணவாகும். இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய சுவைகளில் காய்கறிகள், சுவையூட்டிகள் சேர்த்து செய்யப்படுகின்றது.[8]
சீன மிளகாய் கூழ்
சீன மிளகாய் கூழ் இலங்கை பாணியில் ஆக்கப்படும் சீன உணவாகும்.[9]
பாபத்
பாபத் அசைவ கறி ஆகும். மலாய் சமூகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு பதார்த்தம் ஆகும்.[10]
நாசி கோரேங், மீ கோரேங்
இந்தோனேசிய, மலாய் சமூகத்தினரின் கலாச்சார தாக்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் பிரபலமான தெரு உணவுகள் ஆகும்.[11][12]
இனிப்பு வகைகள்
இலங்கையில் விழாக் காலங்களில் செய்யப்படும் இனிப்பு வகைகள் பின்வருமாறு:
- பலகாரம் (சிங்களத்தில்: கெவும்) - பலகாரம் பல வகைகளாக கிடைக்கின்றது.
- அலுவா - சாய்சதுர வடிவ அரிசி மாவினால் செய்யப்படும் இனிப்புப் பண்டம் ஆகும்.
- பிபிக்கன் - கோதுமை மாவு, துருவிய தேங்காயினால் தயாரிக்கப்படும் அணிச்சல் போன்ற இனிப்புப் பண்டம்.
- கொக்கீஸ் / அச்சுப்பலகாரம் - அரிசி மா, தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் மாச்சில்லு போன்ற உணவு ஆகும்.
- புஷ்னாம்பு - கோதுமை மாவு, தேங்காயினால் செய்யப்படும் உணவு ஆகும். பெரும்பாலும் ஏலக்காய், சீரகம் சேர்க்கப்படும்.
- உந்து வலலு/ பெனி வலலு - உளுந்து, கித்துள் பதநீர் ஆகியவற்றினால் செய்யப்படுகின்றது.
- ஆஸ்மி - அரிசி மாவினால் செய்யப்படும் இனிப்பு வகையாகும்.
- தொதல் - அரிசி மா, சர்க்கரை, தேங்காய் பால் சேர்த்து சமைக்கப்படும் இனிப்பு பதார்த்தம் ஆகும்.
- மஸ்கற் - கோதுமை மா, சீனி,செறிவூட்டப்பட்ட பசுப்பால் சேர்த்து சமைக்கப்படும் இனிப்பு பதார்த்தம் ஆகும்.
- வட்டிலப்பம் - தேங்காய் பால், முட்டை, சீனி சேர்த்து வேக வைத்து ஆக்கப்படும்.
- எள்ளுருண்டை - எள், சர்க்கரை சேர்த்து செய்யப்படுகின்றது.
- பால் டொபி - தூய பசும் பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து செய்யப்படும். சுவைக்காக சீரகம், முந்திரி சேர்க்கப்படும்.
சிற்றுண்டிகள்
இவை உணவகங்களில், கடைகளில் அதிகளவில் விற்கப்படும் உணவுகளாகும். பயணத்தின் போதும், காலை உணவுக்காகவோ அல்லது மாலை நேரத்திலோ சாப்பிடப்படுகின்றன.
- வடை - பருப்பு வடை, உழுந்து வடை, இறால் வடை, நண்டு வடை என பல வகைகளில் கிடைக்கின்றது.
- ரோல்ஸ் - சீன ரோல்ஸ் அல்லது முட்டை ரோல்ஸ் எனப்படும். இதில் பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சிகள், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படுகின்றது.
- பட்டீஸ் மற்றும் சமோசா - காய்கறிகள், இறைச்சி அல்லது மீன்களால் நிரப்பப்பட்டு சமைக்கப்படுகின்றன.
- மரக்கறி ரொட்டி / மீன் ரொட்டி - ஒரு முக்கோண வடிவத்தில் கறிகள் நிரப்பப்பட்டு சமைக்கப்படும்.
இது தவிர மேற்கத்திய துரித உணவுகளும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
பானங்கள்
இலங்கையில் பொதுவாக வழங்கப்படும் பானங்கள் பின்வருமாறு: