குத்துச்சண்டை
குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு.[1] ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
நோக்கம் | குத்துதல், அடித்தல் |
---|---|
தோன்றிய நாடு | முற்பட்ட காலம் |
ஒலிம்பிய விளையாட்டு | கி.மு. 688 (பண்டைய) 1904 (நவீன) |
வரலாறு
மனித வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே மனிதர்கள் கைக்கு-கை சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு விளையாட்டாக குத்துச்சண்டையின் தோற்றம் நிச்சயமற்றதாகவே உள்ளது, ஆனால் சில ஆதாரங்கள் இது தற்போதைய எத்தியோப்பியா இல் வேர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன. எகிப்தியர்கள் நூபியா மீது படையெடுத்தபோது, அவர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து குத்துச்சண்டையை கற்றுக்கொண்டனர், பின்னர் அதை எகிப்தில் பிரபலப்படுத்தினர். அங்கிருந்து பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமானிய பேரரசு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குத்துச்சண்டை விளையாட்டு பரவியது.[2][3] எந்த வகை குத்துச்சண்டைக்கும் முந்தைய காட்சி ஆதாரம் கிமு மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆயிரமாண்டு சுமேரிய சிற்பங்களில் காணப்படுகிறது.[4] கிரேக்க நாட்டில் கி. மு. 688 - ல் தோன்றிய ஒலிம்பிக் விளையாட்டில் இந்த விளையாட்டு இடம் பெற்றிருந்தது என்பது வரலாறு.[5]
பண்டைய இந்தியாவில் பல்வேறு வகையான குத்துச்சண்டைகள் இருந்தன. இது பற்றிய ஆரம்பக் குறிப்புகள் ரிக் வேதம் (கி.மு.1500–1000) மற்றும் ராமாயணம் (கி.மு. 700-400) ஆகியவற்றில் உள்ளன.[6] மகாபாரதம் மன்னன் விராடன் காலத்தில் முஷ்டிகளை இறுக்கிக் கொண்டு குத்துச்சண்டையில் ஈடுபட்ட இரு வீரர்கள் மற்றும் உதைகள், விரலால் அடித்தல், முழங்கால் அடித்தல் மற்றும் தலையசைவுகளுடன் சண்டையிட்டதை விவரிக்கிறது.[7] சண்டைகள் (நியுத்தம்) சில சமயங்களில் ஒருவர் மரணம் அடையும் வரை தொடந்தன.[8] சங்ககாலத்தில் புகார் (காவிரிப்பூம்பட்டினம்) நகரில் போட்டி விளையாட்டுக்கென ஒரு மன்றம் இருந்ததையும், அதில் கையால் ஒருவர்மீது ஒருவர் சினம் கொண்டு தாக்கிக் குத்திக்கொண்டு யாரும் பின்னிடாமல் விளையாடியதையும் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த விளையாட்டு கையுறை அணியாமல் வெறுங்கையால் குத்தி விளையாடப்பட்டது.
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி,
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது,
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
- பட்டினப்பாலை
விதிகள்
நவீன குத்துச்சண்டையை நிர்வகிக்கும் பொது விதிகள் 1867 இல் வெளியிடப்பட்டதிலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.[9]
ஒரு குத்துச்சண்டைப் போட்டி பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மூன்று நிமிட சுற்றுகளைக் (12 சுற்றுகள் வரை) கொண்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே ஒரு நிமிடம் போராளிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலைகளில் ஓய்வெடுத்து, பயிற்சியாளர் மற்றும் ஊழியர்களிடமிருந்து ஆலோசனை மற்றும் கவனத்தைப் பெற ஒதுக்கப்படும். சண்டை வீரர்களின் நடத்தையை கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பாகப் போராடுவதை உறுதிப்படுத்தவும் வளையத்திற்குள் பணிபுரியும் ஒரு நடுவரால் சண்டை கட்டுப்படுத்தப்படுகிறது.
ஐந்து நடுவர்கள் வரை பொதுவாக வெளியே அமர்ந்து குத்துச்சண்டை வீரர்களுக்கு புள்ளிகளை வழங்குவார்கள். இது குத்துகள் மற்றும் பாதுகாப்பு செயல்கள், எதிராளியை அடித்து தள்ளுவது, கட்டிப்பிடித்தல் மற்றும் பிற செய்யக்கூடாத நடவடிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க படுகின்றன. குத்துச்சண்டை தீர்ப்பின் திறந்த பாணியின் காரணமாக பல சண்டைகள் சர்ச்சைக்குரிய முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போராளிக்கும் வளையத்தின் ஒரு ஒதுக்கப்பட்ட மூலை உள்ளது.
போட்டியின்போது ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.[10]
பொதுவாக, குத்துச்சண்டை வீரர்கள் இடுப்புக்கு கீழே அடிக்கவோ, பிடிப்பதோ, தள்ளவோ, கடிக்கவோ, துப்பவோ கூடாது. எதிராளி வலி அல்லது காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இடுப்புப் பகுதியில் அடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இவற்றை கடைப்பிடிக்கத் தவறினால் நடுவரால் எச்சரிக்கை செய்யப்படலாம். மூடிய கைகளை தவிர (முழங்கை, தோள்பட்டை அல்லது முன்கை மற்றும் திறந்த கையுறையால் அடிப்பது உட்பட) கையின் வேறு எந்தப் பகுதியாலும் உதைப்பது அல்லது தலையில் அடிப்பது ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.