குமிழ்முனைப் பேனா
குமிழ்முனைப் பேனா (ballpoint pen) என்பது உள்ளக மை தாங்கியையும் கோள வடிவிலான குமிழ்முனையையும் கொண்ட எழுதுகோல் ஆகும். உள்ளகத் தாங்கிக் குழாய் எழுதுத் தன்மையான மையைக் கொண்டிருக்கும். குமிழ்முனை சுழலும்போது மை வெளியேறி எழுதும். குமிழ்முனைக் கோளம் பொதுவாக 0.5மிமீ முதல் 1.2 மிமீ வரையான விட்டத்தை கொண்டதாகவும், பித்தளை, உருக்கு, தங்குதன் காபைட்டு ஆகியவற்றால் ஆனதாகவும் இருக்கும்[1].
வரலாறு
பொருளாதார ரீதியிலும் பயன்பாட்டிலும் மேம்பட்ட குமிழ்முனைப் பேனாக்கள் 20ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பங்களால் தான் தோற்றம் பெற்றன. ஆரம்பகாலத்தில் குமிழ்முனைப் பேனாவில் வடிவமைப்பில் பலமுறை தோல்விகளைக் கண்டது. 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலியால் வடிவமைக்கப்பட்ட வடிவமைப்பே குமிழ்முனைப் பேனா எனும் கருத்தும் காணப்படுகின்றது. குமிழ்முனைப் பேனாவுக்கான முதலாவது காப்புரிமம் 1888 அக்டோபர் 30 ஆம் நாள் ஜோன் லோட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது[2],[3]. இவர் ஒரு தோல் தயாரிப்பாளர். இத்தோற்பொருட்களில் எழுதுவதற்கு ஊற்றுமைப் பேனாக்கள் பொருத்தமற்றவையாயிருந்ததால் இதனைப் பயன்படுத்தினார். லோட்டின் பேனாவில் உருக்கினாலான சிறிய சுழலும் கோளவுருக் குமிழ் அடைப்பான் ஒன்றின் மூலம் நிறுத்தப்பட்டிருந்தது.
1904 க்கும்1946க்கும் இடையில் பல மாற்று ஊற்றுமைப் பேனாக்கள் கண்டறியப்பட்டன.சிலாவொல்யுப் எடுவாட் பென்காலா 1907 ஆம் ஆண்டு திண்ம மை ஊற்றுமைப் பேனாவினை கண்டறிந்தார்.1910 இல் சேர்மனி கண்டுபிடிப்பாளர் பாவும்(Baum) மற்றொரு குமிழ்முனைப் பேனாவுக்கு சொத்துரிமை பெற்றார். 1916 இல் மற்றொரு குமிழ்முனைப் பேனா Van Vechten Riesburg இனால் கண்டறியப்பட்டது. இக்கண்டுப்புகளில் எல்லாம் ஒடுங்கிய குழாயின் முனையில் சிறு கோளம் இடப்பட்டு இருந்தது. இது உள்ளேயோ வெளியேயோ வழுக்கி விழுதல், சீரற்று எழுதுதல்,மைகசிதல் என பல பிரச்சினைகளைக் கொடுத்தது.[4]