சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி (ஆங்கில மொழி: Subramanian Swamy, பிறப்பு: செப்டம்பர் 15, 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணரும், புள்ளிவிபர நிபுணரும் ஆவார். அவர் ஏப்ரல் 26, 2016 அன்று முதல் மத்திய அரசின் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். அரசியலில் சேருவதற்கு முன்பு, டெல்லியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணித பொருளாதாரம் பாடத்தின் பேராசிரியராக இருந்தார்.[1] இவர் ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர். அக்கட்சி, 2014 இந்திய மக்களவைத்தேர்தலுக்கு முன்பாக 2013இல் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்டது.[2] இந்திய மக்களைவை மற்றும் மாநிலங்களவைகளின் உறுப்பினராகவும் 1991ல், இந்திய நடுவண் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்திய அரசின் திட்டக் குழுவில் அங்கம் வகித்துள்ளார். 1994 மற்றும் 1996 க்கு இடையில், முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்மராவின் கீழ் தொழிலாளர் தரநிலைகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமி | |
---|---|
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் | |
பதவியில் 1990–2013 | |
வணிக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 1990–1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
சட்ட, நீதித்துறை அமைச்சர் (மேலதிக) | |
பதவியில் 1990–1991 | |
பிரதமர் | சந்திரசேகர் |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1988–1994 | |
பதவியில் 1974–1976 | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
பதவியில் 1977–1979 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1939 மயிலாப்பூர், சென்னை மாகாணம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2013-இன்று) |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா கட்சி (1990-2013) |
துணைவர் | ரொக்சனா சுவாமி (தி. 1966) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | இந்துக் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் (கணிதம்) இந்தியப் புள்ளியியல் கழகம் (முதுகலை, புள்ளியியல்) ஹார்வர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
தொழில் | பொருளாதார நிபுணர் பேராசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி |
இணையத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
இந்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பாக குறிப்பாக சீனா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக எழுதியுள்ளார்.
தனி வாழ்க்கை
இவர் செப்டம்பர் 15, 1939 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையின் மைலாப்பூர் பகுதியில் பிறந்தார். இவரின் பூர்வீகம் மதுரை ஆகும்.[3][4] இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உள்ளனர்.[5] இவரது தந்தை சீதாராம சுப்பிரமணியன் இந்திய புள்ளிவிவரத் துறையில் அதிகாரியாக இருந்தார், அவர் டெல்லியில் உள்ள மத்திய புள்ளிவிவர நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார், மேலும் இந்திய அரசின் புள்ளிவிவர ஆலோசகராகவும் இருந்தார். சுவாமி ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் தில்லிக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தையின் வேலை மற்றும் குடும்பத்தின் தமிழ் வேர்கள் காரணமாக, கே. காமராஜ், சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் எஸ். சத்தியமூர்த்தி போன்ற முக்கிய தேசிய தலைவர்கள் அடிக்கடி இவர்கள் குடும்பத்திற்கு வருகை தந்தனர்.[6][7][8]
கல்வி
இவர் தில்லி பல்கலைக் கழகத்தின் இந்துக் கல்லூரியில் இளங்கலை கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தாவின் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் ( Indian Statistical Institute) புள்ளிவிவரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஹென்றிக் எஸ். ஹெளதாக்கர் (Hendrik S. Houthakker) பரிந்துரையின் பேரில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார்.[9] அங்கு அவருக்கு ராக்பெல்லர் நிறுவனத்தின் முழு உதவித்தொகை கிடைத்தது. 1965 ஆம் ஆண்டில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வருவாய் பகிர்மானம் (Economic Growth and Income Distribution in a Developing Nation) எனம் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.[10] இவரது ஆராய்ச்சி ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற சைமன் குஸ்நெட்ஸ் இருந்தார்.[7][11] அவர் ஹார்வர்டில் முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது, மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்திலும் மாணவராகப் பயின்றார்.[12] பின்னர் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் உதவி பொருளாதார விவகார அதிகாரியாக 1963 இல் பணியாற்றினார். மேலும் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் லோவெல் ஹவுஸில் (Lowell House) ஆசிரியராகப் பணியாற்றினார்.[13]
குடும்ப வாழ்க்கை
1966ஆம் ஆண்டு ரோக்சனா என்பரை திருமணம் புரிந்தார்.[14] கணிதத்தில் முனைவர் பெற்ற ரோக்சனா தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார்.[15][16] இவருக்கு கீதாஞ்சலி சுவாமி, சுகாசினி ஹைதர் என்று இரு மகள்கள் உள்ளனர். கீதாஞ்சலி அமெரிக்காவில் எம்.ஐ.டி. யில் பேராசியராக உள்ள சஞ்சய் சர்மா என்பவரை திருமணம் செய்து உள்ளார். சுகாசினி ஹைதர் இந்து நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார்.[17] இவர் 1997இல் வெளியுறவுச் செயலாளராக இருந்த சல்மான் ஹைதர் என்பவரின் மகன் நதீம் ஹைதரை திருமணம் செய்துள்ளார்.[18][19][20]
பணிகள்
1965 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தவுடன் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.[1][7] பின்னர் 1969 ஆம் ஆண்டில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[21] அமர்த்தியா சென் சுவாமியை தில்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்ஸில் சீனா தொடர்பாக பணிபுரிய வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.[22] அவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவாமி இந்தியா வந்ததும் அப்பணி அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் தில்லி இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதப் பொருளாதாரப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1][23] அங்கிருந்து அந்நிறுவனத்தின் நிருவாக ஆளுநர்களால் நீக்கப்பட்டபோதும் நீதி மன்றத்தினால் மீண்டும் அப்பணியில் அமர்த்தப்பட்டார். மேலும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[24] 1991 ஆம் ஆண்டு அமைச்சராவது வரை அப்பதவியில் தொடர்ந்தார். தில்லி ஐ.ஐ.சி யின் ஆளுநர்களில் ஒருவராகவும் கொச்சி எஸ்.சி.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் ஆளுநர்களில் ஒருவராகவும் இருந்தார்.[25][26][27] இந்தியாவிலுள்ள டிஎன்ஏ என்ற இதழுக்கு முசுலிம்கள் பற்றி எழுதிய சர்ச்சைக்குரிய கருத்தால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கோடை கால பொருளாதார வகுப்பு எடுப்பதில் இருந்து நீக்கப்பட்டார்.[28]
அரசியல் வாழ்க்கை
தொடக்ககால அரசியல்
ஜனதா கட்சிக்கு தலைவர்களை உருவாக்கும் சர்வோதாயா இயக்கத்தில் சுவாமி ஈடுபாட்டுடன் இருந்தார்.[29] இவரது பொருளாதாரக் கொள்கைகளால் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட பிணக்கிற்குப் பின்னர் தில்லி ஐ.ஐ.டி யிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாரதீய ஜன சங்கத்தின் மூலம் மேலவை உறுப்பினரானார்.[22]நாடாளுமற்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக 1974 முதல் 1999 வரை ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22] வடக்கு மும்பை மற்றும் மதுரை தொகுதிகளில் வென்று மக்களவை உறுப்பினரானார். உத்திரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களைவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவசர நிலைப் பிரகடனத்தின் போது இவர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இவர் அமெரிக்காவிற்குச் சென்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கெடுப்பதற்கு இந்தியா வந்தார். கூட்டத்தொடர் முடிவடைந்ததும் மீண்டும் அமெரிக்க சென்றார். அவரின் இச்செயல் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே மிகுந்த கவனத்தினைப் பெற்றது.[30][31] இவர் ஜனதா கட்சியின் நீண்டகால உறுப்பினராவார். 2013 ஆம் ஆண்டில் ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது.[32][33]
நாடாளுமன்ற வரலாறு
- 1974–76 - உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜன சங்கம் மூலம் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1977–80 - வடகிழக்கு மும்பையிலிருந்து மாநிலங்களைவை உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1980–84 - வடகிழக்கு மும்பையிலிருந்து மாநிலங்களைவை உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1988–94 - உத்திரப் பிரதேசத்திலிருந்து ஜனதா கட்சி மூலம் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1998–99 - மதுரையிலிருந்து மாநிலங்களைவை உறுப்பினராக ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2016 - மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வர்த்தக மற்றும் சட்ட அமைச்சர்
நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகம் மற்றும் சட்ட அமைச்சர் பொறுப்புகளை சுவாமி வகித்தார். மேலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் தொழிலாளர் மேம்பாடு ஆகிய துறைகளின் தலைவராகவும் இருந்தார்.[34][35]
சட்ட நடவடிக்கைகள்
சட்டப்பிரிவு 499 மற்றும் 500
2014 அக்டோபர் மாதம் இந்திய சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவை ஜனநாயகத்திற்கு விரோதமானவை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். இப்பிரிவுகள் குற்றவாளிகள் அவதூறு தொடர்புடையவையாகும்.[36]
ஜெயலலிதா வழக்கு
1996 ஆம் ஆண்டில் சுவாமி ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் தண்டனை வழங்கியது.[37] கர்நாடக நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாலும்,[38][39] மேல்முறையீட்டின்[40] மூலம் உச்ச நீதி மன்றத்தால் 2017 ஆம் ஆண்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.[41] இதற்கிடையே ஜெயலலிதா உடல் நலக் குறைபாட்டால் அவதியுற்றபோது அவர் விரைவில் குணம்பெற விரும்புவதாகவும், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறுமாறும் சுவாமி கேட்டுக் கொண்டார்.[42]
தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு
1988 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஹெக்டெ ஆட்சியில் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சுவாமி தெரிவித்திருந்தார்.[43] ஹெக்டே தனது பதவியை ராஜிநாமா[44] செய்த பின்னர் வழக்கு தொடரப்பட்டது.[45][46][47]
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கு
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு உள்ளதாகவும் எனவே தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா மீது நீதிமன்ற வழக்குத் தொடர அனுமதி வேண்டுமெனெ சுவாமி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.[48] மன்மோகன்சிங்கிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காததால்[49] உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர சுவாமி முடிவு செய்தார்.[50] இவ்வழக்கு தொடர்பாக சோனியாகாந்தி மீதும் வழக்கு தொடர அனுமதி வேண்டி 15 ஏப்ரல் 2011 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.[51] மேலும் 15 ஜனவரி 2008 அன்று சிதம்பரம் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவர்மீது வழக்கு தொடர்வதற்கான ஆவணங்களையும் நீதி மன்றத்தில் சமர்ப்பித்தார்.[52] ஆ. ராசா மற்றும் சிதம்பரம் இடையே நடைபெற்ற கூட்டங்களின் நிகழ்ச்சிக் குறிப்புகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 31 ஜனவரி 2012 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் இரண்டாம் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சுவாமி அளித்திருந்த ஆவணங்களை ஏற்றுக் கொண்டு எந்த ஒரு பொது அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு அனுமதி வேண்டினால் அதற்கு நான்கு மாதங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அல்லாதபட்சத்தில் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி. ஏ.கே. கங்குலி தீர்ப்பு வழங்கினார்.[53][54] இதன் அடிப்படையில் ஆ. ராசா கைது செய்யப்பட்டார்.[55]
இணைச் செயலாளர்கள் மீதான உ ஊழல் வழக்கு
சுவாமி 1997 ஆம் ஆண்டில் இணைச் செயலாளர்கள் மீது ஊழல் வழக்குகளைப் பதிவு செய்ய மத்தியப் புலனாய்வு அமைப்பு அரசின் அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.[56][57]
மின்னணு வாக்கு இயந்திரங்கள்
மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த சுதந்திரமான அமைப்பு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சுவாமி தில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வாக்காளர்களுக்கு அச்சிடப்பட்ட ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரினார்.[58][59] காகித வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர அல்லது அச்சிடப்பட்ட ரசீதுகளைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவும் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய வாக்காளர்கள் அதிக அளவு காரணமாக காகிதத்தைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் வாதிட்டது. நீதிமன்றம் மேலும் தேர்தல் ஆணையத்திடம் "உடனடியாக ஒரு பரந்த ஆலோசனையைத் தொடங்க வேண்டும்" என்றும் பாராளுமன்றம் "இந்தக் கேள்வியை ஆழமாகச் சென்று முடிவு செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது.[60][61] 22 ஜனவரி 2013 அன்று தேர்தல் ஆணையம் சுவாமியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) முறையை அமுல்படுத்தியது.[62][63][64][65][66]
நேஷனல் ஹெரால்டு வழக்கு
23 நவம்பர் 2010 அன்று தொடங்கப்பட்ட யங் இந்தியன் எனும் நிறுவனம் மூலமாக[67] அஸேஸியேட்டர் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (AJPL) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியதாக 1 நம்பர் 2012 அன்று சுவாமி ஏமாற்றுதல் மற்றும் நில அபகரிப்பு ஆகிய பிரிவுகளில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்தார்.[68] மேலும் இதன் மூலம் 2,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும்[69] இவ்விவரங்களை ராகுல்காந்தி தனது வேட்பாளர் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் சுவாமி குற்றம் சாட்டினார்.[70][71] மேலும் 26 பிப்ரவரி 2011 அன்று அஸேஸியேட்டர் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ( (AJPL) நிறுவனம் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 900 மில்லியன் இந்திய ரூபாய்களை (13 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வட்டி இல்லா கடனாக வழங்கியதாகவும் தெரிவித்தார்.[72][73] இது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டார்.[74] 17 நவம்பர் 2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.[75][76]
ஹாசிம்புரா இனப்படுகொலை
1987 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இளைஞர்கள் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் போது கொல்லப்பட்டதிற்கு விசாரணை வேண்டும் என தில்லி ஜந்தர் மந்தரில் சுவாமி ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தார்.[77] பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.[78]
சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கு
தமிழக அரசு சிதம்பரம் நடராசர் கோயில் நிருவாகத்தினை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து தீட்ஷிதர்களுடன் இணைந்து சுவாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.[79] இதன் அடிப்படையில் கோவில் நிர்வாகத்தினை தமிழக இந்து அறநிலையத்துறை தீட்ஷிதர்களுக்கு கையளிக்கும்படி உத்தரவிட்டது.[80]
கேரள கோவில்கள் வழக்கு
கேரள அரசு அம்மாநில கோவில்களை நிர்வகிக்கும் தேவசம் துறையினை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என சுவாமி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.[81]
இராமர் கோவில் வழக்கு
22 பிப்ரவரி 2016 அன்று உச்ச நீதிமன்றத்தில், சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோவில் கட்டுவதற்காக அலஹாபாத் வழங்கிய தீர்ப்பினை விரைவுபடுத்துமாறு வழக்கு தாக்கல் செய்தார்.[82][83] 26 பிப்ரவரி 2016 அன்று அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.[84]
கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம்
14 அக்டோபர் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக் குழுவை (ACACI) நிறுவினார். அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதே இக்குழுவின் குறிக்கோள் ஆகும்.[85][86][87]
விருதுகள்
- தில்லி பல்கலைக்கழகம் 2012 ஆம் ஆண்டில் "புகழ் பெற்ற முன்னாள் மாணவர்" எனும் விருதினை வழங்கியது.
- 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் "தமிழ் ரத்னா" எனும் விருதினை வழங்கியது.[88]
புத்தகங்கள்
சுவாமி பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவர் எழுதிய ஆங்கிலப் புத்தகங்கள்:
- Hindutva and National Renaissance (Publisher: Har Anand Publication; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1527-5)
- Virat Hindu Identity - Concept and its Power (Publisher: Har Anand Publication; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1770-5)
- Economic Growth in China and India, 1952–70 (Publisher: University of Chicago Press; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-78315-4)
- Indian economic planning: An alternative approach (Publisher: Barnes & Noble / Vikas publications ; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-389-04202-0)
- Building a New India: An Agenda for National Renaissance (Publisher: UBS PUBLISHERS' AND DISTRIBUTORS LTD; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85674-21-6)
- India's Labour Standards and the WTO Framework (Publisher: Konark Publishers; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-220-0585-1)
- India's economic performance and reforms: A perspective for the new millennium (Publisher: Konark Publishers; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-220-0594-3)
- Assassination of Rajiv Gandhi: Unanswered Questions and Unasked Queries (Publisher: Konark Publishers; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-220-0591-2)
- India's China perspective (Publisher: Konark Publishers; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-220-0606-3)
- Financial Architecture and Economic Development in China and India (Publisher: Konark Publishers; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-220-0718-3)
- Trade and Industry in Japan: A Guide to Indian Entrepreneurs and Businessmen (Publisher: Prentice-Hall of India; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-0785-8)
- Sri Lanka in Crisis: India's Options (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1260-1)
- Kailas and Manasarovar after 22 years in Shiva's domain (Publisher: Allied Publishers)
- Hindus Under Siege (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1207-6)
- Rama Setu: Symbol of National Unity (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1418-6)
- Terrorism in India: A Strategy of Deterrence for India's National Security (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1344-8)
- Corruption and Corporate Governance in India: Satyam, Spectrum & Sundaram (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1486-5)
- 2G Spectrum Scam (Publisher: Har Anand Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1638-8)
- Economic Development and Reforms in India and China (2010)(Publisher: Haranand Publications (2010); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-1535-0)
- Electronic Voting Machines: Unconstitutional and Tamperable (Publisher: Vision Books; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7094-798-1)
- Predictions and Meditations (Publisher: India International Centre Quarterly 36, no. 3/4 (2009): 202-22. https://www.jstor.org/stable/23006413.
- The Ideology of India’s Modern Right (Publisher: Har Anand Publication; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8124118924)
- RESET: Regaining India’s Economic Legacy (Publisher: Rupa Publications; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5333-651-6) RESET was top selling new eBook of 2019.[89]
ஆராய்ச்சி அறிக்கைகள்
- Economic growth and income distribution in a developing nation (Publisher: Harvard University, 1965)
- Nuclear policy for India (Publisher: Bharatiya Jana Sangh Publication, 1968)
- Plan for full employment (Publisher: Bharatiya Jana Sangh, 1970)
- Theoretical aspects of index numbers (Publisher: Harvard Institute of Economic Research, 1985)
- Land reforms: an economist's approach (Publisher: Deendayal Research Institute)
- Samuelson, P., & Swamy, S. (1974). Invariant Economic Index Numbers and Canonical Duality: Survey and Synthesis. The American Economic Review, 64(4), 566-593. https://www.jstor.org/stable/1813311
- Swamy, Subramanian. "On Samuelson's Conjecture." Indian Economic Review, New Series, 5, no. 2 (1970): 169-75. https://www.jstor.org/stable/23294448
- Swamy, S. (1965). Consistency of Fisher's Tests. Econometrica, 33(3), 619-623. doi:1. https://www.jstor.org/stable/1911757 doi:1
- Swamy, S. (1963). Notes on Fractile Graphical Analysis. Econometrica, 31(3), 551-554. doi:1. https://www.jstor.org/stable/1909994 doi:1
- Swamy, S. (1969). Optimal Allocation of Investment in A Two-sector Model with Foreign Aid. Indian Economic Review, 4(1), new series, 35-44. https://www.jstor.org/stable/23294380
- Swamy, S. (1969). Systems Analysis of Strategic Defence Needs: A Sequel. Economic and Political Weekly, 4(18), 772-772. https://www.jstor.org/stable/40739578