செங்கண் மரத்தவளை
செங்கண் மரத்தவளை (Agalychnis callidryas) என்பது மெக்சிக்கோ தொடங்கி நடு அமெரிக்கா, கொலம்பியா வரை பரவியுள்ள மழைக்காடுகளைச் சேர்ந்த ஒரு மரம் வாழ் தவளையாகும். இது ஐலிடு குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயரான அ. கால்லிதிரையாசு என்பது அழகு எனப் பொருள் தரும் கால்லி என்னும் கிரேக்கச் சொல்லும் மரத்தில் வாழும் இளம்பெண் எனப்பொருள் தரும் திரையாடு என்னும் சொல்லும் சேர்ந்து வந்தது.[4]
செங்கண் மரத்தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன |
வரிசை: | தவளை |
இனம்: | A. callidryas |
இருசொற் பெயரீடு | |
Agalychnis callidryas (Cope, 1862) | |
பரவல்[2] | |
பரவல் - பெரிதுபடுத்தப்பட்ட வரைபடத்தில்[2][3] | |
வேறு பெயர்கள் | |
|
தோற்றக்குறிப்பு
இந்த இனத் தவளைகளின் கண் சிவப்பாகவும் கண்மணியானது நெடுக்குவாட்டில் குறுகலாகவும் இருக்கும். எடுப்பான பச்சைநிறத்தில் இருக்கும் இத்தவளையின் உடலில் மஞ்சளும் நீலமும் சேர்ந்திருக்கும். மேலும் பக்கவாட்டில் கோடுகள் கொண்டது. தப்பை போன்ற சவ்வுள்ள இதன் கால்கள் சிவப்பாகவோ இளஞ்சிவப்பாகவோ இருக்கும். இதன் தோல் வயிற்றுப் புறம் மென்மையாகவும் முதகுப்புறம் மொத்தமாகவும் கடினமாகவும் இருக்கும். இலைகளில் பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக இதன் கால்கள் தகவமைக்கப்பட்டுள்ளன.[5]
வாழும் சூழலும் பரவலும்
இத்தவளைகள் மழைக்காடுகளில் உள்ள ஆறுகள், குளங்களுக்கு அருகில் வசிக்கின்றன. மேலும் அட்லாண்டிக்குச் சரிவில் உள்ள மெக்ச்சிக்கோ, பனாமாவின் நடுப்பகுதி, வடக்கு கொலம்பியா நாடுகளின் ஈரப்பதமான தாழ்நிலங்களிலும் வசிக்கின்றன. பசிபிக் சரிவிலும் இவை நிகராகுவா, பனாமாப் பகுதிகளில் உள்ளன.[6] பகலில் 75–85 °F (24–29 °C) வெப்பநிலையும் இரவில் 66–77 °F (19–25 °C) வெப்பநிலையும் இவை வாழ்வதற்கு உகந்த தட்பவெப்பநிலை ஆகும்.
பண்புகள்
இவ்வினத் தவளைகள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை மரங்களிலேயே கழிக்கின்றன. மேலும் இவை சிறப்பாகத் தாவக் கூடியன. இவை நச்சுத்தன்மை இல்லாத தவளைகள். தங்களைக் காத்துக் கொள்ள உருமறைப்பையே (camouflage) பெரிதும் சார்ந்துள்ளன. பகலில் இவை தங்கள் உடலின் பக்கவாட்டை பின்னங்கால்களைக் கொண்டு மறைத்துக் கொள்ளும். சிவந்த கால்களை வயிற்றுக்கடியிலும் செந்நிறத்தில் உள்ள கண்களை மூடிக்கொண்டும் அசைவற்றும் இருக்கும். இதனால் இது முழுவதும் பச்சை நிறத்தில் சுற்றுப் புறத்தில் உள்ள இழைதழைகளைப் போலவே இருக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் இதன் பெரிய சிவப்புக் கண்கள் தற்காப்புக்காக தகவமைத்துக் கொண்ட உறுப்பாகும். எதிரி அல்லது கொன்றுண்ணியானது இதனை நெருங்கி வருகையில் இது கண்களைச் சட்டெனத் திறக்கும். இதனைக் கொல்ல வந்த விலங்கு இதனால் திகைத்து நிற்கையில் தவளை தப்பியோட நேரம் கிடைக்கிறது.[5]
இரை
இவ்வினத் தவளைகள் பூச்சியுண்ணிகளாகும். கிரிக்கெட் பூச்சி, அந்துப்பூச்சி, வெட்டுக்கிளி, ஈ ஆகியவற்றையும் வேறு பல பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.[7]
இனப்பெருக்கம்
இவ்வினத் தவளைகளில் ஆண் தவளையின் உடலளவு இணையைத் தேர்ந்தெடுத்தலில் ஒரு காரணியாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண் தவளைகள் தாங்கள் அமர்ந்திருக்கும் செடிகளை அசைத்து அதிரச்செய்வதன் மூலம் பெண் தவளைகளை ஈர்க்கின்றன. மேலும் மரம் வாழ் விலங்குகளில் அதிர்வு ஒரு தகவல் பரிமாற்ற முறையாக இருப்பது இத்தவளை இனத்தில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது.[8] இணை சேர்ந்த பின் பெண் தவளையானது நீரின் மேல் உள்ள இலைகளில் ஏறத்தாழ 40 முட்டைகளை இடுகிறது. முட்டைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்க பசை போன்ற ஒரு திரவமும் சுரக்கிறது. இது முட்டைகள் நீரினை இழக்காமல் இருக்க உதவாமல் இருக்க உதவுகிறது.[9]
முட்டையானது ஆறேழு நாட்களுக்குப் பிறகு பொறிந்து தலைப்பிரட்டைகள் வருகின்றன. இவை கீழுள்ள நீரில் விழுந்து வளர்கின்றன.[10] இந்தத் தலைப்பிரட்டைகள் முழுத்தவளையாக வளர மூன்று வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகின்றது. தலைப்பிரட்டையின் நிறம் பச்சையில் இருந்து பழுப்பாக மாறுகிறது. கண் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பாக மாறுகிறது. இந்த நிற மாற்றங்கள் தவளையின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன. செங்கண் மரத்தவளையின் வாழ்நாள் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள்.[11]